தமிழகத்தில் ஊட்டி 'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படுகிறது. மலைகளின் இளவரசி கொடைக்கானல் ஆகும். அப்படி ஒவ்வொரு மலைக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதன்படி பார்க்கையில் மலைகளின் அரசன் யார் என்பது நிறைய பேருக்கு சந்தேகமாகவே இருந்திருக்கும். மகாதேவ மலை, கொல்லிமலை, சுருளி மலை, பொதிகை மலை, வெள்ளிங்கிரி மலை, சதுரகிரி மலையைப் போல சித்தர்கள் வாழும் ஒரு மலைதான் மலைகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. அது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. வாருங்கள் அதன் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பர்வதமலை
சிவ பெருமான் வசித்து வரும் மலை என நிறைய மலைகளைக் கூறுவார்கள். அந்தந்த மலைகளில் சித்தர்கள் தவம் செய்து பல ஆண்டுகள் முக்தி அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு மலை தான் திருவண்ணாமலையில் உள்ள போளூர் செங்கத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள பர்வதமலை. இது மிகவும் புகழ் பெற்ற சிவ கோயில் அமைந்து உள்ள புண்ணிய மலை ஆகும். இங்கு இன்னும் நிறைய அற்புதங்கள் நிகழ்வதாக பரவலாக பேச்சு இருக்கிறது.
Arulghsr

பெயர்க்காரணம்
பர்வதம் எனும் சொல்லுக்கு மலை என்று பொருள். அப்போது ஏன் மலைமலை என்று பெயர் வந்தது என்று தோணலாம். ஆம் மலைகளுக்கெல்லாம் தலையான மலை இந்த பர்வதமலை. அதனால்தான் தன் பெயரிலேயே அதைக் குறிக்கிறது. இந்த மலைக்கு வேறு சில பெயர்களும் உள்ளன. அவற்றில் பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜூன மலை, தென்கயிலாயம், திருசூலகிரி நவிரமலை ஆகியவை முக்கியமானதாகும்.
Arulghsr

மல்லிகார்ஜூன கோயில்
மல்லிகார்ஜூன கோயில் மல்லிகார்ஜூனருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இது மிகவும் பழமையான கோயில் ஆகும். கிட்டத்தட்ட கிபி 3ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டது இந்த கோயில். இந்த கோயிலைக் கட்டியவன் அந்த நாள்களில் வாழ்ந்த குறு நில மன்னனான நன்னன். இங்குள்ள கல்வெட்டுக்களில் இவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
Arulghsr

டிரெக்கிங்
மலையேற்றத்துக்கு நீங்கள் தயாரா? அப்படியானால் மனதளவில் உங்களைத் தயார் படுத்திக்கொண்டபின் மலையேறத் துவங்குங்கள்.
இரண்டு வழிகள்
இந்த கோயிலுக்கு செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தென் மகா தேவ மங்கலம் வழி ஆகும். இன்னொன்று கடலாடி வழி. இவை இரண்டில் எந்த வழியாக நீங்கள் பயணித்தாலும், பாதி மலையில் இரண்டும் இணைந்து ஒன்றாகி விடுகின்றன.
தென்மகாதேவ மங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிமீ அளவு தூரத்தை நடந்தே கடக்கவேண்டும். இப்படி செல்லும்போது கொஞ்ச நேரத்திலேயே மலையின் அடிவாரத்தை அடைந்துவிட முடியும்.
இங்குள்ள பச்சையம்மன் கோயிலில் அம்மனை வணங்கிவிட்டு நம் நடை பயணத்தை தொடர்வோம். பாதி மலையிலேயே அந்த பக்கத்திலிருந்து வருபவர்களையும் நீங்கள் சந்தித்து விடமுடியும். பின் இருவரும் வேறு ஒரு திசை நோக்கி நடக்கவேண்டும். இதன் பின் தான் கடினமான பகுதி வருகிறது.
குமரி நெட்டு
இந்த பகுதி கொஞ்சம் கடினமானதாக இருக்கும். இங்கிருந்து மேல் நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும். இதுதான் குமரி நெட்டு எனப்படுகிறது. இங்குள்ள ஒரு சுனையில் எப்போது நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறது.
கடப்பாறை நெட்டு
இதன் பின்னர் கடப்பாறை நெட்டு எனும் பகுதி வருகிறது. இந்த மலையின் சிறப்பம்சமே இதுதான். இந்த இடத்தை கடந்தவுடன் இரு பெரிய மலைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் சிவபெருமான் தவம் செய்யும் இடமாக அறியப்படும் மல்லிகார்ஜூனர் கோயில். இங்கு பிரம்மராம்பிகை மல்லிகார்ஜூனருடன் வீற்றிருக்கிறார்.

சிறப்பு
இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள சிவனுக்கும் தாயாருக்கும் பக்தர்களே அபிஷேகம் செய்கிறார்கள்.
மற்ற தெய்வங்கள்
இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகனும் காட்சி தருகிறார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கை காட்சிகளுக்காகவும், இந்த மலையில் இருக்கும் மூலிகைகளுக்காகவும் இந்த மலை மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

கோட்டை
இந்த மலையில் ஏறும் பயணத்தில் ஒரு சிறிய கோட்டை இருப்பதை நீங்கள் காணமுடியும். கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல் மண்டபம் ஒன்று உள்ளது. இது பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் எனும் குறுநில மன்னன் கட்டியது என்று சுமார் 5 அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டை சுவர்கள் தெரிவிக்கின்றன. இவை இன்றும் நல்ல நிலையில் இருந்து சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. இவற்றில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் இருக்கின்றன. அந்த காலத்திலேயே மழை நீரை சேமிக்க சிறப்பான வகையில் வழிமுறை செய்யப்பட்டு குளமும் வெட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
Arulghsr

உயர் காக்கும் அற்புத மூலிகைகள்
இந்த மலையில்தான் உயிர் காக்கும் அற்புத மூலிகைகளான சஞ்சீவனி மூலிகைகள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. அவற்றைத் தேடி நிறைய பேர் இங்கு பயணித்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு சித்தர்கள் நிறைய பேர் வசிக்கின்றனர் அவர்கள் சஞ்சீவனி மூலிகையை பயன்படுத்தியே இத்தனை ஆண்டுகாலம் உயிர் வாழ்கின்றனர் என்பதும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமான விசயமாக உள்ளது.
சமயத்தில் இரவு நேரங்களில் ஓம் எனும் சத்தம் கேட்குமாம். மேலும் இங்கு சங்கொலிகள், சந்தன, ஜவ்வாது வாசனை என நிறைய விசயங்கள் நிகழ்வதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications



