மாதிரி பழங்குடி கிராமமாக அமைந்திருக்கும் இந்த கௌஞ்சா கிராமம் சில்வாசாவிற்கு தெற்கே சுமார் 40 கி.மீ தூரத்தில் மதுபன் அணைப்பகுதியில் தமன்கங்கா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது.
பசுமையான பள்ளத்தாக்குகள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலைச்சிகரங்கள் ஆகியவற்றால் இந்த கிராமம் சூழப்பட்டிருக்கிறது. இவை யாவும் சேர்ந்து இந்த கௌஞ்சா கிராமத்தை ஒரு கனவு பூமி போன்று ஜொலிக்க வைக்கின்றன.
இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் வார்லி மற்றும் குக்னா எனப்படும் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்கள். இயற்கையோடு இயற்கையாக ஒன்றி இவர்கள் வாழந்து வருவது ஒரு சுவாரசிய அம்சமாகும். பசுமையான மரங்கள் சூழ்ந்த சிறிய மண் குடிசைகளில் இவர்கள் வசிக்கின்றனர்.
பெண்கள் கூடைகளை சுமந்து செல்வதையும் ஆண்கள் கால்நடைகளை மேய்ப்பதையும் இங்கு பார்க்கலாம். பொதுவாக விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ள இவர்கள் ஓய்வு நேரத்தில் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் நடனம், இசை போன்றவற்றில் ஈடுபடுவது ஆகியவற்றை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இங்கு வசிக்கும் பழங்குடி இனத்தார் வில் அம்பு போன்ற கருவிகளை தயாரிப்பதற்கு பெரும்பாலும் மூங்கிலையே பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்களில் அழகுப்பொருட்கள் தயாரிக்க இவர்கள் மரக்காகிதக்கூழ் பயன்படுத்துகின்றனர்.
இவர்களது கலைப்பாரம்பரியம் மற்றும் அறுவடைக்கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், பிறப்பு இறப்பு சடங்குகள் போன்ற யாவற்றிலும் முழுக்க முழுக்க வார்லி பழங்குடி இனத்தின் கலாச்சாரம் பொதிந்துள்ளது. இந்த கிராமத்தில் பயணிகள் பழங்குடி இன பெண்களால் சமைக்கப்படும் உணவு வகைகளையும் ருசித்துப்பார்க்கலாம்.