பெங்களூரின் தெற்குப்பகுதியில் புகழ்பெற்ற இந்த லால் பாக் தாவரவியல் பூங்கா (botanical garden) என்றழைக்கப்படும் பிரமாண்ட பூங்காத்தோட்டம் (பார்க்)அமைந்துள்ளது. லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்’ என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது.
240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் 1000 வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள செடிகள் வாடாமல் இருப்பதற்கு நன்கு திட்டமிடப்பட்ட நுட்பமான நீர்ப்பாசன முறை உள்ளது.
தாமரை தடாகங்கள், பலவிதமான வடிவங்களில் புல் தரைகள், மலர்ப்படுக்கைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமையும் மலர்களுமாக காட்சியளிக்கும் இந்த பூங்காவில் வருடந்தோறும் மலர்க் கண்காட்சிகளும் முகாம்களும் நடத்தப்படுகின்றன. செடிகள் பராமரிப்பு, தாவர வகைகள் குறித்த தகவல்கள் விபரங்கள் போன்றவை அச்சமயத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க இந்த கண்காட்சிகளும் முகாம்களும் உதவுகின்றன. தினமும் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை இந்த பூங்கா திறக்கப்படுகிறது. பெங்களூரின் எல்லா முக்கிய பஸ் நிலையங்களிலிருந்தும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் இந்த பூங்காவிற்கு வருவதற்கு பஸ் வசதிகள் உள்ளன.
1856 ஆண்டு ஆங்கிலேய அரசால் அரசாங்க தாவரவியல் தோட்டமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த லால் பாக்கின் வளர்ச்சிக்குப்பின் பல ஆங்கிலேய அதிகாரிகளின் ஆர்வமும் உழைப்பும் உள்ளது. தற்போது லால் பாக் தாவரவியல் தோட்டம் மாநில அரசின் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. லண்டனில் உள்ள கிரிஸ்டல் பேலஸ் போன்று லால் பாக் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையில் வருடாந்திர மலர்க்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த பூங்காத்தோட்டத்தின் உள்ளே பீடபூமி போன்ற இயற்கையான பாறை அமைப்பு காணப்படுகிறது. லால் பாக் பாறை என்று அழைக்கப்படும் இது 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. லால் பாகிற்கு HMT நிறுவனம் பரிசாக வழங்கிய ஒரு பெரிய எலக்ட்ரானிக் மலர் கடிகாரமும் இந்த பூங்காத்தோட்டத்தின் நடுவில் உள்ளது. இந்த அற்புதமான பூங்காவில் கொஞ்ச நேரத்தை கழித்தபின், வித விதமான மலர்களையும், தாவரங்களையும், மரங்களையும் தரிசித்த மயக்க வைக்கும் அனுபவத்திற்கு பின் ‘நான் மனிதர்களை விடவும் இயற்கையை மிகவும் நேசிக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய மனோநிலைக்கு வருவீர்கள்.