சுவாமிநாராயண் எனும் மதநம்பிக்கைக்கான முதல் கோயிலாக உருவாகியிருக்கும் இந்த கோயில் 1822ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாகியிருக்கிறது.
ஆனந்தானந்த் ஸ்வாமி எனும் குருவால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்தக்கோயில் முழுக்க முழுக்க பர்மா தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டு கலையம்சம் நிரம்பிய மரச்சிற்ப அலங்கார குடைவுகளுடன் காட்சியளிக்கிறது.
சுவாமிநாராயண் ஸ்வாமி தனது கையாலேயே அமைத்திருக்கும் சிலைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் போன்றனவும் இந்த கோயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
பல்வேறு மதப்பிரிவுகளை சார்ந்த புனித நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தத்துவங்கள் இந்த கோயிலில் சிலைகள் மற்றும் சித்தரிப்புகளாக காணப்படுகின்றன.
பெண் சீடர்களுக்கான ஒரு பிரத்யேக பிரிவும் இந்த கோயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மதபோதனை மற்றும் சடங்குகளில் அவர்கள் ஈடுபடுவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
பழைய அஹமதாபாத் பகுதியின் சலிப்பூட்டும் தோற்றத்தை ஈடு செய்யும் வகையில் வண்ணமயமான தோற்றத்துடன் இது காட்சியளிக்கிறது. நர நாராயணா எனும் பிரதான கடவுள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.