அஹமதாபாத் விஜயத்தில் சிறப்பிடம் பெறும் ஒரு புனிதமான ஸ்தலமாக இந்த காந்தி ஆஷ்ரம் புகழ் பெற்றுள்ளது. மானுட வரலாற்றிலேயே அஹிம்சா வழியில் அரசியல் மாற்றத்தை உருவாக்கிட முடியும் என்று உலகிற்கு நிரூபித்த காந்திஜி இங்குதான் தனது முக்கியமான செயல்பாட்டு கேந்திரத்தை ஒரு ஆசிரம வடிவத்தில் 1917ம் ஆண்டில் உருவாக்கினார்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள தண்டி யாத்திரை இங்கிருந்துதான் துவங்கப்பட்டது. தற்போது காந்திஜியின் வரலாற்று நினைவுகள் மற்றும் ஞாபகார்த்த பொருட்கள் போன்றவற்றை தாங்கி நிற்கும் நினைவு ஸ்தலமாக இந்த காந்தி ஆஷ்ரம் (சபர்மதி ஆஷ்ரம்) வீற்றிருக்கிறது.
சுய தேவைகளை சுயமாக பூர்த்தி செய்து கொள்வது குறித்த தனது பரிட்சார்த்த முயற்சிகளை இந்த ஆசிரம வசிப்பிடத்தில் காந்திஜி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராட்டையில் நூல் நூற்பது, தறி நெய்வது மற்றும் காதி இயக்கத்தை பரப்புவது போன்ற செயல்பாடுகளில் அவர் இந்த ஆசிரமத்தில் வசித்தபடி ஈடுபட்டிருந்தார்.
முன்கூட்டியே பதிவு செய்துகொண்டால் இங்கு பார்வையாளர்களுக்கு காட்சி விளக்கம் அளிக்கும் வழிகாட்டியுடன் கூடிய ‘உள் வளாக சுற்றுலா சேவை’யும் வழங்கப்படுகிறது.
மஹான் நிவாஸ், உபாசனா மந்திர், ஹிருதய் குஞ்ச், வினோபா-மீரா-குடில், நந்தினி, உத்யோக் மந்திர், சோம்நாத் சாத்ராலயா, டீச்சர்ஸ் நிவாஸ் போன்ற அம்சங்களை இந்த ஆசிரம வளாகத்தில் பார்வையாளர்கள் காணலாம்.
காந்தி ஸ்மாரக் சங்க்ரஹாலயா எனும் அருங்காட்சியகம் மற்றும் காட்சிக்கூடத்தில் காந்திஜியின் கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை பார்க்கலாம். இங்குள்ள ஆவணக்காப்பகத்தில் பல நூல்கள், வாழ்த்து மடல்கள், புகைப்பட மூலங்கள், ஆவணங்கள் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.
ஹிருதய் குஞ்ச் எனும் குடில் மஹாத்மாவும் கஸ்தூரிபாவும் வசித்த இருப்பிடமாகும். வினோபா-மீரா-குடில் என்பது ஆச்சார்யா வினோபா மற்றும் மீராபென் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்திய இருப்பிடமாகும்.
உபாசனா மந்திர் என்பது ஆசிரம உறுப்பினர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யும் இடமாகும். இப்படி எல்லா அம்சங்களும் காந்தி ஆஷ்ரமத்தில் அவற்றுக்குரிய பிரத்யேக அடையாளத்துடன் அதே சமயம் காந்திஜியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாக வீற்றிருக்கின்றன.