நம்கியால் இன்ஸ்டிடியூட் ஆஃப் திபெத்தாலஜி எனப்படும் இந்த திபத்திய அருங்காட்சியகம் திபெத்திய கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகளை ஆதரித்து வளர்த்து வருகிறது. திபெத்திய மரபு, மதம்,மொழி, கலை மற்றும் பண்பாடு தொடர்பான அம்சங்களில் இது கவனம் செலுத்தி வருகிறது. இது 1958ம் ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது.
இந்த மையத்தில் லெப்ச்சா, திபெத்தியன் மற்றும் சம்ஸ்கிருத நூல்கள், கலைப்பொருட்கள், தங்கா’க்கள் மற்றும் சிலைகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 200 பௌத்த நாணய சேகரிப்புகளையும் இது கொண்டுள்ளது. அரிய சிக்கிம் பிரதேச புகைப்படங்களை தேடி தொகுத்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இம்மையம் ஈடுபட்டிருக்கிறது.
பாரம்பரியமான திபெத்திய பௌத்த மரபுப்படி கட்டப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியக மையம் அற்புதமான கட்டிடக்கலை அழகுடன் காட்சியளிக்கின்றது. இது பல அழகிய சுவர் சித்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வளாகத்துக்கு அருகிலேயே கடைசி சிக்கிம் மன்னரின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் பூங்கா ஒன்றும் உள்ளது. இம்மன்னரின் அற்புதமான வெண்கலச் சிலையை பூங்காவில் பயணிகள் பார்க்கலாம்.
மத்திய காங்க்டாக் நகரத்தின் தென்பகுதியில் தேவ்ரோலி எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த திபெத்திய மையம் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்களுக்கு திறக்கப்படுகிறது. நுழைவுக்கட்டணமாக 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.