பயணம் என்பது வெறும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று சுற்றிப் பார்த்து, செல்ஃபிக்களை எடுத்துவிட்டு வருவது மட்டுந்தானா ? இதைத்தாண்டி பயணம் என்ன கற்றுக் கொடுக்கிறது ? இதற்கு சரியான பதில் : நம் நாட்டின் மிகப்பெரும் தலைவர்கள் வாழ்க்கையிலிருந்தே எடுக்கலாம்.

Photo Courtesy : Maheswara Subramanian
காந்தி, பெரியார், பாரதி, அம்பேத்கர், நேரு. இவர்கள், இளவயதில் மேற்கொண்ட பயணங்கள், அதில் ஏற்பட்ட திருப்புமுனை சம்பவங்கள், இவர்களின் வாழ்க்கையவே மாற்றியமைத்தது.
காந்தி, ஒரு ரயில் பயணத்தின்போது, நிறவெறியால் வெளியேற்றப்பட்டார்.
பாரதி, காசியில், முதன் முதலாக தீண்டாமையை, பால்ய வயது விதவைகளின் கொடுமையைப் பார்க்கிறார்.
பெரியாரும், காசியில், தான் பிராமணர் அல்லாத காரணத்தால் உண்ண உணவுகூட கிடைக்காமல் எச்சில் இலைகளை எடுத்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
தன்மானத்தை உடைக்கிறது
பிரயாணம் செய்யும் முதல் வேலை: உங்கள் தன்மானத்தை உடைக்கிறது. நீங்கள், உங்கள் ஊரில் எத்தனை பெரிய ஆளாய் இருந்தாலும், சில கி,மீகளைத் தாண்டிச் சென்றால் உங்களை யாருக்கும் தெரியாது. உங்களின் செல்வாக்கு அங்கு எடுபடாது. விளைவு: நீங்கள் உங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து பலரை அணுகவேண்டும். அவர்கள், உங்களைவிட அந்தஸ்த்தில் குறைவாய் இருந்தாலும். பயணம், உங்களை எல்லோரையும் அரவணைத்துப் போக கற்றுக் கொடுக்கிறது.
மன அழுத்தம் விடுபடுகிறது
உங்கள் அன்றாட வாழ்வின் எரிச்சலை, தினசரி சாவி கொடுத்த பொம்மையாய் செய்யும் வேலைகளை விடுவிக்கிறது. ஒரு புதுப்பயணம், புதிய மனிதர்கள், சக பயணிகள், புது ஊர் எல்லாம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாது. எல்லாமே எப்படி இருக்கப் போகிறது என்று நினைக்கும்போதே ஒரு பயம் கலந்த உற்சாகம் பிறக்கும்.

Photo Courtesy : Maheswara Subramanian
அகப்பார்வையை விரிவாக்குகிறது.
இந்தயா ஒற்றை மொழி, மதம், கலாச்சாரம் கொண்ட தேசமல்ல. நம் தேசத்தின் பலம், பலவீனம் இரண்டுமே இதுதான். இதைப் புரிந்துகொள்ள நீங்கள் பயணப்பட வேண்டும். பயணம் உங்களுக்கு புதிய மனிதர்களை, புதிய மொழியை, புதிய கலாச்சாரத்தை அறிமுக செய்து வைக்கிறது. இந்தியா எத்தனை பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை புரிய வைக்கிறது; பெருமைப் பட வைக்கிறது.
புது நம்பிக்கையை கொடுக்கிறது.
முற்றிலும் புதிய சூழலில்; நீங்கள் எல்லாவற்றையும் திட்டமிட வேண்டும்; புதிய இடத்திற்கு தப்பித் தவறி பலரிடம் வழி கேட்டு, இப்போதுள்ள சூழலில் GPS'இல் தேடி, புதிய மொழியை அரை குறையாய் கற்றுக் கொண்டு; நீங்கள் விரும்பும் உணவு கிடைக்காமல் கிடைக்கும் உணவை சாப்பிட்டு, நம்மூர் போல பேருந்து வசதி இல்லாமல், கால் கடுக்க பல கி.மீ அலைந்து என அனைத்தையும் நீங்கள் சாதுர்யமாய் அல்லது சொதப்பலாய் செய்து முடித்தாலும் உங்களுக்கு வரும் புது தைரியம் வாழ்க்கையில் எதையும் சமாளிக்கலாம் என்ற தெம்பு பிறக்கும்.

Photo Courtesy : Maheswara Subramanian
நினைவுகள்
இவையெல்லாவற்றிலும் மேலாக நீங்கள் மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த மனிதர்கள், சாப்பிட்ட உணவுகள், எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், உங்களுக்குள் ஏற்படும் தாக்கம் காலம் முழுதும் கூடவருவது. சில வருடங்கள் கழித்து, பழைய புகைப்பட ஆல்பங்களை புரட்டிப் பார்க்கும் அந்த நெகிழ்வான தருணங்கள் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காதது.
இதற்கு மேல் என்ன காரணங்கள் வேண்டும் பயணிக்க ? இன்றே முற்றிலும் ஒரு புதிய மாநிலத்திற்கு, ஒரு புதிய ஊருக்கு கிளம்புங்கள்; முடிந்தால் தனியாய்; நிறைய மனிதர்களைப் பாருங்கள்; நிறைய சிந்தியுங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகத்துடன் கிளம்புங்கள் ரயில் நிலையும் நோக்கி.



Click it and Unblock the Notifications



