All Photos taken from
PC: Wiki
இடுக்கி பகுதியின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த பைனாவு ஆகும். இடுக்கி மாவட்டத்தின் தலைநகரமாகவும் அமைந்துள்ள இந்த நகரம் முக்கியமான வியாபாரக்கேந்திரமாக அறியப்படுகிறது. இடுக்கி அணை மற்றும் செறுதோணி அணை ஆகிய இரண்டு முக்கியமான அணைப்பகுதிகளும் இந்த இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்திலேயே உள்ளன. வாருங்கள் இந்த பகுதியில் இனிய உலா போகலாம்.

பைனாவு
இனிமையான சூழல் மற்றும் ரம்மியமான இயற்கை எழில் போன்றவற்றுக்கு இந்த பைனாவு பிரசித்தி பெற்றுள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு நகரம் இயற்கையோடு இயைந்த பசுமைப்பின்னணியோடு காட்சியளிக்கிறது. இங்குள்ள காடுகளில் மலையேற்றப் பயணத்தில் ஈடுபட வெகுதூரங்களிலிருந்தும் சாகசப்பயணிகள் வருகை தருகின்றனர். மழைக்காலம் முடிந்தபின்னர் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்நகருக்கு விஜயம் செய்வது சிறந்தது.

குறிஞ்சிமலா சரணாலயம்
குறிஞ்சிமலா சரணாலயம் பலவிதமான காட்டுயிர் அம்சங்களும் தாவரங்களும் நிறைந்த செழிப்பான வனப்பகுதியாகும். இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம் தாலுக்காவில் வட்டவடா மற்றும் கொட்டகாம்பூர் கிராமங்களை ஒட்டி இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

நீலக்குறிஞ்சி
32 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள இது அழிந்து வரும் தாவர வகையான நீலக்குறிஞ்சி காணப்படும் வனப்பகுதியாகும். 2006ம் ஆண்டில் நடைபெற்ற நீலக்குறிஞ்சி திருவிழாவின் போது இந்த வனப்பகுதியானது சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்திருந்த அவ்வருடத்தில் சுமார் 10 லட்சம் பார்வையாளர்கள் முன்னார் மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு இம்மலர்களை பார்ப்பதற்காகவே விஜயம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு தகவலாகும்.

சின்னார் காட்டுயிர் சரணாலயம்
பல்லுயிர்ச்சூழலுக்கான இயல்பைக் கொண்டுள்ள இந்த சரணாலயத்தில் யானைகள், வரையாடு, காட்டெருமை மற்றும் மான் ஆகிய விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதியின் பெயர் அடையாளமான நீலக்குறிஞ்சி இங்கு அதிக அளவில் காணப்படும் சிறப்புத்தாவரமாகும். மேலும், சின்னார் காட்டுயிர் சரணாலயம் மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவையும் இங்கு அருகிலேயே அமைந்துள்ளன.

மற்ற சுற்றுலா தலங்கள்
இரவிக்குளம் தேசியப்பூங்கா, பாம்பாடும் சோலை தேசியப்பூங்கா மற்றும் ஆனமுடி சோலை தேசியப்பூங்கா போன்ற இதர தேசியப்பூங்காக்களும் இதனை ஒட்டியே காணப்படுகின்றன. தற்போது உருவாகிவரும் பழனி மலை தேசியப்பூங்கா குறிஞ்சிமலா சரணாலயத்திற்கு கிழக்குத்திசையில் உள்ளது.

மாலங்கரா நீர்த்தேக்கம்
மாலங்கரா நீர்த்தேக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு ஏரித்தேக்கமாகும். இது 11 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இயற்கை எழிலை ஏகாந்தமாக ரசித்து மகிழ்வதற்கு மிகவும் பொருத்தமான இந்த ஸ்தலத்தில் பயணிகள் படகுச்சவாரி, மீன் பிடித்தல் போன்ற நிதானமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம். இடுக்கி மாவட்டத்தில் தொடுப்புழா நகரத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் இந்த ஏரிப்பகுதி அமைந்துள்ளது. மலங்கரா நீர்த்தேக்கம் கேரளாவின் முக்கிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. படகுச்சவாரி செல்வதற்கு, மீன் பிடித்தலுக்கும் ஏற்ற இந்த நீர்த்தேக்க ஸ்தலம் புகைப்பட ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications



