நார்த்தாமலை புதுக்கோட்டையில் இருந்த திருச்சி செல்லும் சாலையில் உள்ளது. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை, பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலைக் குன்றுகள் இங்கு உள்ளன. ராம- ராவண, இலங்கைப் போரில் மாண்டுபோன வீரர்களை உயிர்ப்பிக்க வைக்க வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்தபொழுது அதிலிருந்து சிதறிய துகள்கள் இங்கு விழுந்து இந்தக் குன்றுகள் உண்டாயின என்பது புராணம். ஒரு முறை நாரதர் கூட இங்கே தங்கியிருந்ததால் நாரதர் மலை என பெயர் பெற்று பின்னாளில் நார்த்தாமலை என மறுவியுள்ளது. இன்னும் பல மர்மங்களையும், வரலாற்றுத் தகவல்களும் புதைந்து கிடக்கும் இம்மலையை நோக்கி பயணிக்கலாம் வாங்க.
நார்த்தாமலை
கி.பி. 7 இருந்து 9 ம் நூற்றாண்டு வரை நார்த்தாமலை பாண்டியர் மற்றும் பல்லவர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. இவர்களது மேலாண்மைக்குட்பட்டு முத்தரையர் என்னும் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆட்சிசெய்து வந்தார். நார்த்தாமலை மேலமலையிலுள்ள பழியிலி ஈச்சுரம் குகைக்கோவில் மூன்றாம் நந்திவர்ம பல்லவமன்னன் ஆட்சிக்காலத்தில் விடேல் விடகு முத்தரையனின் மகன் சாத்தன் பழியிலி என்னும் முத்தரைய குல குறுநில மன்னனால் கட்டப்பட்டது.
Narayanaperumal
தெலுங்கு குலகாலபுரம்
நிருபதுங்கவர்மனின் 9 ம் ஆதியாண்டு (கி.பி. 847-875) கல்வெட்டு ஒன்று இங்கு உள்ளது. இப்பகுதியில் பின்பு பாண்டியர்களும், சோழர்களும் தங்களது ஆதிகத்தை நிலைநிறுத்திக் கொள்ள போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். கி.பி. 9 ம் நூற்றாண்டின் இறுதியில் விஜயாலய சோழன் தஞ்சாவூரில் சோழர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்திய போது இப்பகுதியும் அவரமு ஆட்சிக்குட்பட்டிருக்க வேண்டும். இங்குள்ள ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டில் இவ்வூர் தெலுங்கு குலகாலபுரம் என்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டில் குலோத்துங்க சோழபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது.
Narayanaperumal
காவல் அரண்கள்
கி.பி. 14-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலப் பகுதியில் மதுரையில் சுல்தானின் ஆட்சி ஏற்பட்டபோது இப்பகுதியும் அவர்களது ஆட்சியின் கீழ் சென்றது. பின், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், பல்லவராயர்கள், தொண்டைமான் மன்னர்கள் என பலரது கட்டுப்பாட்டின் கீழ் இது சென்றது. சுற்றுவட்டார பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னர்கள் இப்பகுதியின் பாதுகாப்பிற்கான இராணுவ தளங்களை இக்குன்றின் மேல்வைத்திருந்தனர். குன்றுகளின் மேல் காவல் அரண்கள் இருந்தற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்.
Varun Shiv Kapur
விஜயாலய சோழீச்சுரம்
விஜயாலய சோழீச்சுரம் கோயில் தமிழக கோயில் கட்டிடக்கலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவல் இதுபோன்ற கலைநயமிக்க கட்டிடக் கலையை வேறெங்கும் காண முடியாது. மேற்கு நோக்கியுள்ள விஜயாலய சோழீச்சுரம் 1240 சதுர அடிப்பரப்பில் முழுவதும் கற்களினால் அமைந்த கட்டுமானமாகும்.
Varun Shiv Kapur
அமைப்பு
கோவில் கருவறை வட்டமாக அமைந்துள்ளது. இது இந்து சாத்திர நூல்களில் உள்ள பிரணவ அல்லது ஓங்கார அமைப்பை சார்ந்ததாக உள்ளது. இதுபோன்ற அமைப்பு தனிச்சிறப்பானது. கருவறையைச் சுற்றிவர பிறைவடிவிலான சிறு சுற்று வழி உள்ளது. கருவறையின் உள்ளே லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.
