பியாஸ் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள இந்த தக்போ ஷெத்ருப்லிங் மோனாஸ்ட்ரி எனும் மடாலயம் இப்பகுதியில் உள்ள சிறிய மடாலயமாகும். இது 2005ம் ஆண்டில் தலாய் லாமாவால் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றிலும் பசுமையான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டிருக்கும் இந்த மடாலயம் குல்லுவிலிருந்து 10 கி.மீ தூரத்தில் பயணிகள் சுலபமாக சென்றடையும்படி அமைந்துள்ளது. இதில் வசிக்கும் திபெத்திய குருமார்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள இது உதவுகிறது.
தங்க முலாம் பூசப்பட்ட புத்தரின் ஓவியங்கள் மற்றும் தங்கா எனப்படும் புத்தர் உருவங்கள் வரையப்பட்ட திபெத்திய பட்டுத்துணி ஓவியங்கள் போன்றவற்றை இந்த மடாலயத்தின் சுவர்களில் பார்த்து ரசிக்கலாம். லாம்ரின் எனப்படும் பௌத்த சித்தாந்தத்தோடு தொடர்புபடுத்தப்படும் இந்த மடாலயம் தலாய் லாமாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.