இந்த பயணத்தில் சென்னையிலிருந்து கோவை வழியாக திருவனந்தபுரத்தின் கோவளம் செல்வது பற்றியும், இடையில் காணவேண்டிய இடங்களைப் பற்றியும் பார்க்கலாம்.
முக்கியமாக இந்த பயணத்தில் நாம் ஏற்கனவே அறிமுகப்பட்ட சென்னையில் முக்கியமான இடங்களை நேரத்தை பொருத்து கண்டுவிடலாம். அதன்பின்னர் நம் பயணம் தொடங்குகிறது. இந்த பயணம் சுய வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே.. மற்றவர்களுக்கு கோவளம் பயணம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி பயணத்தை போலத்தான் இருக்கும். கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு நிறைய ரயில்களும், பேருந்துகளும் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக்கொள்ளவும். சொந்த வாகனத்தில் பயணிப்பவர்கள் சென்னையிலிருந்து கோவை சென்று அங்கிருந்து கோவளம் செல்லும் இந்த இரண்டு நாள் பயணத்தை தொடரலாம் வாருங்கள்.
திட்டமிடல்
எட்டுவழிச் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் இந்த பயணத்தில் நீங்கள் சென்னையிலிருந்து சேலத்துக்கு மூன்றே மணி நேரத்தில் வந்தடைந்துவிடலாம். நாங்க சொல்லலிங்க அரசாங்கம் அப்படித்தான் சொல்லிருக்கும். இருந்தாலும் இப்ப இருக்குற சாலையில 3 மணி நேரம் முப்பது நிமிடங்களில் சேலத்தை அடையலாம். ஆனால் போக்கு வரத்து நெரிசல் ஒரு பிரச்னையாக முன் நிற்கும். அதைத் தவிர்த்து பார்த்தால் நம் பயணத்தில் எந்த வித இடை யூறும் இருக்காது என்றே எண்ணுகிறோம். வாருங்கள் நம் பயணத்தை தொடங்குவோம்.
வழித்தடங்கள்
சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வழியாக கோவளத்தை அடையும் இந்த சாலைப் பயணத்தை நாம் நான்காக பிரித்துக் கொள்வோம்.
சென்னை - சேலம்
சேலம் - கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் - கொச்சி
கொச்சி - கோவளம்
இதில் சென்னையிலிருந்து சேலம் 345 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
சேலத்திலிருந்து கோயம்புத்தூர் செல்ல 167 கிமீ தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது.
மீண்டும் கோயம்புத்தூரிலிருந்து நாம் 190 கிமீ தூரம் பயணித்தான் கொச்சியை அடைந்துவிடலாம்.
கொச்சியிலிருந்து கோவளம் 212 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சென்னையிலிருந்து சேலம் செல்லும் வழி
காஞ்சிபுரம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்நகரம் நம் பயணத்தில் காணும் முதல் பெருநகரமாகும். அத்துடன் இது புராதான நகரமும் கூட.
தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ மன்னர்களின் தலைநகரமாகவும் இருந்த காரணத்தினாலும், பெரும் புகழ் பெற்றுள்ளது. இன்றும், சில சமயங்களில் இதன் பழைய பெயர்களான "காஞ்சியம்பதி" என்றும் "கொஞ்சிவரம்" என்றும் அழைக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்நகரை "ஆயிரம் கோயில்களின் நகரம்" என்றே அறிந்து வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலகமெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பட்டு நூலில், தங்கச் சரிகை சேர்த்து நெய்யப்படும் இச்சேலைகள், முற்காலத்தில் வாழ்ந்த பெண்கள் மட்டுமல்லாது, இக்காலத்து நவீன பெண்களும் விரும்பும் வண்ணம் நெய்யப்படுகின்றன. இச்சேலைகள், தென்னிந்தியாவின் உடைக் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கமாக இருப்பினும், தமிழர்களின் தனிப்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமை பொருந்தியதாகும். வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இப்புனித நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், தேவராஜஸ்வாமி கோயில், மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். காஞ்சிபுரம், நாட்டின் பிற பகுதிகளுக்கு, சாலை வழி மற்றும் இரயில் வழி போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். காஞ்சிபுரத்தின் வானிலை, வெப்பமான கோடைகாலமும், இரம்மியமான குளிர்காலமுமாக மாறி மாறி காணப்படும்.
Hiroki Ogawa
வேலூர்
காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து நம் பயணத்தில் நாம் சென்றடையும் நகரம் வேலூர் ஆகும். காஞ்சிபுரத்தைப் போலவே இந்நகரமும் சிறப்பான வரலாற்று புகழ் மிக்க இடமாகும்.
