மலர் கண்காட்சி என்றால் நம் எல்லோருக்குமே தமிழக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் அல்லது ஏற்காட்டில் நடைபெறும் வியத்தகு மலர் கண்காட்சிகள் தான் நியாபகம் வரும். ஆனால், இனி மலர் கண்காட்சியை காண ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல தேவையில்லை. ஏனென்றால், சென்னையிலேயே அட்டகாசமாக மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. செம்மொழி பூங்காவில் நடைபெற்று மலர் கண்காட்சி 2025 ஐ காண தவறாதீர்கள்! இந்த வார இறுதியில், உங்கள் வீட்டு குட்டீஸ்களுடன் நீங்கள் செல்ல வேண்டிய இடம் இது தான்!

சென்னை மலர் கண்காட்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பு
சென்னையில் 2022 இல் முதல்முறையாக கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதனை 44 ஆயிரத்து 888 பேர் பார்வையிட்டனர். 2023 ஆம் ஆண்டில் செம்மொழி பூங்காவில் 2வது முறையாக நடைபெற்ற மலர் கண்காட்சியை 23 ஆயிரத்து 302 பேர் பார்வையிட்டனர். 2024ம் ஆண்டில் 3வது முறையாக பிப்ரவரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1 லட்சத்து 9 ஆயிரத்து 27 பேர் பார்வையிட்டனர். நேற்று செம்மொழி பூங்காவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலர் கண்காட்சியை துவங்கி வைத்த முதல்வர்
சென்னை செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நான்காவது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்காட்சியில் உள்ள மலர்களைக் கண்டு ரசித்தார். இந்த மலர் கண்காட்சியில் பட்டாம்பூச்சி, படகு, மயில், கார், பறவை, யானை, ஊட்டி மலை ரயில், பொம்மைகள் ஆகிய வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய நபர்கள்
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலு, எழிலன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் செல்வி அபூர்வா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
50க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி அலங்காரங்கள்
பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்ஃபினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, போன்ற 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, ரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், டிரசினா, பைகஸ், கோலியஸ், அரேலியா, கார்டிலைன், அக்லோனிமா, எராந்திமம், ஃபிலோடென்ட்ரான் போன்ற பல்வேறு அலங்கார இலைத்தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்கெட் வாங்குவது எப்படி
சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில், செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சி நேற்று தொடங்கி ஜனவரி 11 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. மலர் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டை https://tnhorticulture.in/spetickets/ என்ற இணைய தளத்தில், அல்லது செம்மொழி பூங்காவில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
நுழைவுக்கட்டணம் எவ்வளவு?
சென்னையில் நேற்று தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி வருகிற 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், கேமராவுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனத்திற்கு தனி கட்டணம். இரு சக்கர வாகனத்திற்கு ரூ.20, காருக்கு ரூ.100 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் இந்த அழகிய நிகழ்வை மிஸ் பண்ணிறாதீங்க!



Click it and Unblock the Notifications



