சென்னைக்கு அருகில் இருக்கும் சில அருமையான சுற்றுலாத் தலங்களில் பாண்டிச்சேரியும் ஒன்று! ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து வாரந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் இளசுகளும் பாண்டிச்சேரியை வட்டமிடுவது வழக்கம். பிரெஞ்சு கால கட்டமைப்புகள், அமைதியான ஆசிரமங்கள், துடிப்பான கஃபேக்கள், பப்கள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த புதுவைக்கு இத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை! கூடுதல் சிறப்பம்சமாக பாண்டிச்சேரியில் இப்பொழுது பாராகிளைடிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
வாரந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரி
புதுவை அதன் சுதந்திரமான கலாச்சாரத்திற்கும், வண்ணமயமான கஃபேக்களுக்கும், உலகத்தரம் வாய்ந்த பார்ட்டி மற்றும் பானங்களுக்கும் பெயர் பெற்றது. பார்ப்பதற்கும், ஊர் சுற்றுவதற்கும், உற்சாகமாக இருப்பதற்கும் அப்படியே கோவா போன்று இருப்பதால், புதுச்சேரி "மினி கோவா" என்றே அழைக்கப்படுகிறது. போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, ஆங்கிலேயே மாடல்களில் தேவாலயங்கள், வரலாற்றுக் கோவில்கள், பாரம்பரிய கட்டிடங்கள், அரவிந்தர் ஆசிரமம், வண்ணமயமான பல கடற்கரைகள், உலகப்புகழ்பெற்ற ஆரோவில் என சுற்றிப் பார்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வாரந்தோறும் வந்து செல்கிறார்கள்.
பாண்டி மெரினா உருவான கதை
மெரினா என்றால் நம் எல்லோரின் நினைவுக்கு வருவது சென்னையில் இருக்கும் ஆசியாவின் இரண்டாவது மற்றும் நாட்டின் மிக நீண்ட கடற்கரையான "சென்னை மெரினா" தான். ஆனால் புதுவையில் எப்படி மெரினா வந்தது என்று நினைக்கிறீர்களா? புதுவையில் போதி, ஆரோவில், பாரடைஸ் பீச் என பலவகை இருந்தாலும் ராக் பீச் தான் புதுவையின் "ஐகானிக்" (iconic) பீச் ஆகும். பெரிய பெரிய கற்கள் நிறைந்து கிடக்கும், காந்தி சிலையோரம் இருக்கும் ராக் கடற்கரையை நாம் பார்த்து ரசிக்க மட்டுமே முடியும். விளையாட முடியாது. இதற்காகவே சென்னை மெரினா போன்று மக்கள் நீந்தி குளிக்கும் வகையில் புதுவை கீரப்பாளையத்தில் பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டது தான் "பாண்டி மெரினா".
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பாண்டி மெரினா
புதுவையின் காந்தி சிலை கடற்கரையில் இருந்து 2 கிமீ தூரத்தில், புதிய கலங்கரை விளக்கம் அருகில் பாண்டி மெரினா அமைந்துள்ளது. சென்னை மெரினாவில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றனவோ கிட்டத்தட்ட அவற்றில் எல்லாமும் பாண்டி மெரினாவிலும் இருக்கின்றது. குதிரை சவாரி, ஒட்டக சவாரி, கார் ரேஸ், பலவகையான பாஸ்ட் புட், இத்தாலி, ஆங்கில, செட்டிநாடு உணவக ஸ்டால்கள் அடங்கிய ஃபுட் கோர்ட் ஆகியவை இங்கு உள்ளன. அது மட்டுமில்லாமல் சென்னை VGP, Dizzie world போன்ற கேளிக்கை பூங்காவில் இருப்பது போன்ற அனைத்து விளையாட்டுகளும் இங்கு உள்ளதால் தினமும், வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.
பாண்டி மெரினாவில் பாராசூட் சாகச பயணம்
நன்கு பயிற்சி பெற்ற பைலைட்டின் உதவியுடன் 'பேரா மோட்டரிங்' மூலம் இயக்கப்படும் பாராசூட் சாகச பயணம் பாண்டி மெரினாவில் சென்ற வாரம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. பாண்டி மெரினா கடற்கரையில் தொடங்கும் இந்த பாராகிளைடிங் மூலம் வானத்தில் சுமார் 10 நிமிடம் பறந்து புதுச்சேரியின் கடற்கரை அழகை ரசித்து மகிழலாம். பாண்டி மெரினாவில் தொடங்கும் பாராசூட் புதுச்சேரி கடற்கரை, பழைய துறைமுகம் வழியாக சென்று பாண்டி மெரினாவிற்கு மீண்டும் வந்து சேரும். இதற்கு முன்பதிவு செய்ய பாண்டி மெரினா கடற்கரை சிறப்பு கவுண்ட்டர்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் நேநேகள் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும். 10 நிமிட பயணத்துக்கு கட்டணமாக ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த டிக்கெட் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் புதுவையில் இருந்தால் அல்லது புதுவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் பாண்டி மெரினாவுக்கு சென்று பாராகிளைடிங் செய்து பாருங்கள். மிகவும் உற்சாகமாக இருக்கும்.