வேலூர் நகரம் பல முக்கியமான சுற்றுலா அம்சங்களை பயணிகளுக்காக அளிக்கிறது. இங்குள்ள வேலூர் கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக மட்டுமல்லாமல் நகரின் அடையாளமாகவும் வீற்றிருக்கிறது. இது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம் எனும் நினைவுச்சின்னம் போன்றவை வேலூரில் பார்க்க வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.
வேலூர் அருங்காட்சியகமானது கற்கால வரலாறு, மானுடவிய, தாவரவியல், கலை, தொல்லியல் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களை காட்சிக்கு வைப்பதற்கெனவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வேலூர் நகரை சுற்றியும் பல கோயில்களும் சிறு சன்னதிகளும் நிரம்பியுள்ளன. இவற்றில் ஜலகண்டேஷ்வரர் கோயில் எனும் முக்கியமான ஆலயம் வேலூர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது.
ரத்னகிரி கோயில், ஆனை குளத்தம்மன் கோயில், ரோமன் கத்தோலிக் டயோசீஸ், மதராஸா மொஹமதியா மஸ்ஜித் போன்றவையும் வேலுர் நகரத்தில் உள்ள இதர முக்கியமான ஆன்மீகத்தலங்களாகும். திருமலைக்கோடி எனும் இடத்துக்கு அருகில் ஷீபுரத்தில் அமைந்துள்ள தங்கக்கோயில் மற்றொரு விசேஷ அம்சமாகும். இது 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தங்கக்கோயிலில் வீற்றுள்ள மஹாலட்சுமி தேவியின் விக்கிரகம் ஆன்மீக யாத்ரீகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். வில்லபாக்கம், வள்ளிமலை, பாலாமதி, விரிச்சிபுரம், மேட்டுகுளம், மொர்தானா அணை மற்றும் பூமாலை வணிக வளாகம் போன்றவையும் வேலூரின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.
Bhaskaranaidu
கிருஷ்ணகிரி
வேலூரைத் தொடர்ந்து நம் பயணத்தை கிருஷ்ணகிரி பக்கம் திருப்புவோம். தமிழ் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே பல்வகை மத நம்பிக்கைகளின் கலாச்சார மையமாக கிருஷ்ணகிரி நகரம் விளங்குகிறது. இந்த நகரத்தைச் சுற்றிலும் பல்வேறு பழமையான கோவில்களும் தொடர்ச்சியாக உள்ளன.
கிருஷ்ணகிரியை நுளம்பர்கள், சோழர்கள், கங்கர்கள், பல்லவர்கள், ஹோய்சளர்கள், விஜயநகரம் மற்றும் பீஜப்பூர் அரசர்கள், மைசூர் உடையார்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய காலங்களில் கட்டிய கோவில்கள் அவர்களுடைய கட்டிடக்கலைக்கும், ஆன்மீக வழிபாடுகளுக்கும் இன்றும் சான்றாக திகழ்கின்றன. அவற்றில் வேணுகோபால் சுவாமி கோவில், அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் கோவில், ஸ்ரீ பார்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்தம், சி.எஸ்.ஐ கிறித்தவ சர்ச், பாத்திமா சர்ச் - வின்சென்ட் டி பால் பாரிஷ், (இது ஒரு பழமையான ரோமன் கத்தோலிக்க திருச்சபையாகும்), கிருஷ்ணகிரி சத்யசாய் சமிதி அமைப்பு, ஜெயின் தியான மண்டபம், கிருஷ்ணகிரி தர்ஹா, சையத் பாஷா மலை மசூதி ஆகியவை கிருஷ்ணகிரி வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முதன்மையான இடங்களாகும்.
கிருஷ்ணகிரியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் போது முருகப் பெருமானை வணங்குவதற்காக நடக்கும் காவடி ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
Ssanthosh555
சேலத்திலிருந்து கோயம்புத்தூர்...
சென்னையிலிருந்து சேலம் நோக்கிய நம் பயணம் அநேகமாக 5 மணி நேரத்தில் நிகழ்ந்திருக்ககூடியதுதான். ஆனால் இடையில் காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களில் கொஞ்சம் தாமதமாகியதால் சேலத்தில் சுற்றிப் பார்க்க நேரத்தை செலவிடாமல் நேரடியாக கோயம்புத்தூரை அடைவோம்.
சேலத்திலிருந்து செல்லும் வழியில் ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்கள் வருகின்றன. செல்லும் வழிக்கு அருகிலேயே பவானி, வெண்ணெய்க்கு பெயர் போன ஊத்துக்குளி ஆகிய இடங்கள் வருகின்றன.
