மர் தோமா சன்னதி அல்லது மர் தோமா போன்டிஃபிகல் சன்னதி என்றழைக்கப்படும் இது கொடுங்கல்லூர் நகரத்தின் மிகப்பழமையான வரலாற்று தேவாலயம் ஆகும். புனித தோமா வந்திறங்கியதாக நம்பப்படும் ஆழிக்கோட் எனும் இடத்தில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. கேரளப்பகுதியின் ஆதி கிறித்துவ வேர்களுடன் சம்பந்தப்பட்டுள்ள இந்த தேவாலயம் விசேஷமான ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இந்தோ பெர்ஷிய பாணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயத்தின் கட்டமைப்பில் கலையம்சமும் கைவினைத்திறனும் மிளிர்கிறது. புனித தோமாவோடு சம்பந்தப்பட்ட சில ஞாபகப்பொருட்கள் இங்குள்ள பீடத்தில் பாதுகாக்கப்பட்டு முக்கிய தினங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கும் வைக்கப்படுகின்றன.
புனித தோமாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒரு குறும்படம் ஒன்றும் இந்த தேவாலயத்தில் பார்வையாளர்களுக்காக திரையிடப்படுகிறது. மீண்டெழுந்து வரும் ஏசுவை நோக்கி தொழும் புனித தோமாவின் பிரம்மாண்ட சிலையொன்று இந்த தேவாலயத்தின் வாசலில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியக்கடற்கரையில் புனித தோமா வந்திறங்கும் காட்சியை சித்தரிக்கும் மற்றொரு அழகிய சுவரோவியத்தையும் இங்கு காணலாம். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி இந்த தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications