இந்த வனகங்கா ஏரி தாத்ரா பூங்காவோடு ஒருங்கிணைந்த அம்சமாக சில்வாசாவிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நுழைவாயிற்பகுதியிலேயே அமைந்திருக்கிறது.
இப்பகுதியில் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக இந்த ஏரிப்பகுதி விளங்குகிறது. மரங்கள் அடர்ந்த இயற்கை சூழலை கொண்டிருக்கும் இந்த ஏரியில் துடுப்புப்படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் பயணிகள் ஈடுபடலாம். இதனை ஒட்டிய பூங்காவில் மரப்பாலங்கள், குடிசை வீடு அமைப்புகள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
பாலிவுட் சினிமாத்துறையினருக்கு பிடித்தமான படப்பிடிப்பு தளமாகவும் இந்த ஏரிப்பகுதி அறியப்படுகிறது. பல பிரல்யமான படங்களின் பாடல் காட்சிகள் இங்கு படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. எனவே பெரும்பாலான பார்வையாளர்கள் இந்த பூங்காவை முன்பே நாம் பார்த்திருக்கின்றோமோ என்று வியக்கின்றனர்.
காதலர்கள், தேனிலவுத்தம்பதியர், குடும்பங்கள் என்று பல தரப்பினரும் விரும்பும் ஒரு பசுமைப்பகுதியாக இந்த பூங்கா அமைந்திருக்கிறது. குடும்பத்தோடு வரும் சுற்றுலாப்பயணிகள் குழந்தைகளோடு படகுச்சவாரியில் ஈடுபட்டு மகிழ்கின்றனர். காதலர்களும் தம்பதிகளும் ஒதுக்குப்புறமாக அமைதியான உரையாடலில் ஈடுபடுகின்றனர்.
உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் நடைபாதைகளையும் இந்த பூங்கா கொண்டிருக்கிறது. தூய காற்றினை சுவாசித்தபடி அவர்கள் மலர்ச்செடிகளின் நடுவே ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பார்வையாளர்களுக்கு வசதியாக உணவகங்களும் இந்த பூங்கா வளாகத்தில் அமைந்துள்ளன.