குண்டூர் நகரத்திற்கு தெற்கே சுமார் நான்கு மைல் தொலைவில் இந்த உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா அமைந்துள்ளது. ஏராளமான புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும் வகையில் இந்தப்பகுதியில் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன. இந்த உப்பலப்பாடு பறவைகள் சரணாலயத்தையும் அதன் அருகாமையிலுள்ள இடங்களையும் காண்போம் வாருங்கள்.
என்னவெல்லாம் பாக்கலாம்
பல அரியவகை பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் அருகி வரும் பறவையினங்களை இங்கு பார்க்கலாம். புள்ளி கூழைக்கடா மற்றும் வெளிநாட்டு வண்ணக்கொக்கு போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
புவி வெப்பமயமாதல்
சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையானது சமீபத்திய வருடங்களில் 12000த்திலிருந்து 7000 என்பதாக குறைந்து காணப்படுகிறது. இதற்கு ‘புவி வெப்பமயமாதல்' உட்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அழகிய பறவைகள் சுற்றுலா
இருப்பினும் இந்த சரணாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது. பல வெளிநாட்டு, தூர தேச புலம்பெயர் பறவைகளை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை பெறுவதற்காக பறவை ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.
எப்போது செல்லலாம்
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளன. இனப்பெருக்க காலம் என்பதால் இம்மாதங்களில் ஏராளமான புலம்பெயர் பறவைகளை இங்கு பார்க்க முடியும்.
கொண்டவீடு கோட்டை
குண்டூர் நகரத்தின் செழுமையான வரலாற்று பின்னணியின் அடையாளமாக இந்த கொண்டவீடு கோட்டை வீற்றுள்ளது. குண்டூர் எல்லைப்பகுதியில் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் உள்ளன. கொண்டவீடு கோட்டையானது ரெட்டி வம்ச மன்னர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
கட்டிடக் கலை
21 கட்டமைப்புகளை இந்த கோட்டை வளாகம் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்து காணப்பட்டாலும், வரலாற்று கால சித்திரங்களாக இவை பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. இந்த கோட்டையை சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காகவும் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர்.
சாகச பயணமும் ஆன்மீகமும்
இந்த ஸ்தலத்தில் மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இயற்கை அமைப்புகளும் காணப்படுகின்றன. கொண்டவீடு கோட்டைக்கு அருகிலேயே கோபிநாதர் கோயில் மற்றும் கதுளாபாவே கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அமைந்துள்ளன. கோட்டைக்கு செல்லும் வழியிலேயே மற்ற கோயில்களுடன் இவை இடம் பெற்றுள்ளன.
மிச்சங்கள்
மலை மீதுள்ள இந்த கோட்டைக்கு செல்லும் வாயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே சில குடியிருப்புகள் மற்றும் ஒரு பெரிய கூடம் போன்றவை வரலாற்றின் பிரமிப்பூட்டும் மிச்சங்களாக காணப்படுகின்றன.
கொடப்பகொண்டா
குண்டூர் நகரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் இந்த கொடப்பகொண்டா கிராமம் அமைந்துள்ளது. நர்சராவ்பேட் எனும் இடத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த கிராமத்துக்கு எளிதில் சாலை மார்க்கமாக சென்றடையலாம். கொண்டகவுரு என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இக்கிராமம் காலப்போக்கில் கொடப்பகொண்டா என்று மாற்றம் பெற்றுள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி மூன்று சிகரங்களுடன் காட்சியளிக்கும் ஒரு மலையும் அமைந்துள்ளதால் இது திரிகூடபர்வதம் என்ற பெயராலும் பிரசித்தமாக அழைக்கப்பட்டிருக்கிறது.
திரிகூடாச்சலம்
கிராமத்தை சுற்றிலும் பல மலைகள் காணப்பட்டாலும் இவற்றில் திரிகூடாச்சலம் அல்லது திரிகூடாத்ரி எனும் மூன்று சிகரங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளன. கிராமத்தின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்த மூன்று சிகரங்கள் தெரிகின்றன. இந்த சிகரங்களுக்கு பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கொடப்பகொண்டா கிரமாத்திற்கு அருகில் குத்திகொண்டா எனும் மற்றொரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமும் உள்ளது. இது தட்சிண காசி என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கொடப்பகொண்டாவுக்கு வருகைதரும் பயணிகள் இந்த குத்திகொண்டாவுக்கும் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications




