ஒருவன் பிறந்து வாழ்ந்து இறந்து மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பதத்தை அடைவதே முக்தி எனப்படும். எண்ணிலடங்காத முற்பிறவிகளில் செயல் செய்து சேர்த்துவைத்திருக்கும் மிகஅதிக அளவிலான சஞ்சித கர்மங்கள் தீருவதற்குள் ஒவ்வொரு பிறவியிலும் அதன் அளவை எஞ்சியுள்ள கர்மங்கள் மூலம் அதிகரித்து வருகிறோம். எனவே கர்ம பலன்கள் தீர்ந்து நாம் முக்தி அடைவது என்பது சிவனின் ஆசியில்லாமல் நடைபெறாது. வாழ்நாளை சிறப்பாக வாழ்ந்து இறுதியில் முக்தியடைய விரும்புவோர்வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வரவேண்டிய கோவில் முக்தீஸ்வரர் ஆலயம். வாருங்கள், அது எங்கே உள்ளது, என்ன சிறப்பு என பார்க்கலாம்.
எங்கே உள்ளது ?
ஒவ்வொரு ஜீவராசிக்கும் முக்திநிலையை தீர்மானிக்கும் சிவ தலம் முக்தீஸ்வரர் ஆலயம். இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானை சாபவிமோசனம் பெற்ற தலம். இக்கோவிலானது மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் வாயு தத்துவ தலமாகும். சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் இதுவும் ஒன்று.
Meisam
தல வரலாறு
சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவில். இறைவன் ஆடிய விளையாட்டைப் பார்ப்போமா? இத்திருவிளையாடலின் முக்கிய கதாநாயகன் ஐராவதம் என்ற யானை. இந்த யானை எப்படி இங்கு வந்தது, எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது என்பதை விவரிக்கிறது, அய்யனின் திருவிளையாடல். நிகழ்ச்சிக்கு நாம் புராண காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
Kkmishra1960
இந்திர வாகனம்
ஐராவதம் என்ற வெள்ளை யானை, தேவலோகத்தின் யானை. இது இந்திரனின் வாகனம் ஆகும். துர்வாச முனிவர் ஒருநாள் இந்திரனைக் காண தேவலோகத்துக்கு வந்தார். சிவ பூஜை முடித்து விட்டு பிரசாதமாக மலர் மாலையைக் கொண்டு வந்து தேவேந்திரனிடம் கொடுத்தார். சிவ பிரசாதத்தின் மகிமையையோ, முனிவரின் தவ வலிமையையோ அறியாத ஐராவதம், அகங்காரம் அதன் அறிவை மறைக்க, மலர் மாலையைத் தும்பிக்கையால் இழுத்து, தன் காலடியில் போட்டு மிதித்தது. இதனால் ஐராவதம் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது. சாபம் பெற்ற யானை பல நூறாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்து கொண்டிருந்தது. சிவனுக்கு பூஜை செய்து சாப விமோசனம் பெற்றது.
Meisam
சாப விமோசனம்
சாப விமோசனம் பெற்ற தன் வாகனத்தை அழைத்து செல்வதற்காக இந்திரன் வருகிறார். தேவலோகம் செல்லும் முன் மீண்டும் சிவ பூஜை செய்ய வேண்டும் என்று ஐராவதம் விரும்புகிறது எனவே தன் பெயரிலேயே மதுரையின் கிழக்கே ஒரு பகுதியை உருவாக்கி முக்தீஸ்வரரை பூஜித்து பின் இந்திரனுடன் தேவலோகம் சென்றது.
Ssriram mt
முக்தி தரும் சிவன்
பூமியில் பிறக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் முக்தியைக் கொடுக்கும் தலம் மதுரையம்பதி. இதனை ஜீவன் முக்திபுரம் என்று ஹாலாஸ்ய புராணம் வர்ணிக்கிறது. ஐராவதம் போன்று, இந்த மதுரையிலே நாரைக்கும் கூட முக்தி கிட்டியது. ஆறறிவு மக்களுடன் ஐந்தறிவு விலங்கு இனங்களுக்கும் இறைவன் முக்தி அளிப்பதனால், மதுரையம்பதி ஜீவன் முக்தி புரம் என அழைக்கப்படுகிறது. இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோவில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐராவதம் வழிபட்ட முக்தீஸ்வரர் ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், முத்து வீரப்ப நாயக்கர் என்பவரால் ஓர் ஏக்கர் பரப்பளவில் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டது.
Ms Sarah Welch
முக்தி விளக்கு
ஆதியில், இங்குள்ள சிவனார், முத்து வீரப்ப நாயக்கரின் பெயரால் முத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இவரை இந்திரேஸ்வரர் என்றும், ஐராவதேஸ்வரர் என்றும் அழைத்துவந்தனர். காலப்போக்கில், இங்கு வாழும் மக்கள், சிவபதம் அடைந்தவர்களுக்காக இந்தச் சிவ சந்நிதியில் முக்தி விளக்கு ஏற்றப்பட்டது. இக்காரணத்தினால் தற்பொழுது முக்தீஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
Meisam
ஆலயத்தின் சிறப்புகள்
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலும் சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது. இந்நிகழ்ச்வு தினமும் இருபது நிமிடம் வரை நீடிக்கிறது.
bot
நவகிரக தோஷம் நீங்கும்
சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை படரச் செய்து பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழிபட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது தொன்நம்பிக்கை. ஆலயத்தின் மூலவரான முக்தீஸ்வரரை வணங்குவதின் மூலம் நவக்கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
G41rn8
விநாயகர் மகிமை
இத்திருத் தலத்தில் வடகிழக்கிலும் வடமேற்கிலும் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். வில்வம், நெல்லி, கிளுவை, மாவிலங்கை எனப்படும் நான்கு வகையான மரங்கள் இங்கு இருக்கின்றன. இங்கு வடமேற்கில் உள்ள வில்வமரத்தின் கீழ் அருள்பாலிக்கும் விநாயகருக்கு நாற்பத்தியெட்டு நாட்கள் தீபம் ஏற்றி வலம் வந்து வழி பட்டால் வேண்டியற்றை அருள்வார் என்பது தொன்நம்பிக்கை.
Ms Sarah Welch
எப்படிச் செல்வது ?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 3.5 கிலோ மீட்டர் நடந்து சென்றாலே மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலின் அருகில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்துவிடலாம். மதுரையின் எந்தப் பகுதியில் இருந்தும் இக்கோவிலுக்குச் செல்ல நகரப் பேருந்துகள் அடிக்கடி உள்ளது.