Kasiarunachalam
சமணற்குடகு
இக்கோயிலுக்கு எதிரே சமணற்குடகு என்னும் திருமால் கோயிலுக்கு வடகிழக்கில் உள்ள பாறையில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டு உள்ளது. இவ்வூர் நகரத்தார் உடையார் விஜயாலய சோழீச்சுரம் உடைய நாயனார் கோயிலில் வைகாசி திருவிழா கொண்டாடுவதற்குக் கொடையளித்த செய்தி இதில் கூறப்படுகிறது. நார்த்தாமலை மேலமலையில் உள்ள குகைகோயில் இரண்டினுள் ஒன்று வைணவக் கோயிலாகவும் மற்றது பழியிலி ஈச்சுரம் என்னும் பெயருடனும் விளங்குகிறது.
Narayanaperumal
பழியிலி ஈச்சுரம்
விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்கு முன்புள்ள பாறையில் குடையபட்டுள்ள சிறிய குகைக்கோவில் தான் பழியிலி ஈச்சுரம். இங்கே சிவனுக்கு என ஒரே ஒரு சிறிய அறை மட்டும் உள்ளது. இந்த கோயிலுக்குரிய லிங்கமும், அழகிய தோற்றம் கொண்ட துவாரபாலகர் சிற்பங்களும், புதையுண்டு போக அவை கண்டுபிடிக்கப்பட்டு தற்போது குகையின் முன்புள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளன.
வைணவக் குகையாக மாற்றம்
ஆரம்ப காலத்தில் சமணக் குகையாக இருந்த இக்குகை, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் வைணவ குகையாக மாற்றப்படிருக்க வேண்டும். வைணவ கோயிலாக மாற்றிய பின்பு இத்தலத்தில் உள்ள திருமாளின் கோவிலாக மாற்றியிருக்க வேண்டும்.
Narayanaperumal
ஒத்தையில நிக்கும் தர்கா
மேல மலையிலுள்ள கோயில்களுக்குச் சற்று தெற்கே மலையில் கீழ்நோக்கி குடைவிக்கப்பட்டுள்ள ஒரு குகையில் முகமது மஸ்தான் என்னும் ஒரு முஸ்லீம் பெரியவரின் அடக்கத்தலம் உள்ளது. இங்கே மலைக்குன்றில் கீழ்நோக்கி குடைந்து குகை எடுக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். கோவில் திருவிழாவின் 1௦ ம் நாள் இரவு இந்த தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான முஸ்லீம் - இந்து மக்கள் மதபேதமின்றி அன்று தர்காவில் கூடி வழிபடுவது வழக்கம்.
Narayanaperumal
கடம்பர் கோவில்
கடம்பர் மலை அடிவாரத்தில் திருக்கடம்பர் உடைய நாயனார் கோயில் உள்ளது. கருவறையையும் அர்த்தமண்டபத்தையும் கொண்ட இக்கோவில் அமைப்பில் கண்ணனூர் பாலசுப்ரமணியர் கோயிலை ஒத்திருக்கிறது. இக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது. இவை அனைத்தும் ராஜராஜன் காலத்தை சேர்ந்ததாகும். மூன்றாம் குலோத்துங்கச்சோழன், மாறவர்மன், சுந்தரபாண்டியன், இரண்டாம் ராஜேந்திர சோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் இக்கோயிலுக்கு புதிய கட்டுமானங்கள் சேர்க்கபட்டதையும், புதுபிக்கபட்டதையும் அறிய முடிகிறது.
Kasiarunachalam
எப்படிச் செல்வது ?
நார்த்தாமலைக்கு புதுக்கோட்டையில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு திருச்சியில் இருந்து நார்த்தாமலைக்கு பேருந்தில் வருபவர்கள் பொம்மாடிமலையில் இறங்கி நார்த்தாமலைக்கு வரலாம்.
Piorajasekar