பரத்பூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கியோலாடியோ தேசிய பூங்காவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். 250-ஆண்டுகளுக்கு முன்பு சுராஜ் மால் மகாராஜாவால் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா கியோலாடியோ கானா தேசிய பூங்கா என்ற பெயராலும் அறியப்படுகிறது.
இந்த பூங்கா பறவைகள் சரணாலயமாக மாற்றம் அடையும் வரை பரத்பூர் மகாராஜாக்கள் இங்கு வாத்து வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு 1982-ஆம் ஆண்டு இந்த பரத்பூர் பறவைகள் சரணாலயம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு, கியோலாடியோ கானா தேசிய பூங்கா என்று பெயரிடப்பட்டது. மேலும் 1985-ஆம் ஆண்டு இந்த பூங்காவை யுனேஸ்கோ உலக பாரம்பரிய ஸ்தலமாக அறிவித்தது.
கியோலாடியோ தேசிய பூங்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் தற்சமயம் 5 வகையான நிலநீர் உயிரினங்களும், 50 வகையான மீன் இனங்களும், 7 வகையான ஆமையினங்களும் வாழ்ந்து வருகின்றன. இதுதவிர இந்த பூங்கா 375-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இயற்கை வாழ்விடமாகவும் இருந்து வருகிறது.
கியோலாடியோ பூங்காவை தேடி உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பறவை இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் வந்து செல்கின்றன. எனவே அந்த சமயங்களில் நீங்கள் இங்கு வந்தால் கூர்வால் வாத்துகள், கிளுவை வாத்துகள், செம்பவள நிற வாத்துகள், கருவால் வாத்துகள் மற்றும் நீர்ப்பறவைகளான காட்டு வாத்துகள் போன்ற அரிய பறவை இனங்களை கண்டு ரசிக்கலாம்.
இவைகளோடு பழுப்பு மஞ்சள் நிறக்கழுகுகள், சேற்றுப் பூனைப் பருந்து, வல்லூறுகள் உள்ளிட்ட பறவைகளையும் இந்த பூங்காவில் அதிக அளவில் பார்க்க முடியும். மேலும் கருப்பு மான்கள், சிறு கொம்புடைய மான்கள், புள்ளி மான்கள், மலைபாம்புகள், சாம்பார் மான்கள் போன்ற விலங்குகளும் இங்கு வாழ்ந்து வருகின்றன.
பரத்பூர் நகரிலிருந்து பேருந்துகள் மற்றும் ரிக்ஷாக்கள் மூலம் கியோலாடியோ தேசிய பூங்காவை சுலபமாக அடைந்து விடலாம். அதோடு உங்களுக்கு தேவையான பட்சத்தில் பூங்காவை சுற்றிப் பார்க்க எலெக்ட்ரிக் வேன்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் பூங்காவை கால்நடையாக சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது. அதுமட்டுமல்லாமல் பூங்காவை சுற்றிப் பார்க்க சைக்கிள்களும் இங்கு வடைகைக்கு விடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications