சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்டு இயற்கை காதலர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. சிவகிரி தன்னுடைய அழகிய காடுகளை போலவே விஸ்தாரமாக பரந்து விரிந்து கிடக்கும் காப்பித் தோட்டத்துக்காகவும் புகழ் பெற்றது. இந்த நூறு வருட பழமை வாய்ந்த காப்பித் தோட்டம் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக காப்பித் தோட்டத்தை சுற்றி புலிகள் சாதாரணமாக நடமாடுவதை பயணிகள் பார்க்கலாம்.
சிவகிரியின் கவர்ச்சிக்கு மற்றுமொரு காரணம் தொட்டபல்லே சித்தரகுத்தா குன்று. இது கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் பாபா புதன் கிரி குன்று, பத்ரா ஏரி, எம்மிதொட்டி கிராமம் போன்றவற்றின் அழகை குன்றின் உச்சியிலிருந்து பரிபூரணமாக ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்தக் குன்றின் பாறைகளில் ஏறிச் செல்வது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். ஆனால் பாறைகளில் ஏறிச் செல்லும் போது நீங்கள் விலங்குகளின் காலடிச் சுவடுகளை பார்க்கலாம். ஆதலால் பயணிகள், வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் செல்வது நல்லது.
சிவகிரியின் காடுகளை மழைக் காலங்களில் சுற்றிப் பார்ப்பது சற்று கடினமான காரியம். ஆனால் மற்ற காலங்களில் சிவகிரியின் பாறைகளில் ஏறிச் செல்வதோ, நடைபயணம் செல்வதோ மகிழ்வூட்டும் பொழுதுபோக்குகளாகவே இருக்கும். சிவகிரி பெங்களூரிலிருந்து 235 கிலோமீட்டர் தொலைவிலும், அதன் அருகாமை ரயில் நிலையம் உள்ள ஹூப்ளியிலிருந்து 215 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.
சிவகிரியிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தொடி வனவிலங்கு சரணாலயத்துக்கு பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டும். இது 1998-ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு புலிகளை தவிர பல்வேறு மிருங்களும், பறவை இனங்களும் இருக்கின்றன. அவற்றில் இராஜாளி கழுகும், குள்ள நரியும், காட்டெருமையும் இங்கு பிரபலம். அதோடு காட்டு நாய், யானை, கருஞ்சிறுத்தை, பெரிய கொம்புடைய ஆந்தை, குரைக்கும் மான், பறக்கும் நரி, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளையும் இங்கே காணலாம். அதுமட்டுமல்லமால் கூக்குருவான், கருஞ்சிட்டு, தூக்கணங்குருவி, ரெட்டைவால் குருவி உள்ளிட்ட பறவை இனங்களையும், 120-க்கும் மேற்பட்ட மரவகைகளையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
சிவகிரியிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் மடகடக்கெரி ஏரி முக்கியமானது. மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக கருதப்படும் மடகடக்கெரி ஏரி அதன் படகு சவாரிக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தப் பகுதியில் முன்பொரு காலத்தில் பெய்த மாய மழையால் உண்டானதே இந்த ஏரி என்று சொல்லப்படுகிறது. ஒரு முறை காற்றோடு கலந்து விழுந்த சிறிய சிறிய நீர்த்துளிகள் ஒன்று சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியதாக இப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.