கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம், இயற்கை சூழ்ந்த மழைப் பிரதேசம், தேயிலை எஸ்டேட் நிறைந்து, மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இந்த உலகப் புகர்பெற்ற சுற்றுலாத் தலம் தான் மூணாரு. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகளை மையமாகக் கொண்டு மூணாரு என பெயர்பெற்றுள்ள இப்பகுதியில் பல சுற்றுலா அம்சங்கள் குறித்து நாம் அறிந்திருப்போம். கண்கவர் மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. ஒரு இயற்கை ரசிகர் எதிர்பார்க்கும் அனைத்தையுமே தன்னுள் கொண்டிருக்கும் இங்கே கொஞ்சமும் கூட இடைவெளியின்றி நீண்டு பரந்து காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்களும், பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், சரணாலயங்களும், சிலுசிலுவென்ற காற்றும் சுற்றுலாப் பயணிகளை தன்வசம் வைக்க உதவுகிறது. பெரும்பாலும் இப்பகுதிக்கு வரும் பயணிகள் இந்த தலங்களை மட்டுமே சுற்றிப்பார்த்து விட்டு பயணத்தை முடிக்கின்றனர். ஆனால், இங்கே எத்தனை அருவிகள் நம் மனதை மூழ்கடிக்கும் வகையில் உள்ளது என தெரியுமா ?. அற்புதமான நீர்வீழ்ச்சிகள் கொண்டுள்ள மூணாற்றில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சில அருவிகள் குறித்து அறிந்துகொள்வோம் வாங்க.
லக்கம் நீர்வீழ்ச்சி
மூணாறிலிந்து மறையூர் வழித்தடத்தில் 24.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லக்கம் நீர்வீழ்ச்சியும், அதனைச் சுற்றிலும் உள்ள மரக்காடுகளும் அழகான சிகப்பு வண்ண மலர்கள் நிறைந்த காட்சியை உண்டாக்குகிறது. எரவிக்குளம் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி பல்வேறு மலை முகடுகளைக் கடந்து வருவது மூணாறு நீர்வீழ்ச்சிகளில் பிரபலமானதாகவும் மற்றும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும் இதை மாற்றுகிறது.
Shanmugamp7
நியாயமகட் நீர்வீழ்ச்சி
அற்புதமான காட்சிகள் நிறைந்த நியாயமகட் நீர்வீழ்ச்சி முணாரிலிருந்து ராஜமலா வழித்தடத்தில் மூணாரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 1600 மீட்டர் உயரத்திலிருந்து சீறிப்பாயும் தண்ணீர், அருகாமையிலுள்ள பகுதிகளின் பசுமையின் மூலாதாரமாக திகழ்கிறது. இது ஒரு பிரபலமான பிக்னிக் அமைவிடமாகும். மழைக்காலத்திற்கு பிறகு இங்கு வருகை தரும் அனைவருக்கும் கண்களுக்கு விருந்துதான்.
Jaseem Hamza
ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி
மூணாறிலிருந்து பள்ளிவாசல் செல்லும் வழித்தடத்தில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி. சுற்றுப்புற மலைகளின் பசுமை தோற்றமும், மலையிச் உச்சியிலிருந்து விழும் நீரும் உங்கள் மனதில் நீங்கா நினைவுகளை பதித்துடும். நீர்வீழ்ச்சி பகுதிகளைச் சுற்றி மலையேற்றம் செய்வது, சாகசப் பயணம் மேற்கொள்வது சுற்றுலாப்பயணிகள் மேலும் கவரும்.
Amal94nath
குத்தும்கல் நீர்வீழ்ச்சி
குடும்பமாக, புதுத் தம்பதியினர் என யார் மூணார் சென்றாலும் தவறவிடக் கூடாத சுற்றுலாத் தலம் இந்த குத்தும்கல் நீர்வீழ்ச்சி. மூணாறிலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இங்கு அதிகப்படியான வேகத்தில் நீர் விழுவதால் ஏற்படும் நீர்ப்புகை பனிமண்டலமாக சுற்றுப்புரத்தை மூடி புதுவித காட்சியைத் தருகிறது. பிரம்மாண்ட உயரத்திலிருந்து பாறைகளின் மீது விழுந்து தெரிக்கும் நீரின் ஈரக் காற்று கல்நெஞ்சக் காரர்களின் மனதைக் கூட உருகச் செய்திடும்.
Nishanth Jois
தூவானம் நீர்வீழ்ச்சி
பம்பார் நதியிலிருந்து உருவாகும் தூவானம் நீர்வீழ்ச்சி சின்னார் வன உயிர் காப்பகத்திற்குள், மூணாறு நகரில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலைக்காடுகளின் இடையில் உள்ள இங்கே செல்ல மலையேற்றம் செய்ய வேண்டும். ஆலம்பட்டி வனப்பகுதி சோதனைச் சாவடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் மலையேற்றம் செய்தால் தூவானம் நீர்வீழ்ச்சியை அடையலாம்.
Firos AK
வல்லாரா நீர்வீழ்ச்சி
அடிமளி மற்றும் நெரியமங்கலம் இடையே மூணாறிலிருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் cள்ள வல்லாரா நீர்வீழ்ச்சி கேரளா மின்சார வாரியத்தின் தொட்டியாறு நீர்மின்னேற்ற நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பல்வேறு நீர்வீழ்ச்சிகளின் கிளையாக பசுமை நிறைந்த சுற்றுப்புறங்களின் மத்தியில் பேரழகுடன் திகழ்கிறது.
Wikistranger
சீயப்பாறா நீர்வீழ்ச்சிகள்
மூணாறிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில், கொச்சி- மதுரா நெடுஞ்சாலையில், அடிமலி மற்றும் நெரியமங்களம் இடையில் அமைந்துள்ளது சீயப்பாறா நீர்வீழ்ச்சி. செயற்கையாக 7 படிகள் கொண்டுள்ளதைப் போலக் காட்சியளிக்கும் இந்த இயற்கை நீர்வீழ்ச்சி கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
shankar s.
சின்னக்கணல் நீர்வீழ்ச்சி
புனித தேவிகுளம் நதியிலிருந்து உருவாகும் சின்னக்கனல் நீர்வீழ்ச்சி, பசுமையான வனத்தில் சுற்றி மரங்கள் நிறைந்துள்ள நிலையில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி மூணாறிலிருந்து வெறும் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Jaseem Hamza
எப்படிச் செல்வது ?
எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் மூணார் மலப் பிரதேசம் உள்ளது. கொச்சினிலிருந்து 131 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக பயணித்தாலும் இப்பகுதியை அடையலாம். பொள்ளாச்சியில் இருந்து உடுமலைப்பேட்டை, சின்னார் வழியாக 113 கிலோ மீட்டர் பயணம் செய்தால் மலைக் காடுகளைன் இயற்கை எழில் காட்சிகளை ரசித்தபடியே இத்தலத்தை எளிதில் அடைய முடியும்.