இந்தியா பலதரப்பட்ட கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதால் இங்கு கோவில்களுக்கு பஞ்சமே கிடையாது. தமிழகத்தில் லட்சக்கணக்கான கோவில்கள் இருந்தாலும், இந்திய அளவில் வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது சென்று தரிசித்து விட வேண்டும் என சொல்லும் அளவிற்கு தனித்துவம் மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

காமக்யா கோவில்
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள நிலாச்சல் மலையில் அமைந்துள்ளது காமக்யா தேவி கோவில். சக்தி பீடங்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் இந்த தலம் பராசக்தியின் பிறப்பு உறுப்பு விழுந்த இடமாக கருதப்படுகிறது. அதனால் தான் அப்புபாச்சி மேளாவின் போது கோவில் மூன்று நாட்கள் மூடப்படுகிறது. அந்த நாட்கள் அம்மனின் மாதவிடாய் காலம் என நம்பப்படுகிறது.

பத்மநாபசுவாமி கோவில்
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் பத்மநாப சுவாமி கோவில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. உலகின் பணக்கார கோவிலாக இது கருதப்படுகிறது. பெருமாள் சயன கோலத்தில் இருக்கும் இக்கோவிலில் உள்ள கருவறைக்கு மூன்று கதவுகள் உள்ளன. முதல் கதவு வழியாக பெருமாளின் முகத்தையும், நடுக் கதவு வழியாக பெருமாளின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மாவையும், கடைசி கதவு வழியாக பெருமாளின் பாதங்களையும் தரிசனம் செய்ய முடியும்.
கைலாசநாதர் கோவில்
மகாராஷ்டிராவின் எல்லோராவில் அமைந்துள்ள குடைவரை கோவில் கைலாசநாதர் கோவில். மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு சான்றாக இந்த கோவில் சொல்லப்படுகிறது. நாட்டில் உள்ள மிக முக்கியமான சிவன் கோவில்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவில் பாரம்பரிய சின்னமாகவும், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த கோவில் முழுவதுமே ஒரே பாறையால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று வரை இந்த கோவிலின் கட்டிடக்கலை பற்றி எவராலும் விளக்கிக் கூற முடியவில்லை. இந்த கோவிலுக்கு வந்தாலே சிறப்பான ஒரு அதிர்வலைகளை நம்மால் உணர முடியும்.
கோனார்க் சூரியனார் கோவில்
ஒடிசா மாநிலம் கோனார்க்கில் அமைந்துள்ளது இந்த தனித்துவமான சூரியனார் கோவில். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட இக்கோவில் மிக நேர்த்தியான கட்டிடக் கலைக்கு சான்றாகும். இந்த கோவிலின் அமைப்பே தேர் வடிவத்தில் உள்ளதால் இங்கு சென்று பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கும்.

மீனாட்சி அம்மன் கோவில்
கட்டிடக்கலை, வேலைப்பாடுகள், நுணுக்கமான சிற்பங்கள், பழங்கால ஓவியங்கள் என பார்ப்பவரை வியக்க வைப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு தான் முதல் மரியாதை. உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் கிட்டதட்ட 3000 ஆண்டுகள் பழமையானதாகும். 33,000 சிற்பங்கள், 4000 தூண்கள் கொண்ட கோவில் இதுவாகும்.
பொற்கோவில்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அமைந்துள்ளது பொற்கோவில். சீக்கியர்களின் புனித தலமான இக்கோவில் இந்தியாவின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாகும். இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சென்று வழிபடலாம். இந்த கோவிலின் மேற்பகுதியில் அமைந்துள்ள குவிந்த மாடங்கள் சுத்தமான தங்கத்தால் ஆனதாகும்.

தஞ்சை பெரிய கோவில்
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாத வகையில் கட்டப்பட்ட தொழில்நுட்ப முறை இன்றைய நவீன தொழில்நுட்பங்களுக்கு சவால் விடுவதாகும். உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கம், நந்தி சிலை, அதிகமான சிவலிங்கங்கள் இந்த கோவிலில் தான் உள்ளன.
திருப்பதி வெங்கடேஷ்வர சுவாமி கோவில்
ஆந்திராவின் திருமலையில் அமைந்துள்ள வெங்கடேஷ்வர சுவாமி கோவில், வருடத்தின் அனைத்து நாட்களும் மிக அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாக உள்ளது. இங்குள்ள பெருமாள் சிலையின் தலைமுடி உண்மையான முடி என சொல்லப்படுகிறது. இந்த சிலையின் பின்புறம் எப்போதும் ஈரமாகவே இருக்குமாம். இங்குள்ள கோவில் கருவறையில் எரியும் விளக்கு எப்போது யாரால் ஏற்றப்பட்டது என தெரியவில்லை. ஆனால் இப்போது வரை இந்த விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதல் இடம் பிடிக்கும் கோவில் இது தான். பல அதிசயங்கள், ஆச்சரியங்களை கொண்டதாக இந்த கோவில் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications



