கிறிஸ்துமஸ் பெருவிழா மாதம் இது. கிறித்துவர்கள் மட்டுமல்ல டெல்லியின் மாற்று மதத்தவர்களும் கூட இந்த விழாவை கொண்டாடத் தயாராகிவிட்டனர். டெல்லியில் இந்த முறை கிறிஸ்துமஸை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.
கிறித்துவ தேவாலயங்களில் கொண்டாட்டம்
கிறித்துவ தேவாலயங்களில் கொண்டாட்டம்
கிறித்துமஸின் அதிகாலை தேவாலயங்களின் சிறப்பு பூசையில் கலந்துகொண்டு சிறப்பிக்கவே பெரும்பாலும் மக்கள் விரும்புவார்கள். அதிலும் டெல்லியில் இந்த இரு தேவாலங்களிலும் மக்கள் அதிக அளவில் குழுமியிருப்பார்கள்.
கத்தீட்ரல் சர்ச் ஆஃப் ரிடம்ஷன்
புது டெல்லியிலுள்ள கத்தீட்ரல் சர்ச் ஆஃப் ரிடம்ஷன் எனும் பிரபலமான கிறித்துவ தேவாலயம் வைசிராய் சர்ஸ் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிக அழகான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் இது பார்லிமெண்ட் ஹவுஸ் மற்றும் ராஷ்டிரபதி பவனுக்கு கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது.
கட்டிடக்கலை
1927- 1935ம் ஆண்டுகளில் ஹென்றி மெட் என்பவரால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் காலனிய காலத்து கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. வட இந்திய கிறித்துவ தேவாலயங்களுக்கான தலைமைச்சபையாகவும் இது இயங்குகிறது.
அமைப்பு
ஒரு பிறந்த நாள் கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தாற்போன்ற வடிவத்தில் இந்த தேவாலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடுமையான கோடையிலும் இதன் உட்பகுதி குளுமையாக இருக்கும்படியாக இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. காலனிய ஆட்சியின்போது இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களின் மதச்சடங்குகளை கவனித்துக்கொள்வதற்காக டி.ஆர்.டிக்ஸன் எனும் பாதிரியார் நியமிக்கப்பட்டபோது இந்த தேவாலயம் துவங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போதுள்ள இந்த தேவாலய மாளிகை அமைப்பு 1935ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஒரு அழகான பசுமையான தோட்டத்தின் நடுவே அமைந்திருக்கும் இந்த தேவாலயத்துக்குள் எந்த பாகுபாடுகளுமின்றி அனைவரும் சென்று வழிபடலாம்.
சாக்ரெட் ஹேர்ட் கதீட்ரல்
சாக்ரெட் ஹேர்ட் கதீட்ரல் எனப்படும் இந்த பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம் டெல்லியின் முக்கியமான பழமைச்சின்னங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. 14 ஏக்கர் நிலப்பரப்பில் வீற்றிருக்கும் இந்த தேவாலய வளாகம் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள பாய் வீர் சிங் மார்க் எனும் சாலையின் கடைசியில் அமைந்திருக்கிறது. லியூக் எனும் பாதிரியாளரின் முயற்சியில் வடிவமைக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் பீடப்பகுதியில் ஹென்றி மெட் எனும் கட்டிடக்கலை நிபுணரால் உருவாக்கப்பட்டுள்ள அழகிய இத்தாலிய அலங்கார அம்சங்கள் காணப்படுகின்றன. வழவழப்பான கற்தரைகள், வளைவான கூரை அமைப்பு மற்றும் கம்பீரமான விதான வளைவு அமைப்புகள் போன்றவை இந்த தேவாலயத்தின் இதர விசேஷமான அம்சங்களாகும்.
ஷாப்பிங் செல்வோமா
டெல்லி மாநகரத்தில் ஷாப்பிங் செய்வதைப்போன்ற ஒரு அற்புதமான அனுபவம் வேறு எந்த மாநகரத்திலும் கிடைக்காது என்பதே உண்மை. ஆடம்பரமான மால் அங்காடிகள் முதல் நடைபாதை பஜார் கடைத்தெரு வரை டெல்லியில் ஏராளம் நிரம்பியுள்ளன. நகரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பஜார்கள் நிரம்பியுள்ளன. நீங்கள் என்ன வாங்க வேண்டுமோ அந்த பொருளுக்கென்றே ஒரு விசேஷ பஜார் இந்த டெல்லி நகரத்தில் இருக்கும். ஆடைவகைகள் முதல் மின்னணு சாதனங்கள் வரை இந்த நகரத்தில் கிடைக்காத பொருளே இல்லை.
எங்கெல்லாம் செல்லலாம்
ஜன்பத்: ஷாப்பர்ஸ் பாரடைஸ் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் டெல்லி நகரத்தின் முக்கியமான மார்க்கெட் பகுதியாக இந்த ஜன்பத் மார்க்கெட் புகழ் பெற்றுள்ளது. நவநாகரீக உடைகள், விலை மலிவான நகைகள், செயற்கை வைர நகைகள், வண்ணமயமான வீட்டு அலங்கார பொருட்கள், கைவினைப்பொருட்கள், கலைப்பொருட்கள், புத்தகங்கள் மற்றும் பட்டியலிடமுடியாத இன்னும் எத்தனையோ பொருட்களை இந்த ஜன்பத் மார்க்கெட்டில் பயணிகள் வாங்கலாம்.
திபெத்தியன் மார்க்கெட்:
திபெத்திய கைவினைப்பொருட்கள், பித்தளை அழகுபொருட்கள், தங்கா எனப்படும் பௌத்த ஓவியங்கள், வெள்ளி பொருட்கள், இசைக்கருவிகள் மற்றும் சுவர் அலங்கரிப்பு சட்டகங்கள் போன்றவை இங்கு கிடைக்கும் ஏராளமான பொருட்களில் ஒரு சிலவாகும்.
சோர் பஜார்:
திருட்டு பஜார் என்ற பெயரிலேயே இந்த பழைய பொருள் சந்தை டெல்லியில் இயங்குவது ஒரு ஆச்சிரியமான விஷயம்தான். செங்கோட்டை மற்றும் லஜ்பதி ராய் மார்க்கெட்டிற்கு அருகில் உள்ள இந்த சந்தைப்பகுதியில் உபயோகப்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் பலவகைகளில் கிடைக்கின்றன.
தார்யாகஞ்ச் புக் மார்க்கெட்:
நீங்கள் புத்தக ஆர்வலராக இருப்பின் கண்டிப்பாக இந்த மார்க்கெட் பகுதிக்கு விஜயம் செய்ய வேண்டும். பழைய டெல்லி அல்லது ஷாஜஹானாபாத் பகுதியில் உள்ள தார்யாகஞ்ச் எனும் இந்த இடம் இந்திய பதிப்பு வணிகத்தின் கேந்திரமாகவே இயங்குகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு ‘கிதாப் பஜார்' என்ற பெயரில் விசேஷ புத்தக சந்தையும் நடத்தப்படுகிறது
கான் மார்க்கெட்:
இந்தியாவிலேயே மிக ஆடம்பரமான பணக்கார சில்லறை வர்த்தக மார்க்கெட் பகுதியாக இந்த கான் மார்க்கெட் புகழ் பெற்றுள்ளது. 1951ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த மார்க்கெட் பகுதிக்கு எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட அரசியல் தலைவரான கான் அப்துல் காஃபர் கான் அவர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.