விவேகானந்தர் பாறை, கன்யாகுமரியில் மிக முக்கியமான சுற்றுலா தளம். விவேகானந்தர், கடலுக்குள் இருக்கும் இந்த பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்ததன் நினைவாக கட்டப்பட்டதுதான் விவேகானந்தர் நினைவு மண்டபம்.
Photo Courtesy : Bhawani Gautam
விவேகானந்தர் நினைவு மண்டபம், கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய பாறையின்மீது அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையிலிருந்து இங்கு செல்வதற்கு விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.
இந்த நினைவு மண்டபத்தில், ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம், தியான மண்டபம் என்று மூன்று பகுதிகள் உள்ளன.
ஸ்ரீபாத மண்டபம் இருக்கும் பாறைப் பகுதியில்தான், பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ததாகவும், அதனால், இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக, இந்தப் பாறைக்கு ஸ்ரீபாதப் பாறை என்று பெயர் வந்தது. இதே பாறையில்தான், சுவாமி விவேகானந்தரும் ஞானம் பெற்றார் என்றும் நம்பப்படுகிறது.
சபா மண்டபத்தில், விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை பார்ப்பவர் அனைவரையும் கவரும் தன்மை கொண்டது. இம்மண்டபம், இந்துக் கோவிற் கலையம்சங்களைக் கொண்ட 12 கருங்கல் தூண்களையும், பேலூர் இராமகிருஷ்ண ஆலயத்தின் விமான அமைப்பின் அம்சத்தையும் கொண்டுள்ளது. கருங்கல்லின் நேர்த்தி, பளபளப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது.
Photo Courtesy : Nikhil B
சபா மண்டபத்திற்கு அருகில் தியான மண்டபம் உள்ளது. சுற்றுலா பயணிகள் எந்தவித வெளிப்புற இரைச்சல், தொந்தரவு இல்லாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யலாம். இங்கு இருக்கும் பேரமைதி எப்பேர்பட்ட மன உளைச்சலையும் மாற்றும் வலிமை படைத்தது.
இந்தியாவின் இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாய் விளங்கும் சுவாமி விவேகானந்தரின் நினைவாக கன்னியாகுமரியில் எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவு மண்டபம், தமிழகத்தின் ஒரு பெருமைமிகு பொக்கிஷமாகும்.
Photo Courtesy : Nomad Tales
மேலும், இங்கு விவேகானந்தர் தொடர்பான பல மொழிகளின் புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகளும் இருக்கின்றன.