தௌலத் கானா என்பது நீள்சதுர வடிவில் அமைந்துள்ள ஒரு அரண்மனையாகும். இது தற்சமயம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு முகலாய மற்றும் ராஜபுதன போர்க்கவசங்கள் மற்றும் கலையம்சம் கொண்ட சிலைகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1613ம் ஆண்டிலிருந்து 1616ம் ஆண்டு வரை இந்த அரண்மனை முகலாய பேரரசர்களான அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆகிய இருவரும் தர்க்கா ஷெரீஃப் ஸ்தலத்திற்கு விஜயம் செய்யும்போது தங்கும் இருப்பிடமாக பயன்பட்டுள்ளது.
இரண்டு கனமான சுவர்களால் சூழப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு வெளியே, “ ஆங்கிலேய தூதரான சர் தாமஸ் ரோ இந்த இடத்தில் பேரரசரால் வரவேற்கப்பட்டார்” எனும் வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்று காணப்படுகிறது.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வச்சிலைகள் மற்றும் முகலாய, ராஜபுதன போர்க்கவச உடைகள் ஆகியன இங்குள்ள முக்கிய அரும்பொருள் சேகரிப்புகளாகும். இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு காளி தேவி சிலையும் முக்கிய அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
1908ம் ஆண்டில் கர்சன் பிரபு மற்றும் சர் ஜான் மார்ஷல் ஆகியோரின் முயற்சியில் உருவான இந்த அருங்காட்சியகம் ‘மேகசின்’ என்ற பெயராலும் அறியப்படுகிறது. புஷ்கர், அதான் தின் கா ஜோப்ரா, பாஹேரா, பிசாங்கன், ஹர்ஷ்நாத்(சிகார்), பரத்பூர், சிரோஹி, அர்துனா மற்றும் ஓசியன் போன்ற தலங்களைப்பற்றிய அரிய பிரதிகள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இண்டஸ் பள்ளத்தாக்கில் மொகஞ்ச-தாரோ ஸ்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய அரும்பொருட்கள், உலோக வார்ப்புகள் மற்றும் அது தொடர்பான அரிய புகைப்படங்கள் ஆகியவையும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
இந்த மியூசியம் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை திறந்துள்ளது. வெள்ளிக்கிழமைய வார விடுமுறை நாளாகும். அரசு விடுமுறை நாட்களிலும் இது மூடியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நுழைவுக்கட்டணமாக இந்திய பயணிகளுக்கு 5 ரூபாயும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.