Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் அழகான கடற்கரை வர்க்கலா அருகே இருக்கும் தங்கத்தீவு!

உலகின் அழகான கடற்கரை வர்க்கலா அருகே இருக்கும் தங்கத்தீவு!

இயற்கையின் அழகும், இன்பக் களிப்பும் நிறைந்து கூடி சேர்ந்து ஒருமித்த குரலாய் இனிமையை ஒலிக்கச் செய்ய சிறந்த இடமாக அறியப்படும் வர்க்கலா கடற்கரைக்கு செல்வோம். எப்டி ஆதிகால தமிழ்ல பேசுனா உங்களுக்கு புரியா

By Udhaya

இயற்கையின் அழகும், இன்பக் களிப்பும் நிறைந்து கூடி சேர்ந்து ஒருமித்த குரலாய் இனிமையை ஒலிக்கச் செய்ய சிறந்த இடமாக அறியப்படும் வர்க்கலா கடற்கரைக்கு செல்வோம். எப்டி ஆதிகால தமிழ்ல பேசுனா உங்களுக்கு புரியாதோ அதுமாதிரிதான் வர்க்கலாவோட அழக பத்தி பேசுனாலும் நம்மள்ல பலருக்கு புரியாது. ஏன்னா அப்படி ஒரு பாஷ இன்னும் கண்டுபிடிக்கவே இல்ல. உலகத்துல உள்ள எத்தன மொழிகள்ல பேசுனாலும் இந்த அழக வார்த்தைகளால விவரிக்கமுடியாது. அதுதான் வர்க்கலா.. எப்படி போலாம், எப்ப போலாம், ஒரு முழு நாள வர்க்கலாவுல எப்படி கொண்டாடலாம்னு இந்த பதிவுல பாக்கலாம் வாங்க.

 வர்க்கலா அமைப்பு

வர்க்கலா அமைப்பு

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமே இந்த ‘வர்க்கலா' ஆகும். கேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடம் இது. அரபிக்கடலுக்கு அருகிலேயே உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் இந்நகரின் தனித்தன்மையான அடையாளமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் இந்த வித்தியாசமான புவியியல் அமைப்புக்கு ‘வர்க்கலா அமைப்பு' என்றே பெயரிட்டுள்ளது.

 உலகின் பத்து அழகான கடற்கரைகளுள் ஒன்று

உலகின் பத்து அழகான கடற்கரைகளுள் ஒன்று

பத்து அழகான கடற்கரைகளுள் ஒன்றாக இந்த வர்க்கலா கடற்கரையை டிஸ்கவரி சானல் தொலைக்காட்சி மதிப்பிட்டுள்ளது. புராணிக பின்னணி பலவிதமான புராணிகக் கதைகள் இந்த வர்க்கலா நகரம் பற்றி கூறப்பட்டாலும், அவற்றுள் ஒன்று பாண்டிய ராஜ வம்ச அரசர் ஒருவரிடம் அவரது பாவங்களிலிருந்து விடுபட பிரம்மா தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு ஆணையிட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு கதையில் நாரத முனிவரானவர் பாவ காரியங்களில் ஈடுபட்டு அதிலிருந்து விடுபடுவதற்காக தன்னை வணங்கிய பக்தர்களுக்காக தனது மரவுரியை கழற்றி எறிந்ததாகவும் அது மண்ணுலகில் விழுந்த இடத்தில் பிரார்த்திக்குமாறு சொன்னதாகவும் கூறப்படுகிறது. ‘வல்கலம்' எனும் சொல்லுக்கு மரவுரி என்பது பொருளாகும், எனவே நாரத முனிவரின் மரவுரி வந்து விழுந்த இந்த இடம் வர்க்கலா என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Alexey Komarov

 யாத்திரை தலம்

யாத்திரை தலம்

சுற்றுலாவுக்கான அனைத்தும் உண்டு வர்க்கலா நகரமானது புகழ்பெற்ற ஹிந்து மற்றும் இஸ்லாமிய யாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகிறது. சிவகிரி மடம், ஜனார்த்தன ஸ்வாமி கோயில், கடுவாயில் ஜும்மா மசூதி, வர்க்கலா பீச், பாபநாசம் பீச், கப்பில் ஏரி, அஞ்செங்கோ ஃபோர்ட், வர்க்கலா சுரங்கப்பாதை, சிவ பார்வதி கோயில் மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன. வர்க்கலா பகுதியில் பல நீரூற்றுகளும் காணப்படுவதால் இந்த இடம் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது.

