தெற்கு பெங்களூர் பகுதியில் அமைந்திருக்கும் கவி கங்காதேஷ்வரா கோயில், கவிபுரம் குகைக் கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் கருவறையினுள்ளே சூரிய ஒளி புகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வருடத்தில் ஒரு குறிப்பிட்ட கால பகுதியில் சுமாமி விக்ரகம் சூரிய ஒளி பட்டு ஜொலிக்கிறது. இந்த கட்டிடக்கலை அற்புதம் 9-ஆம் நூற்றாண்டில் ஒரு மிகப்பெரிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.123
ஆலயத்தின் சிறப்பு
கவி கங்காதேஷ்வரா கோயிலுக்கு மகர சங்கராந்தியின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கு காரணம் அந்த சமயத்தில்தான் கோயில் கருவறையிலுள்ள சிவலிங்கம் சூரிய ஒளி பட்டு ஜோதிமயமாய் காட்சியளிக்கும்.
அப்போது நந்தியின் கொம்புகள் வழிபுகும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுந்து சில மணிநேரங்கள் விக்ரகத்தை பிரகாசமாக வைத்திருக்கும். இதன் மூலம் நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்திலும், கட்டிடக்கலையிலும் எப்பேர்பட்ட வல்லுனர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கண்கூடாக புலனாகிறது.
கங்காதேஷ்வரா கோயிலில் சிவபெருமானை தவிர அக்னி பகவானுக்கும் தனியாக சன்னதி உள்ளது. இன்று கவி கங்காதேஷ்வரா கோயில் கர்நாடக தொல் வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஸ்தலங்கள், மிச்சங்கள் 1961-ன் சட்டப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் பசவனகுடி என்ற பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலை பெங்களூரின் எந்த பகுதியிலிருந்தும் மாநகராட்சி பேருந்துகள் மூலம் சுலபமாக அடைந்துவிட முடியும்.