இந்தியாவிலுள்ள புனித நதிகளுள் முக்கியமான இந்த யமுனை நதியானது உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலைப்பகுதியில் பந்தேர்பூச் எனும் மலைத்தொடர்களில் 6387மீ உயரத்திலுள்ள யமுனோத்ரி எனும் பனிமலையிலிருந்து உற்பத்தியாகிறது. இது தன் பாதையை தெற்கு நோக்கி அமைத்துக்கொண்டு விருந்தாவன் மற்றும் மதுரா வழியாக டெல்லியை கடக்கிறது.
விருந்தாவன் பகுதியில் ஓடும் யமுனை ஆற்றில் உள்ள கேசி காட் எனும் படித்துறை ஒரு முக்கியமான புனித நீராட்டுத்துறையாக அறியப்படுகிறது. கேஷி எனும் அசுரனை வதம் செய்த பிறகு இந்த ஆற்றுத்துறையில் கிருஷ்ணர் நீராடியதாக சொல்லப்படுகிறது. மேலும் இங்கு நீராடினால் பாவங்கள் தொலைந்து மோட்சம் கிட்டும் என்றும் ஹிந்துக்கள் நம்புகின்றனர்.
இந்த இடத்தில் காட் எனப்படும் ஏராளமான படித்துறைகள் ஆற்றங்கரையின்மீது அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல்வேறு சடங்குகள் மற்றும் பூஜைகள் தினமும் நிகழ்த்தப்படுகின்றன. தினசரி தீபாரதனையும் இங்கு தவறாமல் நடத்தப்படுகிறது.