தாத்ரா மற்றும் நகர் ஹவேலி எனும் இந்த யூனியன் பிரதேசம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் சில்வாசா’வை தலைநகரமாக கொண்டு அமைந்துள்ளது. நகர் ஹவேலி’யானது குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயும் தாத்ரா ஒரு சில கிலோ மீட்டர்கள் வடக்கே குஜராத் மாநிலப்பகுதியிலும் அமைந்திருக்கின்றன. தமன் கங்கா ஆறு இந்த பிரதேசத்தில் பாய்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகள் இதன் கிழக்கு பகுதியில் எழும்பியுள்ளன. அரபிக்கடல் குஜராத் மாநிலத்தின் மேற்கெல்லையாக உள்ளதால் இந்த தாத்ரா - நகர் ஹவேலி பிரதேசம் நிலப்பகுதிகளால் சூழப்பட்டதாகவே காணப்படுகிறது.
இந்த யூனியன் பிரதேசம் 1783 – 1785ம் ஆண்டுகளில் போர்த்துகீசியர்களால் ஆக்கிரமிக்கப்படும்வரை மராத்தாக்களின் ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. அதிலிருந்து 150 ஆண்டுகளுக்கு 1954ம் வருடம் இந்திய தேசியவாதிகளால வெளியேற்றப்படும்வரை இது போர்ச்சுகீசியர்களால் ஆளப்பட்டிருக்கிறது.
1961ம் வருடம் இப்பகுதி ஒரு யூனியன் பிரதேசமாக அதிகாரபூர்வமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் போர்ச்சுகீசிய பாரம்பரியம் மற்றும் நாகரிகம் போன்றவை இன்றும் இப்பகுதியில் வேரூன்றியிருப்பதால் சுற்றுலாப்பயணிகளை கவரும் அம்சங்களில் இயற்கை எழிலோடு சேர்ந்து இந்த விசேஷமான கலாச்சாரப்பின்னணியும் ஒன்றாக விளங்குகிறது.
491 ச.கி.மீ பரப்பளவில் பரந்திருக்கும் தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசம் பல்வேறு இனத்தார் வசிக்கும் பிரதேசமாக காணப்படுகிறது. வார்லி, துப்லா, தோடியா மற்றும் கொங்கண் ஆகிய இனத்தை சேர்ந்த பூர்வகுடி மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
இதன் 40 சதவீத நிலப்பரப்பு அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. இதன் உள்ளே மேற்சொன்ன இந்த பூர்வகுடியினர் வசித்து வருகின்றனர்.
தாத்ரா & நகர் ஹவேலி’யின் முக்கிய சுற்றுலா அம்சங்கள்
முன்பே குறிப்பிட்டபடி தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசம் 150 வருடங்கள் போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்குள் இருந்துள்ளதால் அந்த தாக்கம் இந்த பிரதேசத்தின் உணவுப்பாரம்பரியம் கலாச்சாரம் போன்ற வற்றில் பிரதிபலிக்கிறது.
இங்குள்ள முக்கியமான அம்சமாக தி சர்ச் ஆஃப் அவர் லேடி பயட்டி எனப்படும் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் அமைந்திருக்கிறது. மக்கள் தொகையில் பெரும்பாலும் இந்துக்களே அதிகம் என்பதால் கோயில்களுக்கும் இங்கு குறைவில்லை.
சில்வாஸாவிலுள்ள பிந்த்ராபின் கோயில் இவற்றில் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் சுற்றுலாப்பயணிகள் சில்வாஸா நகரத்தில் தங்கி தாத்ரா & நகர் ஹவேலியை சுற்றிப்பார்ப்பதை விரும்புகின்றனர்.
ஏனெனில் இந்நகரம் விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக போக்குவரத்து வசதிகளை கொண்டிருப்பதோடு அதிகமான சுற்றுலா அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்நகரத்திலுள்ள ‘டிரைபல் கல்ச்சுரல் மியூசியம்’ எனும் பழங்குடி கலாச்சார அருங்காட்சியகம் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
பலவகையான முகமூடிகள், இசைக்கருவிகள், மீன்பிடிக்கும் கருவிகள் மற்றும் தத்ரூப சிலைகள் போன்றவற்றின் சேகரிப்புகளை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.
சில்வாசாவிலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள கான்வெல் எனும் இடத்தில் இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பி வழியும் மலைகள் அமைந்திருக்கின்றன. பசும்புல்வெளிகள் மத்தியில் பாரம்பரிய பாணியில் இங்கு பயணிகளுக்கான விடுதி வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இது தவிர, சில்வாசாவிலிருந்து 5 கி.மீ தூரத்தில் வனகங்கா எனும் அழகிய ஏரி ஒரு தோட்டப்பூங்காவோடு அமைந்திருக்கிறது. கான்வெல் சுற்றுலாத்தலத்திலிருந்து 20 கி.மீ பயணம் செய்தால் துதினி எனும் இடத்தில் தமன்கங்கா ஆற்றில் கட்டப்பட்டுள்ள மதுபன் அணைநீர்த்தேக்கத்தை காணலாம்.
ஹிர்வா வன் எனப்படும் ஒரு அழகிய பூங்காவும் பயணிகள் தவறவிடக்கூடாத அம்சமாகும். இதில் நீர்வீழ்ச்சிகள், பழமையான கற்சுவர்கள் மற்றும் பரந்த புல்வெளிகள் ஆகியவை காணப்படுகின்றன.
வண்ணமயமான பறவைகள், குரங்குகள், மலைப்பாம்புகள் மற்றும் முதலைகள் ஆகியவற்றைக்கொண்டுள்ள ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையும் சில்வாஸாவில் உள்ளது.
தாத்ரா & நகர் ஹவேலி பிரதேசம் காட்டுயிர் ரசிகர்களுக்கான பிரத்யேக பூமி என்றே சொல்லலாம். இங்கு வசோனா லயன் சஃபாரி எனும் காட்டுச்சுற்றுலா வனப்பகுதி பிரசித்தமாக உள்ளது.
இந்த வனப்பகுதியில் குஜராத் கிர் சரணாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிங்கங்கள் விடப்பட்டிருக்கின்றன. இது தவிர சட்மலியா டீர் பார்க் எனும் மான்கள் சரணாலயமும் சில்வாஸாவில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சில்வாஸாவிலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள கௌஞ்சா எனும் பழங்குடி கிராமத்திற்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.