மணிப்பூர் மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாகவும், மாவட்ட தலைநகரமாகவும் உள்ள இடம் தான் சூரசந்த்பூர். உள்ளூர் மொழியில் 'சாலைகள் இணையுமிடத்தில் உள்ள இடம்' என்று பொருள் தரும் 'லாம்கா' என்ற வார்த்தையை கொண்டு இந்த நகரம் அழைக்கப்பட்டு வருகிறது. மணிப்புரி மொழியில் 'லாம்' என்றால் பாதை என்றும், 'கா' என்றால் இணையும் இடம் என்றும் பொருளாகும். இந்த அழகிய நகரம் சிறிய மலைகள் மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது. மாநிலத் தலைநகரம் இம்பாலில் இருந்து 59 கிமீ தொலைவில் சூரசந்த்பூர் மாவட்டம் அமைந்துள்ளது.
சூரசந்த்பூரை சுற்றியிருக்கும் சுற்றுலா தலங்கள்
குகா அணைக்கட்டு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா தலம், டுய்புவோங் மற்றும் தாங்ஸமில் உள்ள பழங்குடியினரின் அருங்காட்சியகங்கள், ங்கலோய் நீர்வீழ்ச்சி ஆகியவை சூரசந்த்பூரில் இருக்கும் சில ஆர்வமூட்டக் கூடிய சுற்றுலா தலங்களாகும். ஷாப்பிங் சென்று வராமல் சூரசந்த்பூர் வரும் சுற்றுலாப் பயணம் நிறைவு பெறாது.
சூரசந்த்பூருக்கு வந்ததன் நினைவாக சில கைவினைப்பொருட்கள் மற்றும் தனித்தன்மையான உள்ளூர் கலைப் பொருட்களையும் நீங்கள் நினைவுப் பொருட்களாக வாங்கிச் செல்லலாம்.
கடந்த சில ஆண்டுகளாக இம்பால் வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாக சூரசந்த்பூர் உள்ளது. உள்நாட்டுக் கலகங்களால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள இந்த மாநிலத்தில் சூரசந்த்பூர் அமைதியான நகரமாக மற்றும் எல்லா இன மக்களும் வசிக்கும் இடமாகவும் உள்ளது.
எனவே தான், சூரசந்த்பூரில் சிம்டெ, பெய்டெ, காங்டெ, ஹ்மார், ஸோவ், வைய்பெய், ஸோவ் லுசெய் மற்றும் சுக்டெ (டெடிம்) ஆகிய இனத்தவர்கள் சூரசந்த்பூரில் ஒத்திசைவுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மக்களும், வாழ்க்கை முறையும்
சூரசந்த்பூர் மாவட்டம் முந்தைய காலங்களில் சில கிராமங்களின் தொகுப்பினை உடையதாகவே இருந்தது. விவசாயம் செய்வதே அவர்களுடைய முக்கியமான தொழிலாக இருந்து வந்தது.
இன்றும், விவசாயம் அவர்களுடைய வாழ்க்கை முறையின் முக்கியமான ஆதாரமாக இருந்த போதிலும், இம்மாவட்டம் இந்மாநிலத்தின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இன்று உள்ளது.
நெசவும், கால்நடை பராமரிப்பும் இம்மக்களின் பிற முக்கியமான தொழில்களாகும். போரினால் அழிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்ட சூரசந்த்பூர்
ஜப்பானியர்கள் இந்தியாவின் வட கிழக்கு பகுதிக்குள் நுழைந்த போது கடுமையான மோதல் நடந்த இடங்களில் ஒன்றாக சூரசந்த்பூர் இருந்தது. அந்த மோதல்களால் இந்நகரம் மிகவும் கடுமையான அழிவுக்குள்ளானது, ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே நன்றாக மீண்டும் புனரமைக்கப்பட்டு, மணிப்பூர் மாநிலத்தின் அமைதியான நகரமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது.
சூரசந்த்பூரை அடைவது எப்படி
சூரசந்த்பூருக்கு அருகில் இருக்கும் விமான நிலையமாக 59 கிமீ தொலைவிலிருக்கும் இம்பால் விமான நிலையம் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இரயில் மூலம் சூரசந்த்புருக்கு அருகிலிருக்கும் திமாபூர் அல்லது ஜிரிபாம் நகரங்களுக்கும் வந்து விட முடியும். இந்நகரத்தின் சாலைகள் மாநிலத்தின் பிற இடங்களுடன் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது.
சூரசந்த்பூருக்கு வருவதற்கு மிகவும் சிறந்த நாட்கள்
சூரசந்த்பூருக்கு வருவதற்கு மிகவும் சிறந்த நாட்களாக அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான நாட்கள் உள்ளன.