விநாயக சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் முக்கியமான விழாக்களில் ஒன்று. வருடந்தோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாளில் இந்த விழாவானது வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்நாளில் பக்தர்கள் பல விரதங்களை மேற்கொண்டு சதுர்த்தியை அனுஷ்டிக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள விநாயகர் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்நாளில் விசித்திரமான ஓர் விநாயர் தலத்திற்கு பயணிக்கலாம் வாங்க.
எங்கே உள்ளது ?
பாண்டிச்சேரிக்கு பெருமை சேர்க்கும் ஆன்மீகத் தலங்களில் முதன்மையானது அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோவில். பாண்டிச்சேரியின் வரலாறு துவங்கும் காலம் தொட்டே இத்திருத்தலத்தின் வரலாறும் தொடர்கிறது. குளக்கரை, மரத்தடி, தெருமுனை என எங்கும் காணக்கூடிய விநாயகர் இத்தலத்தில் வீற்றிருக்கும் மாறுபட்ட மற்றும் விசித்திரமான அம்சமே பலரை இதனை நோக்கி ஈர்க்கிறது.
மணக்குள விநாயகர்
கடலுக்கு மிக அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்றாகி விட்டது.கோவிலுக்குள் ஒரு சின்ன குளம்காண படுகிறது. இந்த இடம் சற்று இருள் சூழ்ந்து காணப்படுவதால் சூடன் ஒளியில் இந்த கிணற்றை பூசாரி பக்தர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.தனி விநாயக ஆலயங்களில் மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் பிரசத்தி பெற்றது.
தல வரலாறு
இத்தலம் பல நூற்றாண்டுமிக்க வரலாற்றை தன்னுள் கொண்டுள்ளது. பாண்டிச்சேரி மாநிலம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு ஆதிக்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தலத்து விநாயகரை பல முறை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அகற்ற முற்பட்டனர். ஆனால், மீண்டும் மீண்டும் அங்கேயே தோன்றிய விநாயகரால் பலர் அதிர்ச்சிக்குள்ளாகி சிலையை அகற்றும் பணியை கைவிட்டனர். தொடர்ந்து இத்தல விநாயகருக்கு திருவிழா நடத்த பிரெஞ்சு அரசு மறுத்து வந்த நிலையில் பிரெஞ்சுத் துரை டூப்லே விநாயக பக்தராக மாறி விழாவை தொடக்கி வைத்தார்.
சித்தர் தலம்
இக்கோவிலுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழ்ந்து வந்த 30-க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லைக்காது என்னும் சித்தர் மணக்குள விநாயகரால் ஈர்க்கப்பட்டு விநாயகர் சன்னதிக்குச் சென்று அவரை தினமும் தரிசித்து வந்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே சித்தரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும், யாரது கண்ணிலும் தென்படாமல் சித்தர் விநாயகரை தரிக்கதாக கூறப்படுகிறது.
நட்சத்திரங்களின் சங்கமம்
மணக்கோள விநாயகர் கோவில் வளாக சுற்றுச் சுவர்களில் பலவிதமான விநாயகரின் சுதை ஓவியங்களும், 27 நட்சத்திர அதிபதிகளின் ஓவியங்களும் காணப்படுவது வியப்பளிக்கிறது. மேலும், முருகனின் அறுபடை வீடுகள், பல கண்கவர் ஓவியங்கள் என ஒரு கொலு மண்டபமாகவே இத்தலம் திகழ்கிறது.
தங்க ரதமும், முண்டாசு பாரதியும்
இக்கோவிலின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், கோவிலில் பிரம்மாண்டமாக தங்கரதம் மற்றும் வெள்ளி ரதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் கோபுரம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த முண்டாசுக் கவிஞர் பாரதி, இந்த விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் சிறப்பு
தென்னிந்தியா மட்டுமின்றி வேறெங்குமே காணக்கிடைக்காத பல சிறப்புகளை இத்தலம் கொண்டுள்ளது என்றால் மிகையல்ல. இத்தலத்தின் பள்ளியறையில் அவரது தாயார் சக்தி தேவியாருடன் உள்ளார் விநாயகர். தினமும் நெய்வேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்கிறார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.
கிணற்றின் மீது விநாயகர்
மணக்குளத்து விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் நீர்நிலைகள் அமைந்துள்ள ஒரு கிணறு ஆகும். பீடத்தின் ,டப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.
வழிபாடுகள்
திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். குறிப்பாக, விநாயகர் இந்து மதக் கடவுளாக இருந்தாலும், சுற்றுவட்டார, வெளிநாட்டு கிருத்துவ, முஸ்லிம் பயணிகள் கூட அதிகளவில் இங்கே வருவது வழக்கம்.
அமெரிக்க வைரம்
இக்கோவிலுக்கு அதிகப்படியான வெளிநாட்டுப் பயணிகள் விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கு உதாரணம், அமெரிக்க வைரத்தால் ஆன கவசம் இங்கே காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விநாயகருக்கு கல்யாண உற்சவம் செய்து வெள்ளித்தேர் இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
நாட்டிலேயே இங்கு மட்டும்தான்!
நம் இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன கோபுரம் உள்ளது என்றால் அது இத்தலத்தில் மட்டும் தான். மேலும், விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.
எப்படிச் செல்வது ?
பாண்டிச்சேரி மாநிலம் ஒய்ட் டவுன் பகுதியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் ஆலயம். பாண்டிச்சேரி விமான நிலையத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். ஒய்ட் டவுன் பகுதிக்குச் செல்ல பேருந்து வசதிகளும், விமான நிலையத்தில் இருந்தே பல வாடகைக் கார் வசதிகளும் ஏராளமாக உள்ளது.