தென்னிந்திய வரலாற்றின் உயர்விற்குச் சோழர்களின் பங்களிப்பு போற்றத்தக்க ஒன்று. சங்க காலத்தில் முற்கால சோழர்கள் தொட்டு பிற்கால சோழ மன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளை செழிப்பு மிக்கதாகக் கொண்டிருந்தனர். சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை, பொருளாதாரம், பண்பாட்டு என அனைத்தையும் அறிய உதவுவது அவர்களால் கட்டமைக்கப்பட்ட கோவில்களே. சோழர்களின் கோவில் என்றாலே தனிச்சிறப்பு பெற்றிருக்கும். இவற்றுள், அவர்களால் கட்டமைக்கப்பட்ட பத்து தலைசிறந்த கோவில்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா ?

தியாகராஜசுவாமி திருக்கோவில்
சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருவது தியாகராஜஸ்வாமி திருக்கோவில். திருவாரூரில் உள்ள இக்கோவில் ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோவிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை வான்மிகிநாதர் என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதில், வான்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும்.

தில்லை நடராஜர் கோவில்
சோழ வம்சத்தின் அடையாளச் சின்னங்களில் தில்லை நடராஜர் கோவிலுக்கு என்னும் தனிச் சிறப்பு பெற்றதாகும். இத்தலக் கருவறை அற்புதமான
கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்க விமானத்தோடு கட்டப்பட்டதாகும். ஆதித்திய சோழனின் மகனான பராந்தக
சோழன் இந்தத் தங்க விமானக் கூரையை அமைத்ததற்கான சான்றுகள் உள்ளன. இதன் மூலம் பொன்வேய்ந்த சோழன் என்றும் அவர்
அழைக்கப்பெற்றுள்ளார்.

ஐராவதீஸ்வரர் கோவில், தாராசுரம்
ஐராவதீஸ்வரர் கோவில், தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும்,
மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக அமைந்துள்ளது. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின்
யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றதாக வரலாறு. இதனாலேயே இத்தலம் ஐராவதீஸ்வரர் கோவில் என பெயர்
பெற்றுள்ளது. ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போலக் கட்டமைக்கப்பட்டுள்ள ஐராவதீஸ்வரர் கோவில் கலைநயமிக்க சோழர்களின்
சான்றாக உள்ளது.

இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில்
சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 24 சந்நிதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து
காணப்படும் கோவிலான இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில் மன்னார்குடியில் அமைந்துள்ளது. இக்கோவில் குலோத்துங்கச் சோழரின்
ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. இந்தக்
கோவிலின் குளம் நாட்டிலேயே மிகப்பெரிய கோவில் குளங்களுள் ஒன்றாகும்.

பிரகதீஸ்வரர் கோவில்
வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளைச் சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த
கோவில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த
முனைப்புடன் உருவாக்கியதே தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல அறவியல் விஞ்ஞானிகளே கண்டு
வியக்கும் சோழர் கோவிலான இங்கு மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் நிரம்பியுள்ளன.

வேதாரண்யேஸ்வரர் கோவில்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள 9 நவக்கிரக கோவில்களில் திருவெண்காட்டில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலும் ஒன்று. இத்திருத்தலத்தில்
நவக்கிரகங்களுள் ஒருவரும், அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களின் மூலம் சோழ சாம்ராஜ்யம் மற்றும் விஜயநகர மன்னர்களின் முக்கிய வரலாற்று தகவல்களை அறிந்துகொள்ள
முடிகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்
சோழர்களின் வரலாற்றில் கங்கை கொண்ட சோழ புரத்தைத் தவிர்த்து எதையும் கூற முடியாது என்றால் மிகையல்ல. சோழர்களின் உயர்தரமான
கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக திகழும் இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டதற்காக மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே
மிகப்பெரிய சிவலிங்கத்தைப் பெற்றிருப்பதற்காகவும் புகழ் பெற்றுள்ளது. அரியலூரில் அமைந்துள்ள இத்தலத்துச் சிவலிங்கம் 4 மீட்டர்
உயரமுடையதாகும். கோவிலின் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் செப்புப் பட்டைகளின் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள சோழ வம்சம் மற்றும்
அவர்களின் அரசு பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள், வேறந்த வரலாற்று நூல்களையும் விட சிறப்பான விளக்கங்களைத் தருவதாக கருதப்படுகிறது.

ஜம்புலிங்கேஸ்வர் கோவில்
ஆரம்பக் கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழ மன்னரால் கட்டப்பட்டதே ஜம்புலிங்கேஷ்வரர் ஆலயம். திருவானைக்காவலில்
அமைந்துள்ள இத்தலத்தில் சோழர்கள் காலத்தில் எழுதப்பட்ட சில கல்வெட்டுகளும், மர்மக் குறிப்புகளும் இன்றும் காணப்படுகின்றன.
கல்வெட்டுக்களின் அடிப்படையில் இக்கோவில் சுமார் 1800 வரடங்களுக்கு முன்பே கட்டப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கரூரை ஆட்சி செய்த வந்த சோழர்களால் கட்டமைக்கப்பட்ட கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சிவ தலமாகும். இத்தலத்தில் சுமார் ஐந்து அடி உயரம்
கொண்ட பசுபதீஸ்வரர் லிங்கம் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இத்தல கூடகையில், ஐந்து சிலைகள் காணப்படுவது வியப்பளிக்கிறது.
தென்னிந்தியாவில் இத்தலத்தில் மட்டுமே இதுபோன்ற கடவுள் சிலைகள் காணப்படுகின்றன.

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுமார், 1300 ஆண்டுகள் பழமையான
இக்கோவில், இந்நகரத்தை ஆண்ட இடைக்காலச் சோழர்களால் கட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications




