இங்கிருந்துதான் தோன்றின என்று எவராலும் நம் நாட்டில் நிலவும் சில நம்பிக்கைகளின் வேர்களை கண்டு பிடிக்கவே முடியாத அளவு ஆழமாக சில விஷயங்கள் நம்பப்படுகின்றன. அறிவியலுக்கும், தர்க்கங்கங்களுக்கும் அப்பாற்பட்ட விஷயமாகவே நம் நாட்டு மக்களிடையே நிலவும் ஆன்மீக நம்பிக்கையை பார்க்க முடியும்.
10,000 ஆண்டுகள் வரலாறு கொண்டதாக சொல்லப்படும் இந்திய நாட்டில் இத்தனை ஆண்டுகளும் அதன் அழிக்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக இருப்பது அதன் தொன்மையான ஆன்மீக ஈடுபாடே ஆகும். வாருங்கள், அப்படிப்பட்ட நம்பிக்கைகளின் பிறப்பிடமாக விளங்கும் வட இந்தியாவில் இருக்கும் சில ஆன்மீக ஸ்தலங்களுக்கு ஒரு பயணம் மேற்கொள்ளலாம்.
ஹரித்துவார்:

ஹிமாலய மலைகளின் சாரலில் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஹரித்துவார் மிக முக்கியமான ஹிந்து யாத்ரீக ஸ்தலன்களுள் ஒன்றாகும். 70 கோடி மக்களின் உயிர் நாடியாக விளங்கும் கங்கை ஆறு இங்கு தான் ஹிமாலய மலைகளை கடந்து சமதலப்பகுதியை அடைகிறது. பிரம்ம குண்டம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தினம்தோறும் கங்கைக்கு பூஜைகள் மேட்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்த ஹரித்துவாரில் காக்கும் கடவுளான விஷ்ணுவின் காலடித்தடங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடக்கும் கும்பமேளா என்னும் ஆன்மீக திருவிழாவில் பங்கேற்க பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்த்தர்கள் கங்கையில் புனித நீராட வருகின்றனர்.
வாரணாசி:

ஹிந்துக்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது நிச்சயம் போக வேண்டும் என்று விரும்பும் ஒரு கோயில் என்றால் அது நிச்சயம் வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கு தான். உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்தகோயிலில் சிவ பெருமான் 'காசி விஸ்வநாதர்' என்னும் ரூபத்தில் வழிபடப்படுகிறார்.
மேலும் இந்த காசியில் இறந்தவர்களின் சடலங்களை எரித்தாலோ அல்லது முதுமை வந்த பிறகு இங்கு வந்து நோன்பிருந்து இறந்தாலோ முக்தி நிச்சயம் என நம்பப்படுகிறது. காசியில் பாயும் கங்கை நதியில் நீராடினால் நம்முடைய பாவங்கள் யாவும் நீங்கும் எனவும் நம்பப்படுகிறது. தினமும் மாலை இங்கு நடக்கும் ஆரத்தி பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
புத்தகயா:

இன்று உலக மக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்வியல் முறைகளுள் ஒன்று புத்த மதமாகும். கௌத்தம சித்தார்த்தனாக பிறந்து மகா ஞானி புத்தராக மாறிய இடம் இன்றைய பீகார் மாநிலத்தில் அமைந்திருக்கும் புத்தகயா ஆகும். இங்கு தான் அவர் ஞானமடைந்ததாக சொல்லப்படுகிறது. அவர் அமர்ந்து தியானம் செய்த பூதி மரம் இன்றும் அப்படியே உள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் புத்தகயாவில் நிலவும் அற்புதமான ஆன்மீக சூழலை அனுபவிக்க வருகின்றனர். இங்கே மகாபோதி என்னும் தொன்மையான புத்தர் கோயிலும், மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன.
அம்ரித்சர்:

பஞ்சாப் மாநிலத்தின் மிகப்பெரிய நகரான அம்ரிதசர் பஞ்சாப் மாநிலத்தின் கலாசார மற்றும் ஆன்மீக செயல்பாடுகளின் கேந்திரமாக விளங்குகிறது. சீக்கியர் பெரும்பான்மையாக வாழும் பஞ்சாபில் அவர்களின் புனித கோயிலாக விளங்கும் ஹர மந்திர் சாஹிப் எனப்படும் பொற்கோயில் அமைந்திருக்கிறது. 4ஆம் சீக்கிய குரு ராம் தாஸ் ஜி என்பவரால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த நகரம் இன்று இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள லங்கர் எனப்படும் சமூக சமையல் கூடம் தான். பலராலும் தானமாக வழங்கப்படும் பொருட்களை கொண்டு சாதாரண மக்களாலேயே சமைக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.
ரிஷிகேஷ்:

'தேவ பூமி' என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ் தேராதூன் நகருக்கு அருகே ஹிமாலய மலையின் மேல் அமைந்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் ரிஷிகேஷில் பாயும் கங்கை நதியில் புனித நீராடி பக்தியில் திளைகின்றனர். பசுமையான சூழலுக்கு நடுவே அமைந்திருக்கும் ரிஷிகேஷ் சிவன் கோயிலில் வழிபாடு செய்வதும் அங்கு அமர்ந்து தியானம் செய்வதும் மனதுக்கு புத்துணர்வு அழைக்கும்.
வட இந்தியா செல்ல வாய்ப்பு கிடைக்கையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் இடங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தவற விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications






