ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள மண்டி அல்லது மலைகளின் வாரணாசி என்றழைக்கப்படும் இந்நகரம் தன் பெயரிலேயே அழைக்கப்படும் பிரசித்தமான மாவட்டமாகவும் அறியப்படுகிறது. பியாஸ் ஆற்றின் கரையிலுள்ள வரலாற்று நகரமான மண்டி முற்காலத்தில் மண்டவ முனிவரின் பெயரால் மண்டவ் நகர் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. புராதனமான கற்கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ள இந்த ஸ்தலத்தில் சிவன் மற்றும் காளிதேவிக்காக அமைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளன.
பாஞ்சவக்தர கோயில், அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் திரிலோக்நாத் கோயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. 1520ல் கட்டப்பட்ட பூதநாதர் கோயில் மண்டி பகுதியில் மிகப்பழமையான கோயிலாக அறியப்படுகிறது. கோவிந்த் சிங் குருத்வாராவும் ஒவ்வொரு வருடமும் அதிகமான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இவை மட்டுமல்லாம்ல் 11500 அடி உயரத்திலுள்ள ஷிகாரி பீக் எனப்படும் சிகரம் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. ஷிகாரி தேவி சிகரம் என அழைக்கப்படும் இந்த சிகரத்தி உச்சியில் ஷிகாரி கோயில் வீற்றிருக்கிறது.
மண்டி நகரத்தின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சங்கன் கார்டன், மாவட்ட நூலக கட்டிடம், விஜய் கேசரி பாலம் , பண்டோஹ் ஏரி, சுந்தர்நகர், பிரஷார் ஏரி, ஜஞ்செலி, ராணி அம்ரித் கௌர் பார்க், பீர் மடாலயம் மற்றும் நர்கு காட்டுயிர் சரணாலயம் போன்றவை அமைந்துள்ளன. ஷிகாரி தேவி சரணாலயமும் மண்டி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் ஸ்தலமாக உள்ளது. இங்கு கோரல் மான், ஹிமாலயன் மோனால் பறவை, கருங்கரடி, குரைக்கும் மான், கஸ்தூரி மான், ஹிமாலய கருங்கரடி, பூனை, சிறுத்தை மற்றும் ஹிமாலயன் புனுகுப்பூனை போன்றவை வசிக்கின்றன. மண்டி சுற்றுலாத்தலத்துக்கு விமான மார்க்கம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக பயணிகள் சென்றடையலாம். மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மண்டிக்கு விஜயம் செய்யுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.