Shishirdasika

சாகசங்கள் நிறைந்த வர்க்கலா

சாகசங்கள் நிறைந்த வர்க்கலா


வர்க்கலா கடற்கரையில் பாராசூட் குதிப்பு, படகுப் பாராசூட் சவாரி போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். கடற்கரைக்கு அருகிலேயே உல்லாச பொழுதுபோக்குக்கு ஏற்ற கபில் ஏரி எனும் நீர்த்தேக்கப்பகுதியும் அமைந்துள்ளது. இவைதவிர சிலக்கூர் பீச் எனும் மற்றொரு அழகிய கடற்கரையும் வர்க்கலா நகரத்துக்கு அருகில் உள்ளது. இது சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதற்கேற்ற ஸ்தலமாக விளங்குகிறது. சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் அளவுக்கு இங்கு வசதிகள் செய்யப்படவில்லை என்றாலும் மாலை நேர நடைப்பயணத்துக்கு மிகவும் ஏற்ற கடற்கரை இது.

Navaneeth Krishnan S

 பொன்னும்துருத்து தீவு

பொன்னும்துருத்து தீவு


பொன்னும்துருத்து தீவு அல்லது தங்கத்தீவு எனும் தீவுப்பகுதியும் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும். இந்த தீவில் 100 வருடங்கள் பழமையான ஒரு சிவன் பார்வதி கோயில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அஞ்செங்கோ ஃபோர்ட் எனும் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமும் பயணிகளுக்காக வர்க்கலா நகரத்தில் உள்ளது. மேலும், வர்க்கலா சுரங்கப்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் போன்றவை இங்குள்ள ஏனைய குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சங்களாகும்.

Shishirdasika

கலையில் சிறந்த வர்க்கலா

கலையில் சிறந்த வர்க்கலா

வர்க்கலா கதகளி மையம் எனும் பாரம்பரிய கலை மையமும் பயணிகளை கவரும் ஒரு அம்சமாக வர்க்கலாவில் பெயர் பெற்றுள்ளது. இந்த மையத்தில் தினமும் பார்வையாளர்களுக்காக பிரத்யேக கதகளி நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. கதகளி நிகழ்ச்சிக்கான அலங்காரங்களையும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே பயணிகள் பார்த்து ரசிக்கும்படியாக இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. நுணுக்கமான - அதிக நேரம் பிடிக்கும் கதகளி அலங்கார முறைகளை நேரில் பார்த்து ரசிப்பது ஒரு சுவராசியமான அனுபவமாக பயணிகள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது.

Shishirdasika

 மோகினியாட்டம்

மோகினியாட்டம்

மோகினியாட்டம் எனும் மற்றொரு நடனக்கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. வர்க்கலா நகரத்துக்குள்ளேயே இந்த கதகளி மையம் அமைந்துள்ளது. புத்துணர்ச்சியூட்டும் யோகக்கலை இங்குள்ள ‘காசி யோக அனுஷ்டான கேந்திரம்' எனும் மையத்தில் யோகா பயிற்சிகள் மற்றும் சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

Shishirdasika

 ஆயுர்வேத மசாஜ்

ஆயுர்வேத மசாஜ்

இந்த மையம் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான யோகா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை மையங்களும் இங்குள்ளதால் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டி ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வர்க்கலா நகரம் மிகப்பொருத்தமான விடுமுறை ஸ்தலமாக உள்ளது. ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரையிலான பயிற்சிகளும் சிகிச்சைகளும் இந்த மையங்களில் வழங்கப்படுகின்றன.

 தியானக்கலை

தியானக்கலை


சிவகிரி மடத்தில் தியானக்கலை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. வர்க்கலா கடற்கரைக்கு வெகு அருகிலேயே ஒரு இயற்கை மருத்துவ மையமும் அமைந்துள்ளது. பயணிகள் இங்கு ஆரோக்கிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.

Alexey Komarov

 போக்குவரத்து வசதிகள்

போக்குவரத்து வசதிகள்

திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ வடக்கிலும், கொல்லம் நகரத்திலிருந்து 49 கி.மீ தென்மேற்கிலும் இந்த வர்க்கலா நகரம் அமைந்துள்ளது. கேரள மாநில அரசுப்பேருந்துகள் எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் வர்க்கலாவுக்கு இயக்கப்படுகின்றன.

wiki

 ரயில்களில் பயணிக்கலாம் வாங்க

ரயில்களில் பயணிக்கலாம் வாங்க


வர்க்கலாவில் ரயில் நிலையமும் உள்ளது. அருகிலுள்ள திருவனந்தபுரத்தில் விமான நிலையமும் உள்ளது. பருவநிலை கேரளாவின் எல்லா கடற்கரை நகரங்களையும் போலவே வர்க்கலா மிதமான பருவநிலையை கொண்டுள்ளது. இருப்பினும் குளிர்காலமே இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள பொருத்தமாக உள்ளது.

