உலகின் பல நாடுகளிலிருந்தும், பல இன மக்கள் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் வந்து குடியேறியுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரெஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரியில் இன்றும் பிரெஞ்சு தேசத்து மக்கள் வசித்து வருகின்றனர்.
அதேபோல போரினால் பாதிக்கப்பட்டும், மற்ற காரணங்களினாலும் அகதிளாக பல லட்சம் மக்கள் இந்தியாவில் வந்து தஞ்சம் அடைந்தனர். அவர்களும் காலப்போக்கில் இந்தியாவிலேயே வசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இவைபோல தங்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து தற்போது இந்தியாவில் எங்கெங்கு இந்த வெளிநாட்டு மக்கள் வாழ்கின்றனர் என்று பார்ப்போம்.
திபெத்திய மக்கள்
ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மஷாலாவில் உள்ள மெக்லியோட்கஞ்ச் எனும் பகுதியில் இன்று பல்லாயிரக்கணக்கான திபெத்திய மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்து இன்று இப்பகுதியில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக திபெத்திய தலைநகர் லாசாவை குறிக்கும் விதமாக 'குட்டி லாசா' என்றே மெக்லியோட்கஞ்ச் அழைக்கப்படுகிறது. இங்கு குடியேறிய பின் திபெத்திய மக்கள் ஏராளமான புத்த மடலாயங்களை மெக்லியோட்கஞ்ச்சில் கட்டியுள்ளனர். இந்த மடாலயங்களுடன் இயற்கை அழகும் மிக்க மெக்லியோட்கஞ்ச் பகுதி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
படம் : Liz Highleyman
சீன மக்கள்
கொல்கத்தாவின் கிழக்கு பகுதியில் உள்ள சைனா டவுன் என்ற பகுதியில் எண்ணற்ற சீனமக்கள் வசித்து வருகின்றனர். ஒரு காலத்தில் 20,000 சீன மக்கள் வசித்து வந்த இந்தப் பகுதியில் தற்போது 2000 சீனர்களே காணப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சீன ரெஸ்டாரண்ட்கள் ஆகியவற்றிலேயே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் பாரம்பரிய சீன உணவை சுவைக்க ஏற்ற இடமாக சைனா டவுன் திகழ்வதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சைனா டவுன் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
படம் : Suvechchha
யூதர்கள்
கி.மு 700-ஆம் நூற்றாண்டு காலத்திலேயே வணிகம் மற்றும் தொழில் நோக்கங்களுடன் கொச்சி வந்த யூதர்கள் காலப்போக்கில் கொச்சியின் முக்கிய கலாச்சார அங்கமாகவே மாறிவிட்டனர். அப்போதைய ஆட்சியாளர்களால் இவர்களுக்கு தனி குடியிருப்புப்பகுதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவே இப்போது ‘ஜ்யூ டவுன்' அல்லது யூத நகர்ப்பகுதி என்று அழைக்கப்படுகிறது. டச்சு அரண்மனை மற்றும் பரதேஸி எனப்படும் சைனகாக் யூத தேவாலயம் இரண்டும் இப்பகுதியில் பார்க்கவேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
பிரெஞ்சு மக்கள்
தென்னிந்தியாவில் இன்றளவில் 6500 பிரெஞ்சு மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 5500 பேர் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக பாண்டிச்சேரியின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக பிரெஞ்சு இருந்து வருகிறது.
படம் : Sarvodaya Shramadana
ரோஹிங்க்யா மக்கள்
ரோஹிங்க்யா மக்கள் என்பவர்கள் மியான்மர் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து தற்போது இந்தியாவில் வசித்து வரும் இஸ்லாமிய பழங்குடி மக்கள். இவர்கள் டெல்லி, காஷ்மீர், ஹைதராபாத், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.
படம் : DANIEL JULIE