நவம்பர் துவங்கி ஜனவரி மாத இறுதி வரை ஏராளமான விடுமுறைகள் வருகின்றன. தீபாவளி பண்டிகை விடுமுறை, அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை அதன் பின் பொங்கல் விடுமுறை என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இந்த சமயத்தில் பள்ளி செல்லும் நம் வீட்டு குட்டீஸ்களுக்கும் அரையாண்டு விடுமுறை வரும். இந்த விடுமுறை நாட்களை வீணடிக்காமல் நல்லதொரு இடத்திற்கு பயணம் செல்ல ஆசையா? எந்த இடத்திற்கு செல்வது என்று சற்று குழப்பமாக உள்ளதா?. வாருங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல அற்புதமான இடமான அந்தமானில் இருக்கும் ராதாநகர் கடற்கரையை பற்றி தெரிந்துகொள்வோம்.
அந்தமான் & நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேருக்கு தெற்கே 67கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஹேவ்லாக் தீவு. மனிதனால் தீண்டப்படாத இயற்கை அழகை கொண்டிருக்கும் பசுமை சொர்க்கம் இந்த ஹேவ்லாக் தீவு ஆகும். அற்புதமான கடற்கரைகளும், கடல் சார்ந்த சாகச விளையாட்டுகளும் உலகமெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. சொல்லப்போனால் இந்தியர்களை விடவும் வெளிநாட்டவர்கள் இந்த தீவிற்கு அதிகம் வருகின்றனர்.
ராதா நகர் கடற்கரை:
ஹேவ்லாக் தீவில் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது ராதாநகர் கடற்கரை ஆகும். புகழ்பெற்ற 'டைம்ஸ்' பத்திரிக்கையினால் ஆசியாவில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரையாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அசுத்தம் நிறைந்த கடற்கரைகளையே பார்த்து பழகிய நமக்கு இந்த ராதா நகர் கடற்கரை இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.
ஒருபக்கம் அடர்த்தியான பசுமையான வனப்பகுதியும், மறுபக்கம் வெள்ளை மணலும் தெள்ளத்தெளிவான கடலும் இருக்கும் ராதா நகர் கடற்கரையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் மகழ்ச்சி பொங்க நேரத்தை செலவிடலாம்.
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத அம்சமாக ராதா நகர் கடற்கரையில் யானை மீது அமர்ந்து சவாரி செய்யலாம். அதோடு இங்கே இருக்கும் ராஜன் என்ற யானையின் மீது அமர்ந்து கடலில் நீச்சலடிக்கவும் செய்யலாம்.
இதர கடற்கரைகள் :
ராதா நகர் கடற்கரை தவிர ஹேவ்லாக் தீவில் கோவிந்த் நகர் கடற்கரை, விஜய் நகர் கடற்கரை, கல்பாதர் கடற்கரை போன்ற இடங்களுக்கும் கட்டாயம் செல்ல வேண்டும்.