மாங்காடு காமாட்சியம்மன் கோயில் சென்னையின் புறநகர்ப்பகுதியில் மாங்காடு எனும் இடத்தில் உள்ளது. இந்த கோயிலில் சக்தியின் ரூபமான காமாக்ஷி அம்மன் குடி கொண்டுள்ளார்.
புராணிகக்கதைகளின்படி, கைலாச மலையில் சிவனும் பார்வதியும் விளையாடிக்கொண்டிருக்கையில் தேவியின் கை சிவனின் கண்களை மூடிவிட்டது. உடனே உலகம் முழுதும் இருண்டு போனதாம்.
தன் தவறை உணர்ந்து சிவனிடன் மன்னிப்பை வேண்டினாராம். பூலோகத்தில் பிறந்து தவம் செய்யுமாறும் சிவன் கூறவே பார்வதி தேவியும் இந்த மாங்காடு ஸ்தலத்தில் அவதரித்து பஞ்சாக்னி மூட்டி தவம் இருந்துள்ளார்.
பின்னர் சிவபெருமான் பார்வதிதேவிக்கு அருள்பாலித்து அவரை காஞ்சிபுரத்தில் மணம் புரிந்துள்ளார். இந்த மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் பார்வதி தேவி இடது காலில் நின்று, இடது கையை தலைக்கு மேல் உயர்த்தியவாறு, மறுகையில் ஜெபமாலையுடன் தவக்கோலத்தில் ரௌத்திர பாவத்தோடு காட்சி அளிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.