சிக்கிமின் தலைநகரமான காங்டாக்கிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகள் புடைசூழ அழகாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது ரும்தேக் நகரம். இந்த இடம் இங்குள்ள ரும்தேக் மடத்திற்காக சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்று விளங்குகிறது. அதோடு இந்த மடம் திபெத்திய புத்த மத மக்களுக்கு ஒரு முக்கிய ஸ்தலமாக விளங்குகிறது.
இந்த இடத்தை அடைய சிக்கிமிலுள்ள பல கிராமங்களையும் விவசாய நிலங்களையும் கடந்து செல்ல வேண்டும். ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை விவசாய நிலங்களில் வளர்ந்து நிற்கும் நெல் பயிர்களை காணும் போது ஒரு பச்சை கம்பளத்தை விரித்த உணர்வை ஏற்படுத்தும். அறுவடை காலமான அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை இந்த நிலங்கள் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.
பனி படர்ந்த மலை சிகரங்களுடன், பச்சை பசுமையுடன் காட்சி தரும் மலைகளுடன் இருக்கும் இந்த இடத்தை கண்டு கழிக்க இரண்டு கண்கள் போதாது. ரும்தேக் நகரத்தில் சுற்றிப் பார்க்க பல இடங்களும் அதற்கான வசதிகளும் உள்ளன.
அதற்கு அருகில் இருக்கும் இடங்களுக்கும் ஒரு நாள் பயணமாக சுற்றுலாவும் சென்று வரலாம். தீரச்செயல் விரும்பிகளுக்கு படகு விளையாட்டும், நடைபயணம் மேற்கொள்ளும் வசதிகளும் உள்ளன.
ரும்தேக்கின் மிக முக்கிய ஈர்ப்பாக அமைவது ரும்தேக் மடம். இந்த மடம் ஒரு மலை உச்சியில் உள்ளது. இங்கிருந்து காங்டாக்கை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம். உச்ச காலத்தில் இந்த மடத்திற்கு பல புத்த மத பக்தர்கள் வருவதால், இந்நேரத்தில் இங்கு வந்தால் புத்த மத சடங்குகளை நாம் காண நேரிடலாம்.
ரும்தேக்கின் மற்றொரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது ஜவஹர்லால் நேரு தாவரப் பூங்கா. இந்த பூங்கா ரும்தேக் மடத்திற்கு மிக அருகில் தான் அமைந்துள்ளது.
இங்கு பல வகை செடிகளையும் இமயமலையில் பூக்கும் பூக்களையும் காணலாம். இந்த பூங்காவை சிக்கிம் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் காட்டிலாக்கா பராமரித்து வருகிறது.