கோயம்புத்தூர்
சேலத்திலிருந்து 167 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கோயம்புத்தூர். கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது நகரமான இது, பெருநகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பெரிய தொழில் துறை மையமான இந்த நகரம் "தென் இந்தியாவின் மேன்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது. கல்வி மற்றும் தொழில்மயமாக்கலில் கோயம்புத்தூர் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.இருப்பினும் இந்நகரின் வண்ணமயமான கடந்தகால வரலாற்றை இன்றும் நம்மால் காண முடியும்.
இந்த நகரில் அதிகமாக பார்வையிடப்படும் இடங்கள் மருதமலை கோயில், தியானலிங்க ஆலயம், இந்திரா காந்தி வனவிலங்கு காப்பகம் மற்றும் பிளாக் தண்டர் தீம் பார்க் ஆகியன. வெப்பம் நிறைந்த கோடைக்காலம் , மிதமான மழைக்காலம், கடும் குளிர்காலம் என இந்நகரின் காலநிலை மாறுபடுகிறது. கோயம்புத்தூரில் விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியன இருப்பதோடு அருகிலுள்ள நகரங்களோடு சிறந்த சாலை அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.
Jay Sands
கொச்சி
ரசனையில் வேறுபட்ட ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்று கொச்சியில் இருக்கிறது. இருப்பினும், வரலாற்றுப்பிரியர்களின் சொர்க்கம் கொச்சி என்று பொதுவாக சொல்லலாம். அந்த அளவுக்கு இதன் வரலாற்றுப்பின்னணி முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. 14ம் நூற்றாண்டிலிருந்து இதன் சிறப்பு பரவத்தொடங்கியுள்ளது. அதன் பின்னர் பல யாத்ரீகர்களின் பயணக்குறிப்புகளில் இந்த துறைமுக நகரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக வாசனைப்பொருட்கள் மற்றும் மூலிகைப்பொருட்கள் போன்ற பொருட்களின் வணிக மையமாக இது திகழ்ந்துள்ளது. யூதர்கள், சீனர்கள், போர்ச்சுகீசியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகியோர் கடல் கடந்து வந்து இங்கு வாசனை மூலிகைப்பொருட்களை கொள்முதல் செய்வதிலும் அவர்கள் கொண்டுவந்த பொருள்களை விற்பதிலும் ஈடுபட்டிருந்தனர். இப்படி பல காலமாக பல நாகரிகங்களைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தமையால் இந்நகரம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை நாளடைவில் தன்னுடைய அடையாளமாக உருவாக்கிக்கொண்டுவிட்டது.
Pavan.bulibujji -
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தின் ஆன்மீக அடையாளமான ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள நவராத்திரி மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கடவுளாகிய சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதத்தில் ஒரு இசைத்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. இங்குள்ள குதிர மாளிகை அல்லது புத்தேன் மாளிகை என்று அழைக்கப்படும் பாரம்பரிய அரண்மனை கேரளிய கட்டிடக்கலை பாணிக்கான உதாரணமாக அமைந்துள்ளது. மேலும் திருவனந்தபுரத்தின் மஹாத்மா காந்தி சாலையில் பாரம்பரிய கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் பல மாளிகைகளை இன்றும் பார்க்கலாம். பழமை மற்றும் நவீனம் ஆகிய இரண்டு அம்சங்களும் இந்த தெருவில் ஒன்றோடன்று கலந்து மிளிர்கின்றன. சிவப்பு ஓட்டுக்கூரைகளுடன் காணப்படும் மாளிகைகளில் பழமையையும் கண்ணாடி மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் வானோங்கி நிற்கும் பலமாடிக்கட்டிடங்களில் நவீனத்தையும் கண்டு கொள்ளலாம்.
Beaches
கோவளம்
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘கோவளம்' ஆகும். பல வரலாற்று பயணங்களின் சாட்சியாய் பரந்து விரிந்திருக்கும் அரபிக்கடலை ஒட்டி இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 16கி.மீ தூரத்தில் உள்ள, எழில் நிறைந்த இந்த சுற்றுலாத்தலத்துக்கு மிக சுலபமாக சென்றடையலாம். கோவளம் எனும் பெயருக்கு மலையாள மொழியில் ‘தென்னந்தோப்பு பகுதி' என்பது பொருளாகும். பெயருக்கேற்றப்படியே இக்கடற்கரைப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன. எப்படி காஷ்மீர் பகுதியானது ஒரு சொர்க்கபூமியென்று அழைக்கப்படுகிறதோ அதைப்போலவே இந்த கோவளம் கடற்கரையும் தெற்கிலுள்ள ஒரு ‘சொர்க்கபுரி'யாக புகழ்பெற்றுள்ளது.
Manju Shakya