Tony Paul

 வர்கலா பீச்

வர்கலா பீச்

வர்கலா பீச் திருவனந்தபுரத்திலிருந்து 54கி.மீ வடக்கே அமைந்துள்ளது. இந்த கடற்கரைப்பகுதியில் 1ம் நூற்றாண்டிலிருந்தே நடத்தப்பட்டு வரும் வாவு பேலி எனப்படும் ஹிந்து சடங்கிற்காக இந்த இடம் புகழுடன் அறியப்படுகிறது. ஜனார்தன ஸ்வாமி கோயில் எனும் 2000 வருட பழமையை கொண்ட அற்புதமான கோயில் ஒன்று இங்கு முக்கிய புண்ணியஸ்தலமாக அமைந்துள்ளது.

Podman123

மருத்துவக்குணங்கள் கொண்ட நீருற்று

மருத்துவக்குணங்கள் கொண்ட நீருற்று

ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த கடற்கரையில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. மருத்துவக்குணங்கள் கொண்ட நீருற்று ஒன்றும் இங்குள்ளது. மக்கள் இதனை புனிதமான அம்சமாக கருதுவதுடன் இதில் பக்தியுடன் நீராடவும் செய்கின்றனர்.

Sumittchavan

 கடற்கரை விளையாட்டுகள்

கடற்கரை விளையாட்டுகள்

கடற்கரை கைப்பந்து விளையாட்டு, நீச்சல், அலைப்படகு சவாரி அல்லது பீச் வேடிக்கை போன்ற ஏதாவதொரு பொழுதுபோக்கில் இங்கு பயணிகள் ஈடுபடலாம்.

Salvatore Barbera

 சூரிய மறைவு காட்சிகள்

சூரிய மறைவு காட்சிகள்

அசைந்தாடும் தென்னை மரங்களின் பின்னணியில் சூரிய மறைவை ரசித்தபடியே இந்த கடற்கரையில் பொழுதை கழிக்கும் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். கடற்கரையை ஒட்டிய உள்ளூர் கடைகளில் ஞாபகார்த்த பொருட்களும் வாங்கிக்கொள்ளலாம்.

Suresh G

 வெளிநாட்டு வாழ்க்கை

வெளிநாட்டு வாழ்க்கை


வர்கலா கடற்கரைப்பகுதியானது வடக்கு முனை மற்றும் தெற்கு முனை என்று இரண்டு பிரிவுகளைக்கொண்டுள்ளது. வடக்குப்பகுதியில் இஸ்ரேலி, சைனீஸ், இத்தாலியன் மற்றும் சர்வதேச உணவு தயாரிப்புகளை பரிமாறும் கஃபே'க்கள் நிரம்பியுள்ளன. ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட பருவம் இந்த கடற்கரைக்கு விஜயம் செய்து ரசிக்க ஏற்றதாக உள்ளது.

Henryk Kotowski

கப்பில் ஏரி

கப்பில் ஏரி


வர்கலா நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் வடக்கே கொல்லம் செல்லும் பாதையில் இந்த கப்பில் ஏரி அமைந்துள்ளது. வர்கலா பகுதியில் இது மற்றுமொரு விசேஷமான சுற்றுலா அம்சமாகும். அரபிக்கடலும் உப்பங்கழி நீர்த்தேக்கமும் சங்கமிக்கும் இந்த ஏரிப்பகுதியானது தென்னை மரங்களின் எழில் நிறைந்த அணிவகுப்புடன் காட்சியளிக்கிறது. இங்குள்ள ஒரு பாலத்தின் மீதிருந்து ஏரியின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

Peter Fristedt

 அரபிக்கடலும் உப்பங்கழியும் கூடும் முகத்துவாரம்

அரபிக்கடலும் உப்பங்கழியும் கூடும் முகத்துவாரம்


படகுச்சவாரி செல்வதன் மூலம் அரபிக்கடலும் உப்பங்கழியும் கூடும் முகத்துவாரப் பகுதியையும் கண்டு மகிழலாம். சொந்த கவலைகளையெல்லாம் மறந்து இயற்கையோடு இயைந்து சுற்றியிருக்கும் அழகுக்காட்சிகளில் மூழ்கி திளைப்பதற்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற ஏராளமான காட்சிகளும் இங்கு மிகுதியாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Nikolas Becker

Read more about: travel trivandrum beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X