பல திரைப்படங்களிலும் பல பாடல்களிலும் நாம் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து இருப்போம்! ஆம், ரயிலில் பயணம் செய்யும் போது பாலாறு போல பொங்கி வருகின்ற துத்சாகர் நீர்வீழ்ச்சி அதன் அசாத்திய அழகுக் காரணமாக பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. துத்சாகர் நீர்வீழ்ச்சி அதன் பால் வெள்ளை நிறத்தின் காரணமாக "பால் கடல்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துத்சாகர் நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள வனப்பகுதி இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிலிர்ப்பை அளிக்கிறதோடு மட்டுமில்லாமல் இயற்கையுடன் நெருங்கிச் செல்ல உதவுகிறது. இந்த நீர்வீழ்ச்சியைக் காண இதுவே சிறந்த நேரம். ஏன் என்று கீழே தெரிந்துக் கொள்ளுங்கள்!
கோவாவின் தனித்துவமான அடையாளம்
கம்பீரமான துத்சாகர் நீர்வீழ்ச்சி மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான சூழலுக்கு இடையே பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் சங்கேம் தாலுகாவில் உள்ள மொல்லம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. மூச்சடைக்கக் கூடிய காட்சிகளுக்குப் புகழ் பெற்ற, வலிமைமிக்க துத்சாகர் நீர்வீழ்ச்சி, 1017 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஆசியாவிலேயே பத்து உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. 'துத்சாகர்' என்றால் 'பால் கடல்' என்ற அர்த்தம், அதற்கு ஏற்றார்போலவே வெள்ளை நீரின் கம்பீரமான அருவியை பார்க்கும்போதே நமக்கு ஒருவித பிரமிப்பு ஏற்படுவது உறுதி. கோவா பயணம் துத்சாகரை பார்க்காமல் முழுமையடையாது.
நீர்வீழ்ச்சியைப் பற்றிய புராணக்கதை
ஒரு காலத்தில் காட்ஸ் மன்னனின் மகளாக ஒரு இளவரசி இருந்தாள் என்றும் அவள் மிகவும் அழகாகவும், பரிசுத்தம் வாய்ந்தவளாகவும் இருந்தாள் என்றும் புராணம் கூறுகிறது. அவள் தினமும் தன் தந்தையின் கோட்டைக்கு அருகில் உள்ள ஏரியில் குளித்து முடித்ததும் ஒரு குடம் பால் அருந்துவாள் என்றும் கூறப்படுகிறது. ஒரு நாள் அவள் குளித்துக்கொண்டிருக்கும் போது ஒரு இளவரசன் வந்தான் என்றும் அவள் உடனிருந்த பெண்கள் இளவரசியை மறைக்க அவள் மீது பாலை ஊற்றினர் என்றும் சொல்லப்படுகிறது. அவள் உருவாக்கிய இந்த திரைச்சீலையே பின்னாளில் பால் அருவியாக உருவெடுத்தது என்று கூறப்படுகிறது.
1000 அடி தூரத்தில் இருந்து விழும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி
கோவாவின் முக்கிய நதியான மாண்டோவி ஆறு, கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்காண பீடபூமியில் தொடங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக செல்லும் இந்த நதி, கோவா மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள மிக உயரமான சிகரங்களில் பாய்ந்து துத்சாகர் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. துத்சாகர் நீர்வீழ்ச்சி 1017 அடி உயரமும் சுமார் 100 அடி அகலமும் கொண்டது. நீர்வீழ்ச்சி மூன்று நீரோடைகளாகப் பிரிந்து செங்குத்தான குன்றின் மேலே விழுவதை பார்க்கும்போது உண்மையிலேயே அற்புதமாக இருக்கின்றது. நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள பகுதி வனப்பகுதியாக இருப்பதால் பல விலங்குகள் மற்றும் பறவைகளையும் நாம் காணலாம்.
ஆனந்தமாக ஜீப் சஃபாரி செய்யுங்கள்
இந்த அற்புதமான தளத்தை அடைய நடந்தோ அல்ல ஜீப் சஃபாரி மூலமாகவோ அடையலாம். நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருத்தமான ஒரு சமதளமான பாதையும் உள்ளது, ஆனால் இந்த பாதையில் இன்னும் 1 கிமீ தூரம் பயணித்து நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியை அடைய வேண்டும். வாடகைக்கு கிடைக்கும் ஜீப்புகள் சுமார் ரூ. 1200 ஐ வாடகையாக கேட்கின்றனர், மேலும் ஒரே நேரத்தில் 6 நபர்கள் வரை ஏற்றிச் செல்கின்றனர். நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து ஜீப்பில் பயணித்தால் உற்சாகமாக தானே இருக்கும்.
ட்ரெக்கிங் செய்ய மறக்காதீர்கள்
அடுத்ததாக ட்ரெக்கிங், மிகவும் சாகசமான மலையேற்றம் குவேஷி கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. கரடுமுரடான நிலப்பரப்பில் சுமார் 14 கிமீ நீளமுள்ள இந்த ட்ரெக்கிங் மிகவும் சவாலானதாக இருக்கின்றது. ட்ரெக்கிங் பாதையில் உணவு அல்லது நீர் கிடைக்கக்கூடிய இடங்கள் எதுவும் இல்லை என்பதால் பார்வையாளர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள் ஆகியவற்றை எடுத்து செல்வது அவசியம். போகும் வழியெல்லாம் சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை நீங்கள் கண்டு மகிழலாம்.
இந்த இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிக்கு நடுவே ஒரு ரயில் பாதையும் உள்ளது மற்றும் அதில் பல ரயில்கள் கடந்து செல்கின்றன. பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிக்கு நடுவே ரயில்கள் செல்வதையும் நாம் கண்டு களிக்கலாம். இது பருவமழை காலம் என்பதால் நீர்வரத்து அதிகமாக இருக்கிறது. பார்க்கவே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!