இந்த அக்ஷர்தாம் கோயில் சனாதன ஹிந்து தர்மத்தை பின்பற்றும் ஸ்வாமிநாராயண் பிரிவுக்கான கோயிலாகும். இளஞ்சிவப்பு நிற மணற்பாறை கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலின் உள்ளே இந்த மார்க்கத்தை உருவாக்கிய ஸ்வாமிநாராயணின் தங்க முலாம் பூசிய சிலை வீற்றிருக்கிறது.
இது தவிர ஸ்வாமி குணாதிதானந்த் மற்றும் ஸ்வாமி கோபாலந்த் ஸ்வாமி ஆகியோரின் சிலைகளும் இந்த சிலையின் இரு புறமும் காணப்படுகின்றன.
அக்ஷர்தாம் கோயில் மூன்று தளங்களை உள்ளடக்கியிருக்கிறது. ஹரி மண்டபம் என்பது பிரதான தளமாகவும், விபூதி மண்டபம் மேல் தளமாகவும், பிரசாதி மண்டபம் தரைத்தளமாகவும் அமைந்துள்ளன.
ஏழு தூண்கள், 210 சாரங்கள், 25 குமிழ் மாட கோபுரங்கள் மற்றும் 8 ஜரோகாக்கள் ஆகியவற்றை இந்த கோயில் கொண்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் கலையம்சம் நிரம்பிய சிற்பப்பொறிப்புகள் காணப்படுகின்றன.
மேலும் இந்த கோயில் கட்டுமானத்தில் எங்குமே இரும்பு அல்லது வேறு உலோகம் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். கல்லில் வடிக்கப்பட்ட நுணுக்கமான சல்லடை சன்னல் அமைப்பு வேலைப்பாடுகளையும் இந்த கோயிலில் பார்க்கலாம்.
கோயில் வளாகத்தில் சனாதன ஹிந்து மார்க்கத்தின் வரலாறு மற்றும் இதர தகவல்கள் குறித்த காட்சிப்பட திரையிடல் தினமும் நடத்தப்படுகிறது. வேதங்கள், புராணங்கள் மற்றும் பழமையான ஹிந்து புனித நூல்களிலிருந்து முக்கிய கருத்துகள் இந்த திரைக்காட்சியில் எடுத்துக்காட்டப்படுகின்றன.
கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைவழிப்பாதை அமைப்பில் 356 தூண்கள் வீற்றுள்ளன என்பது ஒரு குறிப்பிடத்தக்க்க தகவலாகும். அறிஞர்கள் மற்றும் தத்துவ ஆர்வலர்கள் விரும்பும் வகையில் சமூக ஒற்றுமை குறித்த ஆராய்ச்சிக்கான ஒரு மையமும் இந்த கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.