காங்க்டாக் நகரம் சிக்கிம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மலை நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 1437 மீட்டர் உயரத்தில் இமாலயத்தின் கிழக்குப்பகுதி மலைகளான ஷிவாலிக் மலைத்தொடர்களில் இந்நகரம் வீற்றிருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்பி விஜயம் செய்யும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. என்ச்சே மடாலயம் 1840ம் ஆண்டில் இங்கு கட்டப்பட்டதிலிருந்து இது ஒரு முக்கியமான பௌத்த யாத்ரீக ஸ்தலமாக விளங்கி வந்திருக்கிறது.
18ம் நூற்றாண்டிலிருந்தே ஒரு முக்கிய நகரமாக இருந்து வரும் இந்நகரம் 1894ம் ஆண்டில் அப்போதைய சிக்கிம் அரசரான துடோப் நம்கியால் என்பவரால் தலைநகரமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டுக்கு பிறகும் சிக்கிம் மாநிலம் ஒரு தனி முடியரசாக இந்த காங்க்டாக் நகரை தலைநகரமாக கொண்டு இருந்து வந்திருக்கிறது. பின்னர் 1975ம் ஆண்டு சிக்கிம் மாநிலம் இந்தியாவின் 22வது மாநிலமாக இணைந்தது.
இன்றைய காங்க்டாக் நகரமானது பல பெருமைக்குரிய அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு சிக்கிம் பகுதியின் தலைநகரமாகவும், முக்கியமான சுற்றுலா கேந்திரமாகவும் இது மாறியுள்ளது.
குறிப்பாக பௌத்த மரபுகளை பாதுகாக்கும் கலாச்சார கேந்திரமாக இது திகழ்கிறது. பல பௌத்த மடாலயங்கள் மற்றும் ஆன்மீக கல்வி நிலையங்கள் இங்கு நிரம்பியுள்ளன. திபெத்திய கலாச்சாரத்தை போதிக்கும் மையங்களும் இங்கு காணப்படுகின்றன.
காங்க்டாக் நகரத்தின் வரலாறு
சிக்கிம் மாநிலத்தில் முக்கிய நகரங்கள் உட்பட பெரும்பாலும் எல்லா நகரங்களுமே சரியான வரலாற்று ஆதாரங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. காங்க்டாக் நகரத்திற்கும் அதிகம் வரலாற்றுக்குறிப்புகள் ஏதுமில்லை.
எனினும் ஹெர்மிடிக் காங்க்டாக் மடாலயம் கட்டப்பட்ட 1716ம் ஆண்டிலிருந்து இந்நகரம் உருவாகியதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல், என்ச்சே மடாலயம் இந்நகரில் கட்டப்படும் வரை இது அதிகம் வெளியுலகத்தால் அறியப்படாமலே இருந்து வந்திருக்கிறது. 1894ம் ஆண்டில் தலைநகரமாக ஆக்கப்பட்டபின்பு இது வெகுவாக வளர்ந்து வந்திருக்கிறது.
காங்க்டாக் மலைநகரம் பல்வேறு இயற்கைப் பேரழிவுகளையும் அதிக அளவில் சந்தித்து வந்துள்ளது. 1977ம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு அவற்றில் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் 38 பேர் மரணமடைந்ததோடு இப்பகுதியில் இருந்த பல கட்டிடங்களும் பெரிய அளவில் சேதமடைந்தன.
புவியியல் அமைப்பு
கடல் மட்டத்திலிருந்து 1678 மீட்டர் உயரத்தில் இமாலயத்தின் அடிவார மலைப்பகுதிகளில் அமைந்துள்ள இந்த மலைநகரத்தின் ஒரு சரிவில் கவர்னர் மாளிகையும் மறுபுறச்சரிவில் புராதன அரண்மனையும் கம்பீரமாக வீற்றுள்ளன.
ரோரோ சு மற்றும் ராணிகோலா எனும் ஓடைகள் முறையே கிழக்கும் மேற்கும் காங்க்டாக் நகரத்தை சூழ்ந்துள்ளன. நகரத்துக்கு தெற்கே ஓடும் ராணிபால் ஆற்றில் இந்த இரு ஓடைகளும் கலக்கின்றன.
காங்க்டோக் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் இதர மலைச்சரிவுகள் அடிக்கடி நிலச்சரிவை சந்திக்கும் இயல்பை கொண்டுள்ளன. பிரிகாம்பிரியன் பாறைகள் எனப்படும் தகட்டு அடுக்குகளை கொண்ட மெல்லிய பாறைவகைகளால் இம்மலைகள் உருவாகியிருப்பதே இதற்கு காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் ஓடைகளின் நீரோட்டம் மற்றும் செயற்கைக்கழிவு கால்வாய் அமைப்புகளும் இது போன்ற நிலச்சரிவுகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. உலகிலேயே 3-வது உயரமான மலைச்சிகரமான கஞ்சன் ஜுங்கா சிகரத்தை இந்த காங்க்டாக் மலைநகரத்தின் மேற்குப்புறத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம்.
பருவ நிலை
சுற்றுலாப்பயணிகள் வருடத்தின் எல்லா மாதங்களிலும் காங்க்டாக் நகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். எப்போதுமே இனிமையான இதமான சூழலை கொண்டிருப்பது இந்நகரத்தின் சிறப்பம்சமாகும்.
