ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளை சுமந்து கொண்டு கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளத்தாக்கு பகுதி இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் இருப்பதனால் தன் கன்னிமை மாறா அழகு காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் எழில் கொஞ்சும் இதன் இயற்கையழகு தெலுங்கு சினிமாவின் கவனத்தை ஈர்த்ததோடு ஹாப்பி டேஸ், டார்லிங், கதா போன்ற திரைப்படங்கள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன.
அரக்கு பள்ளத்தாக்கு ஒரிசா மாநில எல்லைக்கு வெகு அருகில், விசாகபட்டணத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு அனந்தகிரி மற்றும் சுங்கரிமெட்டா பாதுகாப்பு காடுகளை உள்ளடிக்கியது. அதோடு ரக்தகொண்டா, சிட்டமகொண்டா, கலிகொண்டா, சுங்கரிமெட்டா போன்ற பிரம்மாண்ட மலைகள் அரக்கு பள்ளத்தாக்கை சூழ்ந்து காணப்படுகின்றன. இதில் ஆந்திராவின் உயரமான குன்றாக கலிகொண்டா மலைப்பகுதி கருதப்படுகிறது.
அரக்கு பழங்குடி அருங்காட்சியகம்
அரக்கு பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டிருக்கும் டிரைபல் மியூசியம் பழங்குடியினரின் வாழ்க்கை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த வட்டாரத்தில் வாழும் பழங்குடியினரின் அமைதியும், ஒற்றுமையும் மிக்க வாழ்வு முறையை சுற்றுலாப் பயணிகள் தெளிவாக தெரிந்து கொள்வார்கள்.
அரக்கு ரயில் நிலையத்திலிருந்து 1.8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
arakuvalleytourism.in
பத்மபுரம் தோட்டக்கலை பூங்கா
பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் இரண்டாம் நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் ராணுவ வீரர்களின் உணவுத் தேவைக்கு காய்கறிகள் பயிரிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று காய்கறிகளை பயிருடுவதைக் காட்டிலும் பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் அரிய வகை பூக்களையும், மரங்களையும் உற்பத்தி செய்யும் நர்சரியாக செயல்பட்டு வருகிறது.
அரக்கு ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
Bhaskaranaidu
காஃபி அருங்காட்சியகம்
அரக்கு பள்ளத்தாக்கில் நீங்கள் காலடி எடுத்து வைத்தவுடன் காற்றில் மிதந்து வரும் காப்பிக் கொட்டையின் நறுமணம் உங்களுக்கு அற்புதமான வரவேற்பை கொடுக்கும். இந்த காப்பித் தோட்டங்கள் அரக்கு பள்ளத்தாக்கின் ஆரம்பத்திலேயே பல மைல்கள் அனந்தகிரி குன்று முழுக்க பரந்து விரிந்து கிடக்கிறது. முக்கியமாக இந்த காப்பித் தோட்டங்கள ஏராளமான பழங்குடியினருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது.
அரக்கு நிலையத்திலிருந்து 1.8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
டைடா பூங்கா
டைடா எனும் சிறிய அழகான கிராமம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த வனங்களுக்கு மத்தியில், விசாகப்பட்டணத்திலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு பசுமையான காப்பித் தோட்டங்களுக்கு நடுவிலே இயற்கை எழிலுடன் டைடா கிராமம் காட்சியளிப்பதால், தங்களின் அலுத்துப் போன இயந்திர நகர வாழ்க்கைக்கு மிகச் சிறந்த நிவாரணமாக திகழும் டைடா கிராமத்தை நோக்கி பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
சப்பரை நீர்வீழ்ச்சி
அருவியை சூழ அமைந்திருக்கும் அடர் வனங்களின் பேரமைதியை குலைக்கின்ற ஒரே பேரொலி அருவியின் ஆர்பரிப்பே அன்றி வேறில்லை. இவ்வாறு அமைதியும், ஆர்பரிப்பும் ஒன்றென திகழும் புதுமையான சங்க்டா அருவியை நோக்கி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைகடலென வந்து கொண்டே இருக்கிறது.
ரயில் நிலையத்திலிருந்து 8.3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
எப்படி செல்லலாம்
விமானம் மூலம்
அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவில் விசாகப்பட்டணம் உள்நாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இதுதவிர அரக்கு பள்ளத்தாக்குக்கு அருகாமையில் உள்ள ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு பயணிகள் வாடகை கார்கள் மூலம் சுலபமாக அரக்கு பள்ளத்தாக்கை அடையலாம்.
ரயில் மூலம்
அரக்கு பள்ளத்தாக்கின் ரயில் நிலையத்துக்கும், விசாகபட்டணத்தின் ரயில் நிலையத்துக்கும் இடையே தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதோடு அரக்கு பள்ளத்தாக்குக்கு அருகாமையில் உள்ள ஷிமிலிகுடா ரயில் நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சாலை மூலம்
ஹைதராபாத், விசாகபட்டணம் நகரங்களிலிருந்து அரக்கு பள்ளத்தாக்குக்கு டீலக்ஸ் மற்றும் வால்வோ பேருந்துகள் இயக்கப்படுவதுடன், மற்ற பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பேருந்துகள் அரக்கு பள்ளத்தாக்குக்கு இயக்கப்படுகின்றன.
எப்போது செல்வது
அரக்கு பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் மிதமான வானிலையே நிலவும். இந்த மலைவாசஸ்தலத்திற்கு கோடையில் சுற்றுலா வருவதற்கே பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். எனினும் பனிக் காலங்களில் உறையவைக்கும் பனிப்பொழிவின்றி இதமான வெப்பநிலை நிலவுவதால் அரக்கு பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க பனிக் காலங்களே சிறந்தது. ஏனெனில் ஹைக்கிங், டிரெக்கிங், ரேப்பெலிங் போன்ற சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு பனிக் காலங்களே சிறந்த தேர்வாக அமையும்.