மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாட்டப்படும் விரதமாகும். இவ்விரத நாளில் இறைவனின் அருளை பெறுவதற்கும், பாவங்களை போக்கிக் கொள்வதற்கும் சென்று தரிசிக்க வேண்டிய இந்தியாவின் சக்தி வாய்ந்த, புகழ்பெற்ற 10 சிவாலயங்களை தெரிந்து கொள்ளலாம்.

காசி விஸ்வநாதர் கோவில்
12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஒரு புனித தலமாகும். இந்த கோவிலில் சிவனை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் மஹா சிவராத்திரி அன்று இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு மாலை வேளையில் நடக்கும் கங்கா ஆரத்தி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
சோமநாதர் கோவில் :
குஜராத் மாநிலத்தில் உள்ள இந்த கோவில் 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையானது ஆகும். பல்வேறு முகலாய படையெடுப்புக்கு பிறகு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு இன்று இந்த கோயில் இந்துக்களின் புனித தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் பிரமாண்ட சடங்குகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
பிரகதீஸ்வரர் கோவில்:
தஞ்சாவூரில் உள்ள இந்த கோவில் மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் போன்றவை நடைபெறுகின்றன. இங்குள்ள பிரம்மாண்ட சிவலிங்கம், பெரிய நந்தி ஆகியவற்றை பார்ப்பதே பிரம்மிப்பாக இருக்கும்.
திரியம்பகேஸ்வர் கோவில்:
நாசிக் அருகே அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றான இக்கோவிலில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூன்று கடவுளின் முகங்களுடன் அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். ஆன்மிக பக்தர்கள் மஹா சிவராத்திரி நாளில் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
லிங்கராஜ் கோவில்:
ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் அமைந்துள்ளது இக்கோவில். பிரமாண்டமான கட்டிடகலைக்கு பெயர் பெற்றது. கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோவிலாகும். இங்கு மஹா சிவராத்திரி அன்று கோலாகலமாக சிறப்பு பூஜைகள் மற்றும் இரவு முழுவதும் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஓம்காரேஸ்வர் கோவில்:
மத்திய பிரதேசத்தில் காண்ட்வா மாவட்டத்தில் மாண்டாத்தா என்னும் ௐம் வடிவிலான தீவில் அமைந்துள்ள இக்கோவில் 12 ஜோதிர் லிங்கங்கலில் ஒன்றாகும். மஹா சிவராத்திரி நாளில் இங்கு பெரிய ஊர்வலங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
ராமநாதசுவாமி கோவில்:
தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஸ்ரீ ராமர் மணலால் ஆன லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக நம்பப்படுகிறது. மஹா சிவராத்திரி அன்று இங்கு ஏராளமான பக்தர்கள் மத சடங்குகள் செய்தும், இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடியும் வழிபட்டு வருகின்றனர்.
மஹாகாலேஸ்வர் கோவில்:
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் 12 ஜோதிர் லிங்கங்கலில் ஒன்று. மேலும் பஸ்ப ஆரத்திக்கு பெயர் பெற்ற இக்கோயிலில், மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் நடைபெறும் பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
கேதார்நாத் கோவில்:
உத்தர்காண்ட் மாநிலத்தில் இமயமலை சாரலில் அமைந்துள்ள இக்கோவில் புனிதமான ஆன்மீக தலமாக விளங்குகிறது. இது ஜோதிர் லிங்கங்கலில் ஒன்றாகும், மேலும் சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதியாகும். குளிர்காலத்தில் இந்த கோவில் மூடப்பட்டிருந்தாலும் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் ஓம்காரேஸ்வர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
வைத்தியநாத் கோவில்:
வைத்தியநாத ஜோதிலிங்க கோவில் அல்லது பாபா தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜோதிர்லிங்கம் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அளிப்பதாக நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் கங்கையிலிருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.



Click it and Unblock the Notifications



