அண்டை நாடான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில், சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலா வாயிலாகவே, அந்நிய செலாவணி வருவாயை, அந்நாடு ஈட்டி வருகிறது.
'கொவிட்-19' தொற்று பாதிப்பு, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தில் ஒன்றான சுற்றுலா பெரும் சரிவை சந்தித்து வந்தது.
இவற்றை சரிசெய்யும் பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் பலனாக, அந்நாட்டின் சுற்றுலா வருவாய் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
சுற்றுலா பயணியரின் வருகையை, 2.5 கோடி பேராக உயர்த்தும் முயற்சியில், பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இலங்கை அரசு. அந்த வரிசையில், அந்நாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள், புதிதாக மேம்படுத்தப்பட உள்ள சுற்றுலா பகுதிகள் குறித்து தெரியப்படுத்தும் விதமாக, கடந்தாண்டு வடமாகாண பகுதியில் ஜாப்னா மைஸ் எக்ஸ்போ 2023 நடத்தியது.

அதைத்தொடர்ந்து, இலங்கையின் தென் மாகாண பகுதியான பென்டோட்டாவில், வணிக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், மே.,27 முதல் மே.,31ம் தேதி வரை, 'சதர்ன் மைஸ் எக்ஸ்போ--:2023' நடைபெற உள்ளது . இதற்கான அறிவிப்பை, எஸ்.எல்.சி.பி., எனும் இலங்கை மாநாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.
கூட்டங்கள், ஊக்கத்தொகை வாயிலாக பயணங்களை ஊக்குவிப்பது, மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றின் வாயிலாக, நாட்டின் தென் மாகாண பகுதியை, 'வணிக சுற்றுலா' மேம்படுத்தும் நோக்கில், 'மைஸ் எக்ஸ்போ-2023' அறிவிக்கப்பட்டு உள்ளது.
நான்கு நாட்கள் நடக்கவுள்ள இந்த கண்காட்சியில், தென்னிந்தியாவில் இருந்து, 45 சுற்றுலா முகவர்கள் மற்றும் ஊடக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். வணிக சுற்றுலா குறித்து இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜெயசூர்யா கூறியதாவது:
இலங்கையின் தென் மாகாண பகுதியை, வணிக சுற்றுலாவுக்காந நம்பிக்கைக்குரிய இடமாக அடையாளம் காணப்பட்டு, இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
பென்டோட்டாவில் நடக்கும் இந்த கண்காட்சி வாயிலாக, தென்னிந்திய பிராந்தியத்தில் உள்ள சந்தை மற்றும் கலாசார உறவை பகிர்ந்து, அதை வலுப்படுத்தும் மையமாகவும், இலங்கையின் பொருளாதாரத்துக்கான வளர்ச்சி வாய்ப்புகளை முன் வைக்கும் விதமாகவும் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இலங்கை சுற்றுலா அமைச்சகம் ஆதரவுடன் நடக்கும் இந்த கண்காட்சியை, இலங்கை மாநாட்டு பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.
பென்தோட்டா, வெலிகம, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தை, புதிய சுற்றுலா இடங்களாகக் காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
இப்பகுதிகள் 400 பேர்கள் வரை கூடும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக நிகழ்வுகளை நடத்தும் திறன் கொண்டது. இந்தியா, சீனா மற்றும் கொழும்பு ஆகிய நாடுகளை தாண்டி, பிற சர்வதேச சந்தைகளில் இருந்து சுற்றுலா நிறுவனங்கள், இங்கு கால்பதிக்கவும், அவற்றை ஈர்க்கவும் இலங்கை மாநாட்டு பணியகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது.

உள்ளூர் வணிகத்துக்கு ஆதரவு, ஆழமான கலாசார அனுபவம், நீடித்த தாக்கத்தையும், இந்த கண்காட்சி வழங்கும். நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுவதோடு, மறக்க முடியாத அனுபவங்களையும் வழங்கும். கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் அளிக்கும்.
பொருளாதார மேம்பாடு மற்றும் மாற்றத்துக்கான உந்துதலாகவும் கண்காட்சி அமைவதோடு, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், இலங்கை மாநாட்டு பணியகம் ஏற்பாடு செய்து தரும். நான்கு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வில் சர்வதேச அளவிலான சுற்றுலா முகவர்களுடன் கூடிய சந்திப்பு, இலங்கையின் பாரம்பரிய நிகழ்வுகள், தென் மாகாண சுற்றுலா பகுதியை காணும் நிகழ்வும் என, பல்வேறு நிகழ்வுகள் கொண்டாதாக, இந்த சதர்ன் மைஸ் எக்ஸ்போ இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி, விசா போன்ற கூடுதல் விபரங்களுக்கு:
www.srilankamiceexpo.com அல்லது +94 773 416 665 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.



Click it and Unblock the Notifications



