ஒரு நாட்டின் முதுகெழும்பு விவசாயம். அதற்கு அடுத்தப்படியாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் என்றே சொல்லலாம். உலகின் பெரும்பாலான நாடுகள் சுற்றுலா வாயிலாகவே, அந்நிய செலாவணி வருவாயை ஈட்டி வருகிறது.
அந்தவரிசையில், அண்டை நாடான இலங்கையும் ஈட்டி வருகிறது. உள்நாட்டு போர், கொரோனா தொற்று பாதிப்பு, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
இவற்றில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் அந்நாடு, இந்தியா போன்ற உலக நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகையை பன்மடங்கு அதிகரிக்கும் பல்வேறு முன் முயற்சிகளை, அந்நாட்டு சுற்றுலா துறை மேற்கொண்டு வருகிறது.

இந்தாண்டு (2024), 2.5 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருவர் என, அந்நாடு எதிர்பார்க்கிறது. நீங்களும் இலங்கைக்கு சுற்றுலா செல்ல 'பிளான்' பண்ணியிருக்கீங்கனா? அப்ப மறக்காம 'சாட்டர்டே நைட் ஃபீவர்' மார்க்கெட் போங்க...
என்ன சிறப்பு அம்சம் என்ன?
இலங்கை வட மாகாண பகுதியான யாழ்ப்பாணத்தில், வாரத்தின் சனிக்கிழமை தோறும் கூடுகிறது இந்த மார்க்கெட். அப்படி கூடும் இந்த மார்க்கெட்டை, சுற்றுலா செல்லும் நீங்கள் ஒரு முறையாவது கட்டாயம் பார்க்க வேண்டும்.
ஏனெனில், அங்குள்ள சந்தையில் தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு வைப்பவர்களின் அனைத்து தயாரிப்புகளும், 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. நேர்த்தியானது, அழகானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இயற்கையாக கிடைக்கும் பனை, வாழை நாரில், பர்னிச்சர், ஹோம் டெக்கார், கிட்சன் & டைனிங், பேக்ஸ் அண்ட் பாஸ்கட்ஸ் என, பல்வேறு வகையான கலைநயமிக்க பொருட்களை உள்ளூர் வியாபாரிகள் தயாரிக்கின்றனர். அவற்றை, இந்த மார்க்கெட்டில் விற்பனைக்கு காட்சி படுத்துகின்றனர்.
உள்ளூர் வியாபாரிகள் தயாரிக்கும் பொருட்களை ஒருங்கே ஓரிடத்தில் விற்பனைக்கு காட்சிப்படுத்தும் ஒரு முன் மாதிரியான திட்டத்துக்கு, 2019ல் விதை போட்டவர் பி.டெக்., பட்டதாரியான இளம் பெண் துவரகா பி பிரசாந்தன்.

'ஹேப்பி மார்க்கெட்' பற்றி அவர் கூறியதாவது:
உள்ளூர் வியாபாரிகள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் நுாறு சதவீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஹேப்பி மார்க்கெட் திட்டத்தை, 2019ல் தொடங்கினாலும், கொரோனா தொற்றால் முடங்கியது.
பின், 2021 ஆம் ஆண்டில் இருந்து முழு அளவில் செயல்பட தொடங்கியது. முதலில், உள்ளூர் வியாபாரிகளை ஒருங்கிணைப்பது சற்று சவாலாக இருந்தது. இன்றளவும் ஒரு சிலர் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்க தயங்குகின்றனர்.
'நைட் மார்க்கெட்டில்' பல்வேறு வகையான உள்ளூர் விற்பனையாளர்களை அடையாளம் காட்டுகிறோம். அவர்களின் நேர்த்தியான, தனித்துவமான தயாரிப்புகளை விற்பனைக்கு காட்சிப்படுத்துகின்றனர்.
உள்ளூர் தயாரிப்புகளை விற்பனைக்கு ஊக்குவிக்கும் அதே வேளையில், குறைந்த விலை மற்றும் உயர் தரமான தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கமாகும். தற்போது, ஹேப்பி மார்க்கெட் குழுமத்தில், 50 வியாபாரிகள் உள்ளனர்.

மறக்காம முடியாத அனுபவம்
ஒரு முறை சந்தையை கூட்டுவதற்கு, இந்திய ரூபாய் மதிப்பில் 76 ஆயிரம் வரை செலவாகிறது. உள்ளூர் வியாபாரிகள், அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட பிற விபரங்களை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
சனிக்கிழமை மட்டும் கூடும் இந்த சந்தைக்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் வியாபாரிகளின் தயாரிப்புகள் வாங்குவதோடு, இங்குள்ள உணவுகளையும் ருசிக்கலாம். அதோடு மட்டுமின்றி, கலாசாரம், கலை சார்ந்த நிகழ்ச்சிகளால், சனிக்கிழமை கூடும் இரவு சந்தை, உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.
தொழில் சார்ந்த பயிற்சிகளை அளித்து, வியாபாரிகளின் தயாரிப்பை உலகளவில் எடுத்து செல்லும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம். சந்தைக்கு வர முடியாதவர்கள், இணையதளத்தில் கிடைக்கும் குறிப்பிட்ட ஒரு சில தயாரிப்புகளை ஆர்டர் செய்து பெறலாம். மொத்த ஆர்ட்ர்கள் மட்டுமே வரவேற்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய துறையை முன்னெடுத்து செல்லும் ஒரு கருவியாக திகழ்ந்து வரும் ஈழத் தமிழ்ச்சியின் முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
சந்தை பற்றி:
சனிக்கிழமை தோறும் மாலை 4 மணி முதல் 10 மணி வரை நடக்கும் இந்த 'சாட்டர்டே நைட் ஃபீவர்' மார்க்கெட், யாழ்ப்பாணம் கோட்டை அருகே நடக்கும்.
மொத்த ஆர்டர்கள் மற்றும் சந்தை பற்றிய விபரங்களை அறிய...
மின்னஞ்சல் முகவரி : [email protected] / +94774083570/0778960281/ 0774083570



Click it and Unblock the Notifications



