உலகிலேயே மிகப்பழமையான கோல்ஃப் மைதானங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நால்தேஹ்ரா கோல்ஃப் கோர்ஸ் 1920ம் ஆண்டில் இந்திய வைசிராய் கர்சன் பிரபுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நால்தேஹ்ரா பிரதேசத்தின் இயற்கை வனப்பில் பெரிது கவரப்பட்டிருந்த அவர் அடிக்கடி இந்த ஸ்தலத்திற்கு வந்து ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோல்ஃப் மைதானம் தற்போது ஹிமாச்சல் சுற்றுலாத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
18 குழிகள் கொண்ட கோல்ஃப் மைதானத்தை கொண்ட இது இந்திய மலைப்பகுதிகளில் உள்ள மிகச்சிறந்த கோல்ஃப் கிளப்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.
மேலும் இது நாட்டின் பிற பகுதியில் உள்ள முக்கியமான கோல்ஃப் கிளப்களான சிம்லா ARTRAC கோல்ஃப் கிளப், டெல்லி BSF கோல்ஃப் கிளப், சண்டிகர் கோல்ஃப் கிளப் மற்றும் டெல்லி ஏர் ஃபோர்ஸ் கோல்ஃப் கிளப் ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பருவநிலையை பொறுத்து ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இந்த கோல்ஃப் கிளப் திறக்கப்படுகிறது.
குதிரைச்சவாரி
ஹார்ஸ் ரைடிங் எனப்படும் குதிரைச்சவாரி பொழுதுபோக்கு நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்தில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. தேவதாரு மரங்கள் அடர்ந்த வனப்பகுதியால் சுழப்பட்டிருப்பதால் குதிரைச்சவாரி செய்தபடி நால்தேஹ்ராவின் இயற்கை அழகை ரசிப்பது பயணிகளுக்கு மிகவும் உவகையூட்டும் அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குதிரைச்சவாரிக்கு ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் என்பதாக கட்டணம் இருக்கக்கூடும்.
மூட்டு வலி நீக்கும் தட்டபாணி
நால்தேஹ்ராவிலிருந்து 58 கி.மீ தூரத்தில் உள்ள தட்டபாணி இப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 655 மீ உயரத்தில் உள்ள இந்த இடம் கந்தக வெந்நீர் ஊற்றுகளுக்கு பெயர் பெற்றுள்ளது. இந்த ஊற்றுகளில் குளித்தால் சோர்வு, மூட்டுவலி மற்றும் தோல் நோய்கள் குணமாகும் என்பதாக நம்பிக்கை நிலவுகிறது. சட்லெஜ் ஆற்றின் கரையில் 1 ச.கி.மீ பரப்பில் இந்த ஊற்றுகள் காணப்படுகின்றன. இந்த இடத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் சட்லெஜ் ஆற்றில் படகுச்சவாரியிலும் ஈடுபடலாம். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஏராளமான மக்கள் இங்கு விஜயம் செய்கின்றனர். ஒரு வித்தியாசமான அம்சமாக இந்த ஊற்றுகள் ஒவ்வொரு வருடமும் ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் மறைந்துவிட்டு திரும்பவும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றுகின்றன.