ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலும், மேடக் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் போச்சாரம் சரணாலயம் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் ஒரு காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களின் வேட்டை பகுதியாக இருந்து வந்தது. அதன் பிறகு 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் சரணாலயமாக மாற்றப்பட்டதோடு அருகில் உள்ள போச்சாரம் ஏரியின் பெயரிலேயே போச்சாரம் சரணாலயம் என்றும் அழைக்கப்பட துவங்கியது. வாருங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்த்துவிட்டு வருவோம்.
விலங்குகள்
போச்சாரம் சரணாலயத்தில் காட்டுப் பூனை, ஓநாய், சிறுத்தை, மான் போன்ற விலங்குகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு பிராமினி வாத்துகள், நீண்ட அலகு நாரைகள் உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாகவும் போச்சாரம் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. இந்த சரணாலயத்துக்கு நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
J.M.Garg
மேடக் கோட்டை
மேடக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேடக் கோட்டை தெலங்கானா தலைநகரம் ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டையை 12-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசர் பிரதாப ருத்ரா என்பவர் மேடக் நகரை படையெடுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டி நகரை சுற்றி ஒரு குன்றின் மீது கட்டியுள்ளார். இதற்கு அவர் இட்ட பெயர் மேதுகுர்துர்காம் என்றாலும் உள்ளூர் மக்கள் இக்கோட்டையை மேதுகுசீமா என்றே அழைத்து வருகின்றனர்.
Varshabhargavi
பழமை மற்றும் சுற்றுலா
மேடக் கோட்டை காகதீயர்கள் மற்றும் குதுப் ஷாஹி காலகட்டத்தில் அதிகாரமிக்க பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் கோட்டை வளாகத்துக்குள்ளேயே குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் மசூதி ஒன்றை கட்டியுள்ளனர். இந்தக் கோட்டையில் தற்போது அந்த 17-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த மிகப்பெரிய பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வரலாற்றுச் சிறப்பு மட்டுமின்றி தொல்பொருள் முக்கியத்துவத்தையும் மேடக் கோட்டை பெற்றிருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.
Varshabhargavi
எடுப்பாலய துர்கா பவானி குடி
கர்நாடக மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அருகாமையில் மேடக் நகரில் அமைந்திருக்கும் எடுப்பாலய துர்கா பவானி குடி துர்கா பவானி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் மஞ்சிரா நதி ஏழு ஓடைகளாக பிரிந்து பின்பு மீண்டும் மற்றொரு பகுதியில் இணைகின்றன. இதன் காரணமாகவே 'ஏழு ஓடைகள்' என்று பொருள்படும்படி தெலுங்கு மொழியில் 'எடுப்பாலய' என்று இவ்விடம் அறியப்படுகிறது.
Msurender
அர்ஜூனனின் கொள்ளுப் பேரன்
எடுப்பாலய துர்கா பவானி குடி அமைந்திருக்கும் இடத்தில்தான் மகாபாரத காலத்தில் அர்ஜுனனின் கொள்ளுப்பேரன் ஜானமேயன் சர்பயாகம் நடத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில் சிவராத்திரியின் போது நடத்தப்படும் ஜதரா எனும் திருவிழாவிற்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள்.
Mali.majid