ராஜ்நாந்த்காவ்ன் எனப்படும் இந்த மாவட்டம் சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ளது. 1973ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் துர்க் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட இந்த ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டம் ஷன்ஸ்கர்தனி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பல்வேறு மதப்பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்த மாவட்டத்தில் ஒற்றுமையோடு நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குளங்கள் மற்றும் ஆறுகள் போன்ற இயற்கை ஆதாரங்கள் நிரம்பப்பெற்றுள்ள இந்த மாவட்டத்தில் குறுந்தொழில்கள் மற்றும் வணிக செயல்பாடுகள் வாழ்வாதாரங்களாக அமைந்திருக்கின்றன.
துர்க் மற்றும் பஸ்தார் மாவட்டங்கள் இதன் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளாக அமைந்துள்ளன. மாராய்பூரிலிருந்து 73 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த ராஜ்நாந்த்காவ்ன் நகரத்தில் தற்போது ஒரு விமானதளம் அமைப்பதற்கான திட்டமும் அமலில் உள்ளது. ஆதியில் நந்த்கிராம் என்று அழைக்கப்பட்ட இந்த ராஜ்நாந்த்காவ்ன் பகுதி பல்வேறு ராஜ அம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. சொம்வன்ஷி வம்சத்தினர், கல்ச்சுரி வம்சத்தினர் மற்றும் மராட்டியர்கள் போன்றோர் இப்பகுதியை ஆண்ட ராஜவம்சங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இங்குள்ள அரண்மனைகள் மற்றும் வரலாற்றுச்சின்னங்கள் போன்றவை அக்காலத்திய மன்னர்கள் மற்றும் அவர்களது ஆட்சி முறை குறித்த காலப்பெட்டகங்களாக காட்சியளிக்கின்றன. இந்த வரலாற்றுகால அரண்மனைகளை பார்க்கும்போது இப்பகுதியின் செழிப்பான பாரம்பரியம் மற்றும் கலாச்சார உன்னதங்கள் நம் கண் முன் விரிகின்றன.
பெரும்பாலும் வைஷ்ணவ பிரிவை சேர்ந்த ஹிந்து மன்னர்கள் மற்றும் கோண்ட் பழங்குடி வம்சத்தினரால் மட்டுமே இப்பகுதி ஆளப்பட்டு வந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது ராஜ்நாந்த்காவ்ன் பகுதி தனிப்பட்ட சமஸ்தானமாக இயங்கி வந்திருக்கிறது. இந்த சமஸ்தானத்தின் கடைசி ராஜ வாரிசு அவருக்கு சொந்தமான அரண்மனையை ஒரு கல்லூரியை துவங்குவதற்கான கொடையாக அளித்துள்ளார். அந்தக்கல்லூரி தற்போது அவர் பெயராலேயே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி மற்றும் சத்திஸ்ஹர்ஹி ஆகிய மொழிகள் இப்பகுதியில் வசிக்கும் மக்களால் பேசப்படுகின்றன. பல்வேறு கல்வி நிறுவனங்களும் இந்த ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன.
தீபாவளி மற்றும் கணேஷ் சதுர்த்தி போன்ற ஹிந்து பண்டிகைகள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. 'மொஹரா மேளா' மற்றும் காளை விரட்டு போன்ற நிகழ்ச்சிகள் இந்த பண்டிகை தினங்களின்போது மீனா பஜார் எனும் இடத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ராஜ்நந்த்காவ்ன் சுற்றுலா அம்சங்கள்
ராஜ்நாந்த்காவ்ன் பகுதியிலுள்ள அனைத்து கோயில்களுமே சுற்றுலாப்பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய அம்சங்களாக அமைந்துள்ளன. காயத்ரி மந்திர், சீத்லா மந்திர் மற்றும் பர்ஃபானி ஆஷ்ரம் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்க கோயில்களாகும். பம்லேஷ்வரி எனும் பெண் தெய்வத்துக்கான கோயில் ஒன்று டோங்கார்கர் எனும் இடத்தில் ஒரு மலையுச்சியின்மீது வீற்றிருக்கிறது. இது படி பம்லேஷ்வரி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கோயில் சோட்டி பம்லேஷ்வரி கோயில் என்று அழைக்கப்படுகிறது.
துஸேரா மற்றும் ராமநவமி போன்ற திருநாட்களின்போது இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகுதியாக காணப்படுகிறது. பல்வேறு திருவிழாக்களும் இந்த கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இதுதவிர, மாதா ஷீதலா தேவி ஷக்தி பீடம் எனும் மற்றொரு யாத்ரீக ஸ்தலமும் ராஜ்நாந்த்காவ்ன் பகுதியில் உள்ளது. இங்கு 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புராதன கோயில் அமைந்திருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்திலேயே இந்த ஷக்தி பீட ஸ்தலம் உள்ளது.
ராஜ்நந்த்காவ்ன் எப்படி செல்லலாம்?
சாலை மார்க்கம் மற்றும் ரயில் மார்க்கமாக ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டத்துக்கு வருவது எளிதாக உள்ளது.
விமான போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முக்கியமான ரயில் மற்றும் சாலை சந்திப்பாக ராஜ்நாந்த்காவ்ன் விளங்குகிறது.
சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவம்
வெப்ப மண்டலப்பருவநிலையை கொண்டுள்ள ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டம் அதிக வறட்சி மற்றும் அதிக ஈரம் ஆகிய குணங்களை கொண்டிருக்கிறது. அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் இந்த மாவட்டத்திற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம்.