மழைக்காலத்தை சார்ந்திருக்கும் மலைப்பிரதேச உபவறண்ட பருவநிலையை இது பெற்றிருக்கிறது. கோடை, குளிர், மழை, வசந்த காலம், இலையுதிர்காலம் ஆகிய பருவங்கள் இப்பகுதியில் நிலவுகின்றன.
குளிர்காலத்தில் கடும் குளிருடன் காணப்படும் காங்க்டோக் பகுதி 1990, 2004, 2005 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் மிக அதிகமான பனிப்பொழிவையும் பெற்றுள்ளது. மேலும் இந்நகரம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் புகை மூட்டத்துடன் காட்சியளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காங்க்டாக் மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்
காங்க்டாக் பகுதியின் கலாச்சாரமானது மிக தனித்தன்மையான அழகை யாவற்றிலும் கொண்டுள்ளது. தீபாவளி, துஷேரா, ஹோலி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இங்கு வசிக்கும் திபெத்திய மக்களும் தங்களது புது வருடப்பிறப்பை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தின்போது கொண்டாடுகின்றனர். லோசார் என்று அழைக்கப்படும் இந்த திருநாளின்போது அவர்கள் ‘பேய் நடனம்’ எனும் பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்கின்றனர்.
வேறு பல உள்ளூர் பண்டிகைகளும் இங்கு மக்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. லெப்ச்சா மற்றும் புதியா இனத்தாரும் இங்கு தங்களது புது வருடப்பிறப்பை ஜனவரி மாதத்தின்போது கொண்டாடுகின்றனர்.
மகர சங்கராந்தி மற்றும் ராம நவமியும் இங்கு சிறப்பாக அனுஷிக்கப்படுகிறது. இவை தவிர த்ருப்கா தேஷி, தலாய் லாமா பிறந்த நாள், சொத்ருல் டுச்சன், புத்த ஜயந்தி, லூசாங், சாகா தவா, லாபாப் டூயெச்சன் மற்றும் பும்ச்சு ஆகிய திருவிழாக்களும் காங்க்டோக் நகர மக்களால் கொண்டாடப்படுகிறது.
காங்க்டாக் நகரத்தின் உணவுச்சுவை
மோமோ எனும் முக்கியமான உணவுப்பண்டத்தை காங்க்டாக் நகரத்தில் பயணிகள் சுவைத்துப்பார்க்கலாம். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது காய்கறிகள் போன்றவை பொதிக்கப்பட்ட இந்த கொழுக்கட்டை போன்ற பண்டம் ஆவியில் வேக வைத்து சமைக்கப்படுகிறது.
வா-வாய் எனும் மற்றொரு உணவுப்பண்டமும் இப்பகுதியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. இது நூடுல்ஸ் வகையை சேர்ந்ததாகும். துப்கா, சௌமேய்ன், தந்துக், ஃபக்து, வாண்டன் மற்றும் கியாதுக் போன்ற இதர நூடுல்ஸ் உணவுவகைகளையும் இங்கு சுவைத்துப்பார்க்கலாம்.
சிக்கிம் மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை வருடத்திற்கு ஒரு முறை டிசம்பர் மாதத்தில் உணவுத்திருவிழா ஒன்றையும் காங்க்டாக் நகரத்தில் நடத்துகிறது. இந்த் திருவிழாவின்போது அமைக்கப்படும் உணவு அங்காடிகளில் சிக்கிம் பகுதியின் எல்லா பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்படுவது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் நடனம் மற்றும் இசை போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் அச்சமயம் நிகழ்த்தப்படுகின்றன. காங்க்டாக் நகரத்தில் எம்.ஜி மார்க் பகுதியில் உள்ள டைட்டானிக் பூங்கா வளாகத்தில் இந்த உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.
காங்க்டாக் மக்கள்
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்பின்படி காங்க்டாக் மக்கள் தொகையானது 98658 எனும் எண்ணிக்கையில் உள்ளது. இதில் 53 சதவீதம் ஆண்களும் 47 சதவீதம் பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஆங்கிலேய ஆட்சியின்போது இங்கு குடியேறிய இந்திய-நேபாளி பூர்வகுடியினரே இங்கு அதிகம் வசிக்கின்றனர். உள்ளூர் லெப்ச்சா மற்றும் புதியா இனத்தாரும் இங்கு வசிக்கின்றனர்.
இவர்களோடு, புலம் பெயர்ந்த திபெத்திய இனத்தாரும் இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தொகையில் 82.17 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இந்திய தேசிய அளவில் சராசரி எழுத்தறிவு சதவீதம் 74 என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மனம் மயக்கும் சுற்றுலா அம்சங்கள்
சிக்கிம் மாநிலத்தின் தலைநகராக விளங்குவதால் காங்க்டாக் நகரம் பல்வேறு சுவாரசியமான சுற்றுலா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. என்ச்சே மடாலயம், நாதுல்லா பாஸ் (கணவாய்ப்பாதை), நம்கியால் இன்ஸ்டிடியூட் ஆஃப் திபெத்தாலஜி, டோ ட்ருல் சோர்ட்டென், கணேஷ் தோக், ஹனுமான் தோக், ஒயிட் வால், தி ரிட்ஜ் கார்டன், ஹிமாலயன் ஜூ பார்க், எம்.ஜி. மார்க் மற்றும் லால் பஜார் மற்றும் ரும்தெக் மடாலயம் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.