இந்தியாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் டையூ பயணத்தின்போது நாம் செல்லவேண்டிய இடங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
நகோவா பீச்
புச்சார்வாடா கிராமத்தில் உள்ள நகோவா எனும் மீனவக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருப்பதால் அப்பெயரே இந்த கடற்கரைக்கும் வழங்கப்படுகிறது. தியூ நகரத்திலிருந்து 20 நிமிட நேரப்பயணத்தில் இந்த கடற்கரைக்கு வந்து சேரலாம். அரை வட்ட வடிவில் ஒரு குதிரை லாடம் போன்ற வடிவத்தில் இந்த கடற்கரை அமைந்திருக்கிறது. இதன் ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான தூரம் 2.5 கி.மீ ஆக உள்ளது.
கோக்லா பீச்
கோக்லா பீச் எனும் இந்த கடற்கரை தியூ நகரத்திலிருந்து 631 கி.மீ தள்ளி கோக்லா கிராமத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. மணற்பாங்கான இந்த கடற்கரை தியூ மாவட்டத்தில் உள்ள பெரிய, அமைதியான, ரம்மியமான கடற்கரையாகும். தங்கநிற மணற்பரப்பானது தொடுவான தூரத்தில் அலைகள் போன்று எழும்பி அடங்குவது போன்ற மாயக்காட்சியை இந்த கடற்கரையில் பார்த்து ரசிக்கலாம். நீச்சல், மிதவைச்சவாரி, நீர்ச்சறுக்கு போன்ற சாகச நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட மகிழ இது மிகவும் ஏற்ற கடற்கரையாகும். நீர் விளையாட்டுகளில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள் மிருதுவான மணற்பரப்பில் ஓய்வெடுக்கலாம். தனிமை விரும்பிகள், மற்றும் இயற்கை ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய எழில் பிரதேசமாக இது அமைதியுடன் வீற்றிருக்கிறது.
கங்கேஷ்வர்
கங்கேஷ்வர் எனும் பெயர் சிவபெருமானைக்குறிக்கிறது. கங்கை நீர் அவரது சிரசிலிருந்து உற்பத்தியாவதாக ஐதீகம் குறிப்பிடுவதால் கங்கேஷ்வர் எனும் பெயர் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த கங்கேஷ்வர் கோயில் தியூ நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள ஃபதும் எனும் கிராமத்தில் உள்ளது.
ஒரு குகைக்கோயிலாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் கடற்கரையை ஒட்டி பாறைகளின் நடுவே காணப்படுகிறது. இதன் உள்ளே தரை மட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஐந்து சிவலிங்கங்களும் அரபிக்கடலின் நீரால் தொடர்ந்து கழுவப்படுகிறது.
சிவபெருமான் மீதான பக்தியை பெருங்கடல் இவ்வாறு வெளிப்படுத்துவதாக பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.
செயிண்ட் பால் சர்ச்
ஏசு கிறிஸ்துவின் நேரடி சீடரான புனித பால் பெயரில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. போர்த்துகீசியர்களால் தியூ நகரத்தில் கட்டப்பட்ட மூன்று சர்ச்சுகளில் இது ஒன்று மட்டுமே இன்றும் இயங்கி வருகிறது. எஞ்சியிருக்கும் கிறிஸ்துவ தலைமுறையினர் சிறிய எண்ணிக்கையில் பிரார்த்தனைக்காக இந்த தேவாலயத்தில் கூடுகின்றனர். 1610ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த சர்ச் ‘அவர் லேடி ஆஃப் இம்மாகுலேட் கான்செப்ஷன்' என்ற பெயரில் அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த தேவாலயத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்றவை பரோக் பாணி கட்டிடக்கலை அம்சங்களை கொண்டிருக்கின்றன. இதன் உட்பகுதியில் பல நுணுக்கமான மர அலங்கார வேலைப்பாடுகளை பார்வையாளர்கள் காணலாம்.
Mohnish1208
செயிண்ட் தாமஸ் சர்ச்
செயிண்ட் தாமஸ் சர்ச் எனும் இந்த பழமையான தேவாலயம் 1598ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டிருக்கிறது. தியூ கோட்டை வளாகத்தின் சுவரை ஒட்டி எழுப்பப்பட்டுள்ள ஒரு மேடை போன்ற அமைப்பில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. காதிக் பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன் இது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. வெண்ணிறம் பூசப்பட்டு காணப்படும் இதன் வெளிப்புற அமைப்பில் காலத்தால் தேய்மானமடைந்து மங்கலாய் காட்சியளிக்கும் போர்த்துகீசிய சித்தரிப்புகள் மற்றும் ஓவியங்களை இன்றும் பார்க்க முடிகிறது. இந்த பழமையான ஆலயத்தில் தற்போது பிரார்த்தனைக்கூட்டங்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை. இருப்பினும் வருடாந்திரமாக நவம்பர் 1ம் தேதியன்று ‘ஆல் செயிண்ட்ஸ்' திருநாள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
கடற்சிப்பி அருங்காட்சியகம்
தியூ விமான நிலைய வளாகத்தின் கிழக்குப்பகுதியில் நகோவா பீச் கடற்கரைக்கு அருகே இந்த கடற்சிப்பி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற மெர்ச்சண்ட் நேவி கேப்டன் ஃபுல்பரி என்பவரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் தமது வாழ்நாள் முழுக்க செலவிட்டு கடறபயணங்களின்போது சேகரித்த கடற்சிப்பிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆசியாவிலேயே இவ்வகையான மிகப்பெரிய மியூசியம் எனும் பெருமையை கொண்டுள்ள இந்த கடற்சிப்பி அருங்காட்சியகம் 2500 முதல் 3000 வகையான கடற்சிப்பி வகைகளை கொண்டிருக்கிறது. சிப்பிகளை நன்கு ஆராய்ந்து பார்க்க வசதியாக பார்வையாளர்களுக்கு உருப்பெருக்கி கண்ணாடியை வழங்கும் ஒரே மியூசியம் எனும் முதலிடத்தையும் இது உலகளாவிய அளவில் பெற்றிருக்கிற்து. சிலந்திகள், தேள்கள், கோக்கிள், அபலோன், மொலஸ்க், கிரஸ்டேசியன் போன்ற உயிரின வகைகளின் ஓடுகள் பல்வேறு பரிமாணங்களில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கடற்சிப்பிகள் குறித்த அறிவியல் பூர்வ தகவல்கள் மற்றும் வரலாற்று விபரங்கள் கொண்ட நூல் ஆவணங்களையும் இந்த அபூர்வ அருங்காட்சியகம் கொண்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்திற்கான நுழைவுக்கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது
Rashmi.parab
பனி கொத்தா கோட்டை
ஃபொர்ட்டிம் டோ மார் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த பனி கொத்தா கோட்டையானது அரபிக்கடலில் இணையும் ஒரு ஓடையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை கோக்லா கிராமத்திற்கு அருகில் தியூ படகுத்துறையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கிறது. ஒரு கப்பலை போன்ற வடிவத்தில் கடல் நீருக்குள் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. ஒரு சுரங்கக்கால்வாய் மூலமாக இது நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. சுற்றியுள்ள கடற்பகுதியின் எழிலை நன்கு ரசிப்பதற்கு இந்த கோட்டை ஒரு அற்புதமான காட்சித்தளமாக வீற்றிருக்கிறது. படகுத்துறை, கோக்லா கிராமம் மற்றும் தியூ நகரம் போன்றவற்றை இந்த கோட்டையிலிருந்து நன்றாக பார்க்கலாம்.
Aditya Mahar