இந்தியா, எண்ணற்ற கலாச்சாரங்களுக்கும், பண்டிகைகளுக்கும், பாரம்பரியத்திற்கும் பெயர்பெற்றது. மேலும், இந்தியாவில்தான் சகல விதமான கோவில்களையும் பார்க்க முடியும்; விலங்குகளை, மனிதர்களை, ஏன் பேய்களைகூட வழிபடுகிறவர்கள் இருக்கிறார்கள் நம் நாட்டில். அப்படி, மனிதர்களுக்குத், தங்களின் ரசிகர்கள் கட்டிய கோவில்களைப் பார்க்கலாம்!
அமிதாப் பச்சன் கோவில், கொல்கத்தா
பாலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சனை தெய்வமாக வழிபடுகின்றனர் தெற்கு கொல்கத்தாவின் கோவில் ஒன்றில். இந்தக் கோவிலில், அமிதாப் பச்சன் புகைப்படங்கள், ஒரு ஜோடி ஷூக்கள், அவரின் சிலை ஆகியவை வைக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றி பாடல்கள் பாடப்படுகின்றன; கோவிலின் வாசலிலேயே ஜெய் ஸ்ரீ அமிதாப் என்று எழுதப்பட்டிருக்கிறது.
சோனியா காந்தி கோவில், தெலுங்கானா
பல வருட கனவான தெலுங்கானாவை உருவாக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், இக்கோவிலை கட்டியுள்ளனர். சோனியா காந்தியின் மிகப்பெரும் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.
நரேந்திர மோதி கோவில், ராஜ்காட்
300 மோதி ஆதரவாளர்கள் சேர்ந்து பண உதவி செய்து, குஜராத்தில் உள்ள ராஜ்காட்டில் மோதிக்கு கோவிலை கட்டியுள்ளனர். இந்தக் கோவில் கட்டி முடிக்க ஒரு வருடம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பு கோவில், திருச்சி
தமிழர்களைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம். எப்போது பாசமாய் இருப்பார்கள், எப்போது கூடி கும்மி அடிப்பார்கள் என்று எளிதாக கணிக்க முடியாது. குஷ்பு இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சின்னதம்பி சமயத்தில் ஆரம்பித்த இவர் புகழ் உச்சகட்டமாய், ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு போனது. 2006'இல் குஷ்பு, கற்பைப் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகி இந்தக் கோவிலை இடித்துத் தள்ளினர்.
எம்.ஜி.ஆர் கோவில், சென்னை
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று அவர் பாடியதற்கேற்ப இன்றும் பல லட்சம் ரசிகர்களின் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஆவடிக்குப் பக்கத்தில் இருக்கும் நாதமேடு என்ற இடத்தில் கலைவாணன் என்ற ரசிகரால் கட்டப்பட்டதுதான் எம்.ஜி.ஆர் கோவில். அடுத்த ஆண்டு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவிற்கு இப்போதே ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
நமீதா ஆலயம், திருநெல்வேலி
Photo Courtesy : Fotohari1
ரசிகர்களை மச்சான்ஸ் என்று அன்போடு அழைக்கும் நமீதா, பல இளைஞர்களின் கனவுக்கன்னி. தங்களின் ப்ரியமான நடிகைக்கு கோவில் இல்லாவிட்டால் நல்லாயிருக்காது என்று பல ரசிகர்கள் ஒன்றாககூடி முடிவெடுத்து நெல்லையில் நமீதாவிற்கு கோவில் கட்டினர். நமீதாவும் இதை வரவேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.