சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்ற ஒரு நல்ல தமிழ் திரைப்படமான 'மெய்யழகன்' தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்த இப்படித்தான் பல காட்சிகள் நம் மனதை கவர்ந்து இருக்கலாம், ஆனால் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நூற்றுக்கணக்கான கிளிகளுக்கு உணவளிக்கும் காட்சி தான். இது ஏதோ கிராஃபிக்ஸ் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் சென்னையில் வசிக்கும் சுதர்சன் எனும் நபர் தினமும் நூற்றுக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வளர்த்து வருகிறார், அந்த காட்சி தான் இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு நம்மை போன்ற பொது மக்கள் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்று உங்களுக்கு தெரியுமா?
கிளிகளின் மீது அக்கறை காட்டும் சுதர்சன்-வித்யா தம்பதியினர்
முன்பெல்லாம், விடிவதற்கு முன்னரே நம் வீட்டு வாசல்களில் சிட்டுக்குருவிகள் வட்டமிடுவதை பார்த்து இருப்போம், சேவல் கூவுவதற்கு முன்னரே பல்வேறு பறவைகள் கூச்சலிடுவதை கேட்டு தான் நாம் கண் விழித்து இருப்போம். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. காடுகள் அழிந்ததாலும், மரங்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், பருவநிலை மாற்றத்தாலும் பறவைகளின் எண்ணிக்கையும், இனங்களும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இப்படி ஒரு சூழலிலும் கூட ஒரு சிலர் இந்த பறவைகளின் மீது ஆர்வம் காட்டி அவற்றை பாதுகாத்து கொண்டிருக்கின்றனர். அப்படி அந்த ஒரு சிலரில் பட்டியலில் தான் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாழும் சுதர்சன்-வித்யா தம்பதியினரும் வருவார்கள். இவர்கள் தங்கள் வீட்டு மாடியை பிரத்யேகமாக கிளிகளுக்காக உருவாக்கி உணவளித்து வருகின்றனர்.

15 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளித்து வரும் சுதர்ஷன்
சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் சுதர்சன் ஷா, தினமும் 1000க்கும் மேற்பட்ட கிளிகளுக்கு உணவளித்து வருகின்றார். சுதர்சனும் அவரது மனைவி வித்யாவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் மொட்டை மாடியில் கிளிகளுக்கு உணவளித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு சில கிளிகள் தனது மொட்டை மாடியில் வந்து உலாவியதை கண்ட சுதர்சன் எதேச்சையாக அரிசி வழங்கியுள்ளார். மறு நாள் அதே நேரத்தில் முந்தைய தினத்தில் வந்ததை விட அதிக எண்ணிக்கையிலான கிளிகள் தனக்காக காத்து கொண்டிருப்பதை கண்டார். அன்று முதல் தனது வீட்டுக்கு வந்த அன்பு விருந்தாளிகளான கிளிகளுக்கு உணவளிக்க தொடங்கியுள்ளார்.
ஒரு நாளைக்கு ஆகும் செலவு ரூ.1000 முதல் ரூ.1500 வரை
தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து சாப்பாட்டு பகுதியை சுத்தம் செய்கிறார். ஊறவைத்த அரிசியை மொட்டை மாடியில் வைத்து ஊட்டுகிறார். கிளிகளுக்கு அரிசியுடன் நிலக்கடலையையும் சுதர்சன் வழங்குகிறார். பறவைகளை தங்கள் செல்லப்பிராணிகளாகவும், தங்கள் குடும்ப உறுப்பினர்களை விட அதிகமாகவும் பராமரிக்கிறார்கள்.மொட்டை மாடியில் விருந்தினர்களின் எண்ணிக்கை தற்போது 1000ஐ தாண்டியுள்ளது.அவர்களுக்கு உணவளிக்க நாள் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை செலவு செய்கிறேன் என்றார். கிளிகள் மட்டுமின்றி, சிட்டுக்குருவி, புறாக்கள் என பல்வேறு பறவைகளையும் இங்கு வந்து உணவருந்திவிட்டு செல்கின்றன என்கிறார் சுதர்ஷன்.

பறவைகள் நன்றாக சாப்பிட்டால் போதும் எனக்கு
சுதர்சன் ஒரு நாளைக்கு 2 கிலோ அரிசியைச் சிட்டுக்குருவிகளுக்கு உணவாக வைக்கிறார். அதேபோல் பச்சைக்கிளிகளுக்கு நாள் ஒன்றுக்கு 60 கிலோ அரிசி வைக்கிறார். வருடத்திற்குக் கிட்டத்தட்ட 22 ஆயிரம் கிலோ அரிசியை உணவாகச் செலவிடுகிறார். இதற்காக ஆகும் பணம் பற்றி தான் கணக்குப் பார்ப்பதில்லை என்றும் சொல்கிறார். வரும் வருமானத்தில் 20% வீட்டுக்குப் போக 80% பணத்தை இந்தக் கிளிகளுக்காகத் தர்மம் செய்துவிடுவதாகச் சொல்கிறார்.
மெய்யழகன் திரைப்படத்தில் உருவான கதாபாத்திரம்
கடந்த 1 வருடங்களாக கோ இயக்குநர் கண்ணன் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். அவர்தான் 'மெய்யழகன்' படத்தின் இயக்குநர் பிரேம் குமாரிடம் சொல்லி, கதைக்கு ஏற்றதைப் போலவே ஒருவர் இருக்கிறார் என்று சொல்லி அழைத்துவந்தார். அவர் வந்து போன பிறகு சூர்யாவுக்கு தகவல் போனது. அவர் என் சேவையைப் பாராட்டி ஒரு நினைவுப் பரிசை கொடுத்து அனுப்பினார். இப்படித்தான் படத்தில் என் கதாபாத்திரம் உருவானது.

திரைப்படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த காட்சி
கார்த்தியும் அரவிந்த்சாமியும் நேரில் வந்து பார்த்தார்கள். அரவிந்த்சாமி தன் வீட்டில் வெளிநாட்டுப் பறவைகளை வளர்க்கிறார். கார்த்தி அவரது குடும்பத்துடன் 3 மணிநேரம் என் வீட்டில் வந்து தங்கி பறவைகளைப் பார்த்துவிட்டுச் சென்றார். என் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்தார்கள். நான் என்ன செய்கிறேன்? பறவைகளுடன் எப்படிப் பழகுகிறேன்? எப்படி உணவளிக்கிறேன் என்பதை எல்லாம் நோட் பண்ணார்கள். அதை அப்படியே படத்தில் பயன்படுத்தினார்கள் என்கிறார் சுதர்ஷன். மெய்யழகன் படத்திற்காக படக்குழுவினர் பணம் தருவதாக சொன்னார்கள், ஆனால் நான் எதுவும் வாங்கவில்லை. கடவுள் அந்த படத்தை நன்றாக ஓட வைத்துள்ளார். இது எனக்கு புண்ணியம் என்று தெரிவித்துள்ளார்.
அத்தனை கிளிகளையும் ஒன்றாக நேரில் பார்க்க செல்லலாமா
மெய்யழகன் திரைப்படத்தில் அத்தனை கிளிகளையும் ஒன்றாக பார்ப்பதற்கு நமக்கு வியப்பாக இருக்கிறதே, இதை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்களேன். பிரமிப்பாக இருக்கிறது அல்லவா. ஆனால், நீங்கள் நேரில் இந்த கிளிகளை காணலாம். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சுதர்ஷன் வீட்டுக்கு பொதுமக்கள் வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், ஒரு நாளைக்கு வெறும் 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆதலால், முன்கூட்டியே அனுமதி பெற்றுவிட்டு நீங்கள் இந்த அழகிய இடத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள்!



Click it and Unblock the Notifications



